கம்பராமாயணம் (உரைநடை) - சுந்தரகாண்டம்
இராவணன் நேர் உரை
எதிர்பாராதவாறு இலங்கை வேந்தன் இராவணன், ஆடை அங்காரத்தோடும், அரம்பை மகளிரும் பணிப் பெண்களும் அவனைச் சூழ்ந்து வரவும் சீதையிருக்கும் இடம் நாடி வந்தான்; அரக்கியரையும் அரம்பையரையும் விலகச் சொல்லித் தான் மட்டும் தனியனாய்ச் சீதையை நெருங்கினான்; அவள் கடும்புலிக்கு நடுங்கும் இளமான் ஆனாள்; ஆசை வெட்கம் அறிவதில்லை; நாக்கூசாமல் தன் ஆசைகளை வாய்விட்டுப் பேசினான்; தன்னை அவள் அடைவதால் அவளுக்கு உண்டாகும் நன்மைகளை எடுத்து உரைத்தான்.
“செல்வச் சிறப்பும் ஆட்சிப் பொறுப்பும் உடைய என்னை மதிக்காமல், காட்டில் திரியும் அற்ப மனிதனாகிய இராமனைக் கற்பு என்னும் பேரால் நினைத்துக் கொண்டிருப்பது அறியாமை; வாழத் தெரியாமை” என்று அறிவித்தான்.
அவளை அடையாமல் அவதிப்படும் தன் மன வேதனையைப் பலவாறு எடுத்துக் கூறினான்; “'அருள் இல்லாமல் தன்னை இருளில் விட்டுக் கஞ்சத் தனமாய் நடந்து கொள்ளும் வஞ்சிக்கொடி, என அவளைச் சாடினான்; தன்னை அவள் கூடாவிட்டால், தான் அவளை அடையாவிட்டால், உயிர் விடுவது உறுதி” என்று இயம்பினான்.
அவன் அடுக்கு மொழிகளைத் தடுத்து நிறுத்த விரும்பினாள். “இனி இதைப் பொறுப்பதில்லை” என்று சீறிச் சினந்தாள்.
அவன் செய்த தவறுகளை எடுத்துக் கூறி, அவன் கொடுமைகளைச் சாடினாள்; ‘வஞ்சனையால் மான் ஒன்றனை ஏவித் தன்னை வலையில் சிக்க வைத்தது அவனது கோழைத்தனம் என்று சுட்டிக்காட்டினாள், ‘சடாயுவைக் கொன்றது அநீதி, என்று எடுத்து உரைத் தாள்; இராமனை அற்ப மனிதன் என்று சொன்னதற்கு எதிராக அவன் வீரத்தையும், வெற்றிகளையும் விவரமாகக் கூறினாள்.
அரச மகன் என்பதால் இராமனைத் தான் மணக்க வில்லை; ஆற்றல் மிக்க வீரமகன் என்பதால் தான் மணந்து கொண்டதாய்க் கூறினாள்; “வில்லை வளைக்க முடியாமல் பேரரசர் பின்வாங்கிய நிலையில், அதனை வளைத்து அவ்வெற்றியையே தனக்கு மண மாலையாகச் சூட்டினான்” என்பதைச் சுட்டிக்காட்டினாள்.
“செல்வத்தைக் காட்டிச் செருக்கோடு பேசுவது மடமையாகும், என்றாள்; அதனால் தன்னை மருட்டுதல் பயன்தாராது என்றாள்; அறிவு குறைந்தவள் என்று சொல்லித் தன்னை ‘ஏழை’ என்று அவன் சுட்டியதற்கு எதிர்ப்பாய் அவன்தான் ஏழை என்பதனை எடுத்துக் காட்டினாள்.
“அறிவின்மை, வஞ்சகச் செயல், வீரமின்மை, கோழைத்தன்மை இவைதான் ஏழைமையின் சின்னங்கள்; நீதான் ஏழை” என்று ஏழ்மைக்குப் புதுவிளக்கம் தந்தாள்; “செல்வமின்மை ஏழ்மையன்று; அறிவின்மைதான் ஏழ்மை” என்று அறிவித்தாள்.
