வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 38
விரட்டிப்பிடித்துக் கொன்று குவித்தனர். பால்மணம் மாறாப் பாலர்களைக் கல்லில் மோதிக் கொன்றார்கள். விருத்தர்களின் கழுத்தில் கல்லைக் கட்டி வால்கா நதிப் பிரவாகத்தில் அமிழ்த்திக் கொன்றார்கள். அவர்களின் குடிசைகளிலும் சாமான்களை அப்புறப்படுத்திவிட்டுப் பாக்கியுள்ள குழந்தைகள், பெண்கள் யாவரையும் குடிசைக்குள் அடைத்து நெருப்பை வைத்தார்கள். ஜோதிமயமாய் எரியும் நெருப்பின் நடுவே முனகும் அவர்களின் தீனக்குரலைக் கேட்டு இவர்கள் ஆர்ப்பரித்தார்கள். பிறகு அக்னி பகவானுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள். எதிரிகள் சேகரித்து வைத்திருந்த காய்கனிகள், மாமிசம், மது இவற்றால் அக்னி தேவனையும் தங்களையும் திருப்தி செய்து கொண்டனர். தலைவி திவா ரொம்ப மகிழ்ச்சியோடிருக்கிறாள். இன்றைய யுத்தத்திலே அவள், தாய்மாரின் மார்போடு அணைக்கப்பட்டிருந்த மூன்று குழந்தைகளைப் பறித்துக் கல்லிலே மோதிக் கொன்றாள்; அந்தக் குழந்தைகளின் தலைகள் கல்லிலே அடிபட்டு நொறுங்கும் சப்தத்தைக் கேட்டு கெக்கலி கொட்டிச் சிரித்தாள். யுத்தம் முடிந்து விட்டது. எதிரிகளின் சூறையாடிய பொருள்களைத் தின்று முடித்ததும் நாட்டியம் ஆரம்பமாயிற்று. அந்த நெருப்பின் ஒளியிலே நடனம் ஆடினர். திவா இன்று தனது இளைய
புத்திரனோடு நடனம் ஆடுகிறாள். நிர்வாணமாய் ஆடும் அந்த இரண்டு உருவங்களும் நடனமாடிக் கொண்டிருக்கும் போதே ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்கின்றனர்; ஆலிங்கனம் செய்கின்றனர். இன்று திவாவின் காதலுக்கு அவள் மகன் வசு இலக்காயிருக்கிறான் என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டனர். வெற்றி வெறியில் திளைத்திருக்கும் தாயின் காதலை, மகனும் அலட்சியம் செய்ய விரும்பவில்லை.
நிஷா-சமூகத்திற்கு, இப்போது வேட்டையாடுவதற்குக் காடு நான்கு மடங்காகி விட்டது. மழைக்காலத்தைப் பற்றி இனி அவர்களுக்குக் கவலை கிடையாது. ஆனால் ஒரு கவலை மாத்திரம் அவர்களை இப்போது தொத்திக்கொண்டது. இறந்து போன உஷா ஜனங்களின் ஆவிகள் உயிரோடிருக்கும் போது செய்யமுடியாத காரியங்களையெல்லாம் இப்போது செய்ய முயலுகின்றன. எரிந்து போன அவர்களது குடிசைகள் இப்போது பேய் வாழும் இடமாக மாறிவிட்டன. அந்த வழியாகத் தனிமையில் நடப்பது நிஷா- சமூகத்தாருக்கு முடியாத காரியம். வேட்டையாடும் போது எத்தனையோ முறை ஜோதி மயமாக எரியும் நெருப்பையும், அதன் முன்னே நிர்வாணமாக அநேகர் நடனமாடுவதையும் பார்த்ததாகப் புகார் சொல்லியிருக்கிறார்கள். இந்த வனத்தை விட்டு அடுத்த பிரதேசத்திற்குப் போகும் போது அந்த மயான பூமி வழியாகவே தான் செல்ல வேண்டும். அப்போது கூட்டமாகவும், பகலிலும் நடந்து கடக்கின்றனர். திவாவும் கூட பலமுறை, அநேக இரவுகளில், பால் மணம் மாறாத குழந்தைகள் பூமியிலிருந்து எழும்பித் தன் கைகளைப் பின்னுவதாகக் கனவு கண்டு அலறி விழித்திருக்கிறாள்.
4
திவா இப்பொழுது பெரிய கிழவியாகி விட்டாள். வயதும் எழுபதுக்கு மேல் ஆகிவிட்டது. நிஷா-சமூகத்துக்கு இப்போது அவள் தலைவி இல்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இப்போது, அந்த, போது, அவள், நிஷா, திவா - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்