கம்பராமாயணம் (உரைநடை) - சுந்தரகாண்டம்
நகைச்சுவை நிரம்பிய நிகழ்ச்சி ஒன்று அவளைப் பார்த்துச் சிரித்தது; அந்தணன் ஒருவன், பேராசைக் காரன்; வீடு பற்றி எரியும்போது அடுப்புக்கு நெருப்புக் கேட்பது போல நாடிழந்து காடு நோக்கிச் சென்றபோது இராமனிடம் அவன்தானம் கேட்ட நிகழ்ச்சி ஏற்படுத்திய சிரிப்பை நினைவுபடுத்திக் கொண்டாள்.
மழுப்படை ஏந்தி வந்த பரசுராமனைக் கோதண்ட ராமனாக இருந்து அடக்கி ஆணவம் நீக்கியதை நினைத்துப் பார்த்தாள்.
சயந்தன் காக்கை வடிவம்கொண்டு அவர்கள் இடையே புகுந்து அற்ப ஆசையால் அவள் மார்பைக் குத்தி மகிழ்ந்தபோது தருப்பைப்புல் ஒன்று கொண்டே அவனை விரட்ட அவன் கண்ஒன்றனைக் குருடு ஆக்கியது; அச் சோகச் செய்கை அவள்கண் முன்நின்றது.
கரம்பற்றி வானிடை எடுத்துச் சென்ற கிராதகனை வாள்கொண்டு வெட்டிய வீரச் செய்கையை எண்ணிப் பார்த்தாள்.
பெருமைமிக்க இராமன் செயல்கள் அவளுக்கு ஊக்கம் தந்தன. இடர்சிறிதும் நேராமல் காத்த வீரன், தன்னை மீட்கவராதது அவளுக்கு வியப்பாய் இருந்தது; அதற்குக் காரணம் யாதாய் இருக்கும்?
“இலக்குவன் கிழித்த கோட்டை அழித்து விட்டேன்; அதற்காக என்னைத் தன் மனத்தில் அழித்து விட்டானா?”
“கொண்டு சென்ற அரக்கன் உண்டு முடித்திருப்பான் என்று அயர்ந்து ஒய்ந்து விட்டானா?”
“பாதுகையை ஏந்திச் சென்ற பரதன், விரதத்தைக் காக்க முடியாமல் வரதனிடம், வந்து திரும்ப அழைத்துச் சென்றுவிட்டானா?”
“இரக்கமற்ற இராவணன் இலங்கை நகரில் என்னைச் சிறை வைத்திருப்பான் என்பதை அறியாமல் திகைத்திருப்பானா?”
இத்தகைய வினாக்கள் வினாடிக்கு வினாடி மாறி மாறி அவள் மனத்தில் எழுந்தன.
“அழுத கண்ணோடு அவனையே நினைந்து காத்துக் கொண்டு இருக்கிறாள்” என்ற செய்தியை யார் அவனுக்குச் சொல்லப் போகிறார்கள் என்ற ஏக்கம் அவளை வாட்டியது.
திரிசடையின் ஆறுதல் மொழிகள்
உறக்கம் இழந்த நிலையில் அவளுக்கு உதவியாய்த் திரிசடை என்பவள் பேச்சுத் துணையாய் இருந்தாள்; அவள் வீடணன் மகள்; தன் இடக்கண்ணும் புருவமும் துடிப்பதை அத் தூய சீதை வீடணன் மகளிடம் எடுத்து உரைத்தாள்.
‘அது நன்மைக்கு அறிகுறி’ என்று நாலும் தெரிந்தவள் போல் அந் நங்கை சீதைக்கு விளக்கி உரைத்தாள்; அரை உறக்கத்தில் நிறைவு பெறாத தான் கண்ட கனவினையும் திரிசடை சீதைக்கு உரைத்தாள்.
பேயும் கழுதையும் இழுத்துச் சென்ற தேரில் இரத்த ஆடையனாய் இராவணன் தென்திசை நோக்கி இறுதி யாத்திரை செய்வதைக் கனவில் அவள் கண்டாள்.
அரிமா இரண்டு, புலிகளோடு வந்து யானைகளை அடித்துக் கொன்ற கனவும் கருத்துள்ளதாய் இருந்தது. இராமனும் இலக்குவனும் அனுமனோடு வந்து இலங்கை வேந்தனை வெல்லும் நிகழ்ச்சி, இதில் உருவகப்படுத்தப் பட்டுள்ளது. காட்டில் சிறைப் பட்டிருந்த தோகை மயில், விடுதலை பெற்று, விண்ணில் பறந்து சென்றது என்றும் கூறினாள். சோகத்தில் அகப்பட்டிருந்த சீதைக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்பதை அது தெரிவித்தது.
நம்பிக்கை ஊட்டும் திரிசடை கனவுகள், அவள் விரும்பிக் கேட்பவையாய் அமைந்தன.
திருமகள், திருவிளக்கு ஒன்றனை ஏந்தி இராவணன் மனையிலிருந்து வெளிப்பட்டு வீடணன் கோயிலில் அடி எடுத்து வைத்தாள்.
ஆட்சி மாறும் இராவணன் வீழ்ச்சியை இக் கனவு உணர்த்தியது.
அக் கனவுகளைத் தொடர்ந்து விருப்புற்றுக் கேட்டு மறுபடியும் திரிசடையைக் கண்ணுறங்க வேண்டினாள் சீதை.
சீதை இருக்குமிடம் அடைந்த அனுமன் கண்ட காட்சி, அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது; நம்பிக்கை நட்சத்திரமாய் அவள் ஒளிவிடுவதைக் கண்டான்; செல்வச் சிறப்பும், இன்பக் களிப்பும், அதிகார ஆதிக்கமும் மிக்க இராவணன் ஆதிக்கத்தில் அவள் ஒளிதரும் சுடர் விளக்கமாக இருப்பதை அறிந்தாள்.
‘அறம் அழியவில்லை’ என்று அகம் மகிழ்ந்தான்; “கற்பின் மாட்சியால் அவள் பாராட்டும் சிறப்பினை உடையவள்” என்பதை அறிந்தான்; பிறந்த மனைக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறாள்” என்று பாராட்டினான்; மாசுபடியாத மாணிக்கத்தைக் கண்டெடுத்த மனநிறைவு அவனை அடைந்தது; ‘இழந்த வாழ்வு மீண்டும் இராமன் பெறுகிறான்’ என்பது அவனை மகிழ்ச்சியில் ஆட்டிப்படைத்தது.
“கல்லைப் பெண்ணாக்கிய இராமன் மனைவி யின் நெஞ்சு, “கல்லைப் போன்றது” என்று கண்டு கொண்டான்; பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் திண்மை அவளிடத்தில் இருந்ததைக் கண்டான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுந்தரகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவள், இராவணன், சென்ற, அவனை, சீதை, வீடணன், சீதைக்கு, திரிசடை, உரைத்தாள், வந்து, இராமன், அவளுக்கு, நிகழ்ச்சி, என்பதை