கம்பராமாயணம் (உரைநடை) - சுந்தரகாண்டம்
அரக்கியர் ஆவேசம் கொண்டனர். “கொல்லுமின்; தின்னுமின்” என்றுகூறி, அவளைச் சுற்றி வட்டமிட்டனர்; பேய்க் கூட்டமாய் மாறிக் கூத்திட்டு அச்சுறுத்தினர்; அருவருப்பான அக்காட்சி சீதைக்கு வெறுப்பு ஊட்டியது; வேதனையைத் தந்தது; இராவணனை எதிர்க்க முடிந்தது; இப்பேய்க் கூட்டத்தை ஒட்ட முடியவில்லை; திரிசடை இடை மறித்தாள். ‘ஆட்சி நிலைக்கும் என்று ஆரவாரம் செய்கிறீர்; நாளை ஆட்சி மாறினால் அதிகாரிகளின் நிலை யைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்’ என்று குறிப்பாய் அறிவுறுத்தினாள்; அடிமைகள் அவர்கள்; அதனால். அடங்கி நின்றனர்; அரசனின் ஆணைக்கு அஞ்சிப் புறக்காவல் மட்டும் மேற்கொண்டு ஒதுங்கினர்.
அனுமன் அறிமுகம்
சீதைக்கு வாழ்க்கை கசந்துவிட்டது; துன்பத்துக் கும் ஒர் எல்லை உண்டு; உயிர் அவளுக்குச் சுமையாய் விளங்கியது; உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்புத் தாராமல் தன் உடலை இராவணன் விரும்புவதை அவள் வெறுத்தாள்; அழகு தனக்கு எதிராகப் போரிடுவதை அறிந்தாள்; “மானம் இழந்த பின் வாழாமை இனியது” என்ற முடிவுக்கு வந்தாள்.
உயிர் விடுதற்குத் துணிந்தாள்; அருகில் இருந்த குருக்கத்திச் செடி அவளுக்கு உதவியாய் நின்றது. அதனைச் சுருக்குக் கயிறாய் மாற்ற நினைத்தாள்; வாழ்க்கையின் கரை ஓரத்தைக் கண்டாள். மயிர் இழையில் அவள் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது; தடுத்து நிறுத்த வேண்டும்; என்ன செய்வது? அவள் நோய்க்கு மருந்து யாது?
அனுமன் நடந்த இந் நிகழ்ச்சிகளை நாடகம்போல் கவனித்து வந்தான். சோகத்தின் எல்லையில் இருப்பவளை வேகமாகக் காத்தல் வேண்டும்; அதற்கு மருந்து? ‘இராமன்’ என்ற திருப்பெயர்தான்; ‘இராமன் வாழ்க’ என்று குரல் கொடுத்தான்.
அப்பெயர் அவளுக்கு உயிரைத் தந்தது; புத்தொளியைக் கண்டாள்; அவள் பார்வை, ஒலி வந்த திக்கை நோக்கிற்று. “வீரனே நீ யார்?” என்று கேட்டாள்.
“இராமன் அனுப்பிய தூதுவன்; பெயர் அனுமன்” என்றான்.
காட்டுக் கூச்சல் கேட்டுப் பழகிய அவளுக்குத் தெய்வ கீதம் கேட்பதுபோல் இருந்தது; அவள் உள்ளம் உருகியது; இராமன் பெயரைக் கேட்டதும் அவளுக்கு வாழ்க்கை வாயில் தென்பட்டது; வேதங்கள் மறையவில்லை; அவற்றின் நாதங்களை அவளால் கேட்க முடிந்தது; நீதியும் அறமும் அழிய வில்லை; நேர்மைகள் தழைக்கின்றன என்பதை உணர்ந்தாள்; “இராமன் தன்னைக் கைவிடவில்லை; உயிர்க் காவலனாய் இருக்கிறான்” என்பதை அறிந்தாள்.
அரக்கர் வாழும் இடத்துக்குக் குரங்கினம் வந்தமை அவளுக்கு வியப்பைத் தந்தது.
“நீ எப்படி இங்கு வந்தாய்?” என்று கேட்டாள்.
அங்கதன் தலைமையில் தென்திசை நோக்கி அனுப்பப்பட்ட படை வீரர்களுள் தான் ஒருவன் என்பதையும் தான் இலங்கை மாநகரில் சீதையைக் கண்டதையும் விளம்பினான். இங்குதான் இருப்பது அவனுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டாள். “காட்டிடை நீவிர் இட்ட மற்றைய அணிகலன்கள்தான் உம் மங்கல அணியைக் காத்தன” என்று கூறினான்.
செய்தி கேட்டதும் ‘உய்தி உண்டு’ என்று நம்பினாள்; அவன் சொன்னவற்றிற்கு ஆதாரம் காட்ட முடியுமா? என்று கேட்டாள். இராமனிடமிருந்து தான் வந்ததையும் அவன்தான் அனுப்பி வைத்தான் என்பதை யும் கூறி இராமன் திருமேனி அழகைக் கூறினான்; அப்போது அவன் தான் ஒரு சொல்லின் செல்வன் என்பதை நிறுவினான்; கவிஞனாகவும் காட்சி அளித்தான்.
“இராமன் திருவடிகள் தாமரை போன்றும் பவழத்தைப் போன்றும் உள்ளன; கால் விரல்கள் இளஞ்சூரியனைப் போன்றன; நகங்கள் வைரத்தினும் அழகியன கணுக்கள் அம்பறாத் துணியைப் போன்றன; தொடைகள் கருடனின் கழுத்தைப் போன்றன; உந்தி மகிழ மலருக்கு ஒப்பாகும்; மார்பு திருமகன் உறையும் இடமாகும்; கைகள் ஐராவதம் என்னும் யானையின் துதிக்கை போன்றது; கை நகங்கள் அரும்பு போலக் கூர்மையன; தோள்கள் மலை போன்றன; கழுத்து திருமாலின் கரத்தில் உள்ள சங்கு போன்றது. முகமும் கண்களும் தாமரை மலர்கள் போன்றன; பல்லுக்கு முத்தும் நிலவின் துண்டும் உவமைகள்; குனித்த புருவம் வளைந்த வில் போன்றது; நெற்றி எட்டாம்நாள் சந்திரன் போன்றது; நடைக்கு எருதும் யானையும் உவமை” என்றான்.
இராமன் உருவை இவ்வருணைனைகளால் அனுமன் காட்டினான்.
அவனுடைய ஒவ்வொரு சொல்லும் அமுதத் துளிகளாய் அவள் செவிகளில் நிறைந்தன; தேன் துளிகளாய் இனித்தன.
“உன் அமுத மொழிகள் என் மனத்தை வருக்கி விட்டன. என் உயிரைத் தளிர்ப்பச் செய்து விட்டாய்; வாழ்க நீ” என்று வாழ்த்தினாள்.
“காட்சிக்குச் சான்று தந்த நீ சாட்சி வேறு யாதாவது கூற முடியுமா” என்று கேட்டாள்.
இராமனுக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த சுவை யான அனுபவங்கள் சில அனுமனிடம் தெரிவிக்கப் பட்டன. அவற்றுள் இரண்டனை அவன் எடுத்துரைத்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுந்தரகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவள், கேட்டாள், போன்றன, தான், அவளுக்கு, போன்றது, என்பதை, அவன், “இராமன், அனுமன், உயிர், தந்தது, இராமன்