முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 329
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 329
படுத்தான் என்றாலும் அவனுக்கு நீண்ட நேரம் வரை தூக்கம் வரவில்லை. அவனுடைய சிந்தனை நீண்ட தூரம் சுற்றிக் கொண்டிருந்தது. இது விஞ்ஞானயுகம்-ரயில், தந்தி, கப்பல் இவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். நெருப்புப்பெட்டி, போட்டோ, மின்சார வெளிச்சம் இவற்றின் யுகத்திலே நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம். அப்படியிருந்தும், இவர்கள் பழைய யுகத்திலிருந்து வெளியே வரமாட்டேன் என்கிறார்கள். ஆனால் இந்த யுத்தம் வெற்றி பெற வேண்டுமானால், ஜனங்களின் பலத்தைக் கொண்டுதான் வெற்றி பெற முடியும். அப்பொழுது குறைந்த பட்சம் ஜனங்கள் தங்களின் சக்தியையாவது உணர்ந்துகொள்வார்கள். இங்கிலாந்தின் முதலாளிகள் அந்த நாட்டுத் தொழிலாளர்களின் உதவியைக் கொண்டு தங்கள் எதிரிகளைத் தோற்கடித்த பிறகு, அந்தத் தொழிலாளர்களை ஏமாற்றி விட்டார்கள். அதேபோல இந்த இந்தியச் சிற்றரசர்களும், தலைவர்களும், தங்கள் காரியம் முடிந்ததும் சிப்பாய்களுக்கும், விவசாயிகளுக்கும் இந்தியப் பொதுஜனங்களுக்கும் துரோகம் இழைக்கக்கூடும். ஆனால், பொதுமக்களின் தன்னம்பிக்கையைப் பறித்துக் கொள்ள முடியாது. வெளி எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, விஞ்ஞானத்தின் புதிய புதிய
சிருஷ்டிகளை ஏற்றுக்கொள்ளாமல் தப்பமுடியாது. இங்கு போடப்பட்டுள்ள நீண்ட ரயில் பாதைகள், தந்தி மரங்கள், கப்பல் துறைகள் யாவும் இந்தியாவிலிருந்து போய்விட மாட்டாது. ஆகவே, இந்தச் சுயநலக்காரச் சிற்றரசர்களைக் கண்டு நான் பயப்பட வேண்டியதில்லை. உலகத்தின் மனித சமுதாய வளர்ச்சிக்குக் காரணமாயுள்ள ஜன சமுதாயத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
3
1857 மே 10-ம் தேதி மீரட்டின் சிப்பாய்கள் கலகக் கொடியை உயர்த்திய பொழுது, மங்களசிங் அங்குதான் இருந்தான். சக்கரவர்த்தி பகதூர்ஷாவின் பிரதிநிதி என்ற ஹோதாவில் சிப்பாய்களின் ஒரு பகுதியைத் தனது செல்வாக்கின் கீழ்க் கொண்டுவர அவனுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தியசிற்றரசர்கள் மங்களசிங்கின் தகுதியை நன்றாக உணர்ந்திருந்தார்கள். ஆனால் அவனுடைய நோக்கமும் தங்கள் நோக்கமும் முற்றிலும் வேறுபட்டவை என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆகவே, மங்கள சிங்கை டெல்லியை நோக்கி அனுப்பாமல் கிழக்குநோக்கி அனுப்பி வைத்தார்கள். மீரட்டிலிருந்து கிழக்கே செல்லும் பாதையும், மேற்கே செல்லும் பாதையும், அந்த இந்திய சுதந்திரயுத்தத்தின் விளைவை நிர்ணயிப்பதிலே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை கொண்டிருந்தன என்பது யாருக்குத் தெரியும்? டெல்லி நோக்கிச் சென்ற சேனைக்கு மங்களசிங்கைப் போன்ற தலைவன் இருந்திருந்தால், டெல்லி நகர மக்களையும் பிரபலஸ்தர்களையும் தங்கள் வெற்றிக்காக அவன்
உபயோகித்துக்கொண்டிருப்பான். மங்களசிங்கின் கோஷ்டியிலே ஆயிரத்துக்கும் அதிகமான சிப்பாய்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 327 | 328 | 329 | 330 | 331 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தங்கள், ஆனால், நீண்ட - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்