கம்பராமாயணம் (உரைநடை) - சுந்தரகாண்டம்
செய்தி சொல்லல்
அனுமனைக் கண்ட வானர வீரர், உவகை கொண்டனர்; ஆரவாரம் செய்து, கடல் ஒலியைக் கரையில் எழுப்பினர். அவன் வாய் திறந்து பேசவில்லை; அவன் தோற்றமே அவன் ஏற்றத்தை உணர்த்தியது.
“ஞான நாயகன் தேவி கூறினாள் நன்மை” என்றான்; அதனால் சீதையை அவன் கண்டு வந்ததை அறிந்தனர்.
“அவன் உடல் வடுக்கள், அவன் வீரச் செயல்களை விளம்புகின்றன; வானில் எழுந்த புகை, அவன் இலங்கைக்குத் தீ மூட்டியதைக் காட்டுகிறது; சீதை அவனுடன் திரும்பவில்லை; அது பகைவரின் படை வலிமையைக் காட்டுகிறது” என்று வாலி மைந்தன் அங்கதனும், கரடி வேந்தன் சாம்பவனும் உரைத்தனர்.
“கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்னகர்
அண்டர் நாயக! இனித் தவிர்தி ஐயமும்
பண்டுளதுயரும்என்று அனுமன் பன்னினான்.”
“அவள், தன் பொறுமையாலும் சீலத்தாலும் தன் கற்பின் திறத்தை நிலைநாட்டிவிட்டாள்” என்று கூறினான்; “அதனால் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறாள்; எனக்கும் அதனால் பெருமை உண்டாகி இருக்கிறது; தன்னைத் தனிமை செய்த இராவணன் வன்குல, தைக் கூற்றுக்குத் தர இருக்கிறாள்; வானரர் குலத்தை வாழ்வித்தாள்” என்று சொல்லி, அவள் இருந்த காட்சியை அநுமன் இராமனிடம் தெரிவித்தான்.
காவியத்தின் நீதியைத் தொடக்கூடிய நிலையில் அனுமன் கூற்று அமைந்தது.
“'சீதை மண்மகள் தந்த மாமகள்; அவள் விண்மகளிரையும் உயர்த்திவிட்டாள்” என்றான். ‘பெண்ணினத்துக்கே அவளால் பெருமை சேர்ந்துவிட்டது’ என்று கூறினான்.
“சோகத்தாளாய நங்கை கற்பினாள் தொழுதற்குஒத்த
மாகத்தார் தேவிமாரும் வான்சிறப்பு உற்றார்; மற்றைப்
பாகத்தாள் அல்லள் ஈசன், மகுடத்தாள்; பதுமத்தாளும்
ஆகத்தாள் அல்லள்; மாயன் ஆயிரம் மோலி மேலாள்”
என்று கூறினான்.
கணையாழி கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு அவள் உள்ளம் குளிர்ந்ததை எடுத்துக் கூறினான்; அவ்வாறே அவள் தந்து அனுப்பிய சூடாமணியை இராமன் கையில் தந்தான்;
“விற்பெரும் தடந்தோள் வர!
வங்கு நீர் இலங்கை வெற்பில்
நற்பெரும் தவத்தள் ஆய
நங்கையைக் கண்டேன் அல்லேன்;
இற்பிறப்பு என்பது ஒன்றும்
இரும்பொறை என்பது ஒன்றும்
கற்புஎனும் பெயரது ஒன்றும்
களிநடம் புரியக் கண்டேன்”
என்றான்.
இராமன் உள்ளம் பூரித்தான்; உவகைக்கு எல்லை இல்லை; அந்த மகிழ்ச்சியில் அவன் ஆழ்ந்து போகாமல் சுக்கிரீவன் செயல்பாட்டுக்குத் துண்டிவிட்டான்.
“ஐயனே! கேள்; தலைவியை நாம் எளிதில் மீட்க முடியும் என்று அறிந்த பின்பும் அடங்கி இருப்பது தக்கது அன்று; பேர்ருக்குப் புறப்படச் செயல் படுவோம்” என்று உரைத்தான்.
“எழுக வெம்படை” என்றான். “ஏய் என்னும் அளவில் கடல்போன்ற சேனை தென்திசை நோக்கிப் புறப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுந்தரகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், அவள், கூறினான், என்றான், ஒன்றும், பெருமை