கம்பராமாயணம் (உரைநடை) - கிட்கிந்தாகாண்டம்

அணிகலன் அவனுக்கு உயிர் தரும் அமுதமாய்க் காட்சி அளித்தது; அணிகலன் கண்களினின்று மறைந்தது அதற்கு உரிய அணங்கின் தோற்றம் கண்முன்வந்து நின்றது; அணிகளைக் கண்டதால் மகிழ்ச்சியும், அணிக்கு உரியவள் அருகில் இல்லாததால், அயர்ச்சியும் அடைந்தான். இராமன் தன்னிலை கெட்டுச் சோர்ந்து மயங்கி விழுந்தான்; தான் உயிரோடு இருக்கும்போதே அணிகளைக் களையும் அவலநிலை ஏற்பட்டதே! என்று வருந்தினான். அருகிலிருந்த சுக்கிரீவன் ஆறுதலாய் நல்லுரைகள் தந்து மீண்டும் உணர்வுபெறச் செய்தான். “'கண்டது சீதையின் அணி கலன்களை; கொண்டவன் அரக்கன் இராவணன்” என்பது முடிவு செய்யப்பட்டது; அவன் எங்கிருந் தாலும் அவனைக் கண்டு தெளிந்து, கொண்டுவருவது தன்கடமை என்று சுக்கிரீவன் கூறினான்.
வாலி வதை
“இனி முதலில் வாலியைக் கொன்று, பின் சுக்கிரீவனுக்கு முடிசூட்டு; அவன் அரசனாவான்; அவன் ஆணை பிறப்பித்ததும் எழுபது வெள்ளம் எண்ணிக்கை யுள்ள வானரர் ஒன்று சேர்வர்; அவர்களை ஒவ்வொரு இடமாய் அனுப்பினா. காலம் நீட்டிக்கும். ஒரே இடத்துக்குப் பலரையும் அனுப்பி வைப்பது மிகைப்பட்ட முயற்சியாகும். அனைவரையும் ஒரே சமயத்தில் நாலா திக்குகளுக்கும் அனுப்பி வைப்பதுதான் தக்கது; அவ்வாறே இனிச் செயல்பட வேண்டும்” என்று அனுமன் இராமனிடம் கூறினான்.
இராமனும் “அவன் சொல்வது சரி” என்று ஏற்றுக் கொண்டான். அனுமன் தன் துணை அமைச்சர்களான தாரன், நீலன், நளன் ஆகியவர்களோடு இராம இலக்குவருக்கு வழிகாட்டச் சுக்கிரீவன் வாலியின் இருப்பிடத்தை நாடிச் சென்றான்.
சுக்கிரீவனும் அவன் அமைச்சர் நால்வரும் இராம இலக்குவரைத் தொடர்ந்து மலைச்சாரல் இடையே சென்றனர். “தான் செய்யத் தக்கது யாது?” என்று சுக்கிரீவன் இராமனை நோக்கிக் கேட்டான்.
“நீ வாலியைப் போருக்கு அழை; நீங்கள் இருவரும் போர் செய்யும்போது மறைவிடத்தில் இருந்து அம்பு ஒன்றினால் வாலியைக் கொல்வேன்” என்று வழி வகையைக் கூறினான் இராமன்.
சுக்கிரீவனுக்கு அச்சம் நீங்கியது; வாலியை அழிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது; ஒர் உயரமான இடத்தில் இருந்து கொண்டு வாலியைப் போருக்கு வருமாறு கூவி அழைத்தான்; யானையின் பிளிறல் கேட்டு எழும் சிங்கம் போல வாலி, சுக்கிரீவனின் அறைகூவலைக் கேட்டு வியந்தான்; போருக்கு அஞ்சிப் புறமுதுகிட்டவன், வலியவந்து அழைத்தது அவனுக்கு வியப்பை அளித்தது. வாலியின் தாரமாகிய தாரை, அவன் போருக்குச் செல்வதைத் தடுத்தாள், “இதில் ஏதோ சூது இருக்கிறது; போக வேண்டா” என்று கூறினாள்; கண்ணிர் வடித்தாள்.