“தெய்வங்கள் வரம் தருகின்றன என்றால் தவத்துக்கும் ஆற்றலுக்கும் தரப்படுகின்ற மதிப்பு என்று அதனைக் கொள்ள வேண்டும். ‘ஆற்றல் உள்ளவர்க்கு வரம் அளிப்பதால் அவர்கள் உலகுக்கு நன்மை ஆற்றுவர்; உலகு நன்மை கருதிதான் பதவிகள் தரப்படுகின்றன; வரம் கொடுக்கும் தெய்வங்கள் தவறு செய்ததில்லை; தரம் கெட நடந்துகொள்ளும் நீ தான் தவறு செய்கிறாய்; அதனால் தருக்கும், செருக்கும் கொண்டு உலகை ஆட்டிப் படைக்கிறாய்; பொதுவாழ்வையும் கெடுக்கிறாய்; உன்னையும் நீ நாசப்படுத்திக் கொள்கிறாய்; பதவிகளும் பாராட்டு களும் ஆக்க வழியில் மனிதரை ஊக்குவிப் பதற்காக; அழிவுப் பாதையில் அவற்றைப் பயன்படுத்த அன்று” என்று அறிவுரை கூறினாள்.
உன் போர்க்களத்து வீரத்தைக் காட்டிப் பெருமைப் படுகிறாய்; வாழ்க்கைக் களத்தில் அப் பேராண்மை இருக்க வேண்டாவா? பிறன்மனை நோக்காத பேராண்மை உனக்குப் பீடு நடையும் பெருமையும் தருமே! ஒழுக்கம் விழுப்பம் தருமே! ஒழுக்கம் இன்மை கேடு தருமே! என்று தொடர்ந்து கூறினாள்.
நேராய் அவனொடு முகம் கொடுத்துப் பேசி, அவனைப் பெருமைப்படுத்த அவள் விரும்பவில்லை; அப்பார்வையும் அவனுக்கு வெறியை உண்டாக்கிக் கெடுத்துவிடும்; அதனால் ஒருதுரும்பை எடுத்துப் போட்டு, அதனைப் பார்த்து விளித்து, இக்கருத்து களைக் கூறினாள்; “அற்ப மனிதன், என்று கூறிய அவனை அவள் ஒர் அற்பப் புழுவாகக்கூட அவள் மதிக்கவில்லை; ஜீவனுள்ள பொருளாய் மதிக்க விரும்பவில்லை.
கிள்ளை மொழி போலப் பேசுவதாய் அவன் அவற்றை எடுத்துக்கொண்டான். அவள் பேச்சு ஒவ்வொன்றும், அவன் ஏக்கத்தால் விடும் பெரு மூச்சுக்குக் காரணமாய் அமைந்தன; “நீ இல்லாமல் நான் இல்லை” என்று சோக கீதம் பாடினான்; ‘நோய்க்கு அவள்தான் மருந்து’ என்று வற்புறுத்திக் கூறினான்; தானாய்ப் பழுக்காத பழத்தை அடித்துப் பழுக்க வைக்க நினைத்தான்; அது பழுது ஆகிவிட்டது; அச்சுறுத்தினால் அவள் நிச்சயம் பணிவாள்; நயப்புரை பேசினால் தன்னை நாடுவாள் என்று எதிர்பார்த்தான்; இரண்டிலும் தோல்வி அடைந்தான். “இன்னும் இரண்டு மாதம் தவணை தருகிறேன்” என்று தெரிவித்தான். “காலில் விழுந்து வணங்கிக் கேட்கிறேன். மறுத்தால் என் வாளில் விழுந்து நீ மடிய வேண்டுவது தான்” என்று இறுதி உரை கூறி எச்சரித்தான்.
ஆதிக்க வெறி அவனை ஆட்கொண்டது; அதிகாரத் தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்தான்; சீதைக்குக் காவலாய் நின்ற அரக்கியருக்கு அவளைப் பணிய வைக்கும்படி ஏவல் இட்டான். “இன்னுரை கூறியாவது வன்முறைச் செயலாலாவது அவளைப் படியவைக்க வேண்டும், என்று முடிவாகக் கூறிச் சென்றான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுந்தரகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவள், தன்னை, அவன், தான், கூறினாள், தருமே, வரம், அதனால், எடுத்துக்