முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 186
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 186
உடுத்திக் கொண்டு தயாரானதும், திறந்த பல்லக்குகளிலே அவர்களின் ஊர்வலம் தொடங்கிற்று. பார்த்தவர்கள் எல்லாம் அவர்கள் மீது மலர் தூவி வாழ்த்தினார்கள். பக்கத்தே அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்த அந்த வாலிபனையும்-யுவதியையும், மக்கள் அவர்களின் நீச்சுத் திறமையைப் பாராட்டியதோடு மட்டுமல்ல. அவர்களின் ஒப்பற்ற அழகையும் புகழ்ந்தார்கள். கூட்டத்திலே ஒருவர் கேட்டார்:
“அந்த யுவதியை எனக்குத் தெரியும். ஆனால் அந்த வாலிபன் யார்?”
“சுவர்ணாட்சி புத்திரன் அஸ்வகோஷைப் பற்றி நீ கேள்விப்பட்டதில்லையா?”
“இல்லை. எங்கள் புரோகிதரின் குடும்பத்தைத் தவிர வேறு யாரையும் எனக்குத் தெரியாது. இவர்களை எல்லாம் தெரிந்து கொள்ள வியாபாரிகளாகிய எனக்கு நேரமெங்கே இருக்கிறது?”
“அடே! அஸ்வகோஷினுடைய கல்வியறிவின் புகழ் சாகேதத்திற்கு வெளியே தூர தூரங்களிலும் பரவியிருக்கிறது. அவன் வேதங்களையும் கலைகளையும் கரை கண்டவன். இது உனக்குத் தெரியாதா?”
“ஆனால் அவனுக்கு வயது இருபத்தி நான்கிற்கு மேல் இருக்காது போலிருக்கிறதே!”
“ஆம்! இந்த இளமையிலேதான், அவன் கல்வியிலே கரை கண்டிருக்கிறான். ஜனங்கள் அவனுடைய கவிதைகளைத் தெருவெல்லாம் முழக்குகிறார்கள்!”
“ஓ! கவி அஸ்வகோஷா? நம்முடைய -யுவ-யுவதிகளின் நாவிலே நடனமாடும் காதல்கீதங்களை இயற்றியவன் இவன்தானா?”
“ஆம்! அதே அஸ்வகோஷ்தான். ஆனால் அந்த யுவதியின் பெயரென்ன?”
“கிரேக்க குலப் பிரமுகரும், கோசல நாட்டின் மிகப் பெரிய வியாபாரியுமான தத்தமித்திரரின் புதல்வி பிரபா.”
“அதனால்தான் அவள் ஈடு இணையற்ற அழகியாய் இருக்கிறாள்.
பார்க்கும்பொழுது. அவளுடைய உடல் மலரினும் மிருதுவாகத் தோன்றுகிறது. ஆனால் நீந்தும் பொழுது எவ்வளவு உறுதியாயிருக்கிறது!”
“அவளது பெற்றோர்கள் ஆரோக்கியமும், திடகாத்திரமும் உடையவர்கள்.”
ஊர்வலம் நகர உத்தியானவனத்தை அடைந்ததும் நீச்சல் போட்டியிலே வெற்றி பெற்ற அஸ்வகோஷும் பிரபாவும், மிக்க மரியாதையோடும் புகழுரைகளுடனும், பொது ஜனங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். ஆரவாரப் புகழுரைகளைக் கேட்ட அவ்விருவரும் ஒருவரையொருவர் நோக்கியபொழுது, அவர்கள் பார்வையிலே கூச்சமும் நாணமும் கலந்திருந்தன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 184 | 185 | 186 | 187 | 188 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆனால், அந்த, அவர்களின் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்