“அவனே வலிய வந்து வகையாய் மாட்டிக் கொள்ளும்போது நாம் என்ன செய்ய முடியும்? அவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்” என்று கூறி எழுந்தான் வாலி. “அவன் தன் வலிமையை நம்பி வந்தவன் அல்லன், இராமன் அவனுக்குத் துணையாய் வந்திருக்கிறான்; அதனால்தான் அவனுக்கு இவ்வளவு அஞ்சாமை’ என்று தாரை எடுத்து உரைத்தாள்.
வாலி கடுங்கோபம் கொண்டான்; இராமன் திருப்பெயருக்கு மாசு கற்பிப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “தம்பியரை நேசிப்பவன் இராமன் உடன்பிறந்த சகோதரர்களிடையே அவன் பகையை மூட்ட மாட்டான்; தன்னிகரற்ற வீரனான இராமன், ‘ஒருகுரங்கோடு நட்புக் கொண்டு அவனுக்காகப் பரிந்து துணைக்கு வருவான்’ என்று சொல்வது நம்பத்தக்கது அன்று” என்று கூறித் தாரை தடுத்தும் தயங்காது போருக்குச் சென்றான்.
இராமன், வாலியின் தோற்றத்தைக் கண்டு இலக்குவனிடம் அவனைப் பற்றிப் பெருமையாய்ப் பேசினான். இலக்குவன், ‘சுக்கிரீவன் நம்பத்தகுந்தவன் அல்லன்’ என்று எடுத்து உரைத்தான். அண்ணனையே கொல்வதற்கு நம்மை அவன் துணை தேடுகிறான் என்றால், அது துரோகம் அல்லவா? அவனை நம்புவது மண் குதிரையை நம்பி நட்டாற்றைக் கடப்பது போலத் தான் ஆகும்” என்றான்.
“தம்பியர் எல்லாம் பரதன் ஆகமுடியுமா? ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்யும்; அதற்காக நாம் அவனை வெறுக்க முடியாது; அவன் எப்படிப் பட்டவன் என்ற ஆராய்ச்சியா நமக்கு முக்கியம்? யார் பக்கம் நியாயம் இருக்கிறது? என்பதை வைத்துத்தான் ஒரு காரியத்தில் இறங்க வேண்டும்.
“வாலி, சுக்கிரீவனுக்கு உரிய ஆட்சியை எடுத்துக் கொண்டான்; தவறு இல்லை; அவன் மனைவியை ஏன் அவன் கைப்பற்ற வேண்டும்? எந்தத் தவறும் செய்யாத தம்பியை அவன் ஏன் விரட்டி அடிக்க வேண்டும்? வாலி தவறு உடையவன்; அவனை அழிப்பதுதான் அறம்” என்று கூறித் தெளிவுபடுத்தினான் இராமன்.
போர் மும்முரமாய் நடந்தது; சுக்கிரீவனை வாலி பந்தாடுவது போலத் துக்கி எறிந்தான். அவன் தாக்குதலுக்கு ஆற்றாமல் சுக்கிரீவன் துவண்டுவிட்டான்; இராமன் மறைந்திருந்த பக்கம் வந்து மெல்லிய குரலில் தன்னைக் காக்குமாறு வேண்டினான் இராமன். “உங்கள் இருவருக்கும் வேறுபாடு காண முடியவில்லை; நீ கொடிப் பூ அணிந்து செல்; அடையாளம் தெரிந்து கொள்கிறேன்; என்று அவன் செவிவில் படுமாறு மெதுவாய் உரைத்தான்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிட்கிந்தாகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், இராமன், வாலி, சுக்கிரீவன், தாரை, அவனை, வேண்டும், போருக்கு, சுக்கிரீவனுக்கு, கூறினான், அவனுக்கு, கொண்டான், வாலியின்

