கம்பராமாயணம் (உரைநடை) - கிட்கிந்தாகாண்டம்
சுக்கிரீவன் சில நாள்கள் தங்களோடு தங்கும்படி இராமனைக் கேட்டுக் கொண்டான்.
“தவ வாழ்க்கையை மேற்கொண்ட நாங்கள் அரண்மனையில் சுகவாசிகளாய் மாறக்கூடாது மேலும் நாங்கள் உங்களோடு இருந்தால், எங்களைக் கவனிப்பதிலேயே உங்கள் காலம் கழிந்துவிடும், உங்களால் கடமைகளைச் செய்யமுடியாது” என்று கூறினான் இராமன்.
மேலும் தன் மனக் கருத்தை விரித்துரைத்தான்.
“சீதை இன்றித் தனித்து நான் அடையும் இன்பம் எதுவாய் இருக்கும்? “பெண்டாட்டியைப் பறி கொடுத்து, அரண்மனையில் களித்து இருக்கிறான்” என்று உலகம் பேசாதா? யான் துறவிகளைப்போல நோன்பு நோற்றுத் தனித்து வாழ்வதுதான் தக்கது” என்று கூறினான்.
சுக்கிரீவன் இராமன் திருவடிகளை வணங்கிக் கண்ணிர் மல்க விடைபெற்றுக் கிட்கிந்தை நோக்கிச் சென்றான். அங்கதனை அழைத்துச் சுக்கரீவனைச் சிறிய தந்தை’ என்று நினைக்காது, பெற்ற தந்தையாய் மதித்து, அவன் ஏவலை ஏற்று, நன்மகனாய் நடந்துகொள்” என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தான் இராமன்.
சேனைகளைத் திரட்டுதல்
கார்காலம் கடந்தது, எனினும், குறிப்பட்டபடி குரங்கினத் தலைவனாகிய சுக்கிரீவன் படைகளோடு வந்து சேரவில்லை. அதனால், வெகுண்டு எழுந்த இராமன் இலக்குவனிடம், “சுக்கிரீவன் காலம் தாழ்த்து வது ஏன்? கடமையை மறந்து கள்ளுண்டு மயங்கிக் கிடக்கின்றான் போலும் சொன்ன சொல் தவறியவனைத் தவறாமல் தண்டிப்பது கடமையும் ஆகும்”
.
“பெறுவதற்கு அரிய அரச செல்வம் பெற்றபின் அரசபோகத்தில் ஆழ்ந்து, செய்நன்றி மறந்துவிட்டான், போகட்டும்; நம் வீரம் அவனுக்கு நினைவில் இருக்க வேண்டுமே! சத்தியம் தவறியவனைக் கொன்று அழிப்பது தவறு அன்று, எதற்கும் நீ சென்று அவன் கருத்தினை அறிந்துவா” என்றான்.
“அறத்தை நிறுவக் கையில் வில்லுண்டு; வில்லில் தொடுப்பதற்கு விறல்மிக்க அம்பு உண்டு; அவன் உயிரைக் கவர, நம்பால் வீரம் உண்டு என்பதைச் சொல்லிவிட்டுவா; அவன் சாவை விரும்பி ஏற்கிறான் என்பது தெரிகிறது”.
“சீதையைத் தேடுவதற்காக உடனே புறப்பட்டு வரட்டும்; இல்லை என்றால், அவனும் அவ் வானரக்குடியும் அழியும் என்பதை அறிவித்துவிட்டு வா”.
“அவசரப்பட்டு உன் ஆவேசத்தைக் காட்டாமல் அவன் சொல்லும் பதிலைத் தெரிந்துவா” என்ற சொல்லி அனுப்பினான் இராமன்.
இராமன் இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு கிட்கிந்தை நோக்கிப் புறப்பட்டான் இலக்குவன்; மலைகளையும் குன்றுகளையும் கடந்து, குறுக்கு வழியில் கிட்கிந்தையை அடைந்தான்; இலக்குவன் சீற்றத்தோடு வருவதைக் கண்ட அங்கதன், அதிர்ச்சி அடைந்தான்; நேரே சுக்கிரீவன் தங்கியிருந்த அரண்மனையை அடைந்தான்.
தன் சிற்றப்பன் அற்பத்தனமாய்க் குடித்து மயங்கி ஆழ்ந்த துயிலில் கிடப்பதைப் பார்த்தான். தாழ்ந்த கூந்தலும் மேலாடை நெகிழ்ந்த நிலையும் உடைய இளம் பெண்கள், அவன் கால்களை வருடிக்கொண்டு இருக்க, மென்மையான சுகத்தோடு அவன் மோகத்தில் ஆழ்ந் திருப்பதை அறிந்தான்.
உள்ளே நுழைந்து, உரத்த குரலில் இலக்ககுவன் வருகையை அறிவித்தான் இடி இடித்தாலும் அசையாத வனாய் அவன் மயக்கத்தில் கிடந்தான். இவன் சொல்வதை அவன் வாங்கிக்கொள்ளும் மனநிலையில் இல்லை; குடி போதையில எந்த போதமும் ஏற வில்லை; “கடமையைப் பற்றிப் பேசினால் கடலை ஒருபடி விலை என்ன?” என்று கேட்பதுபோல அவன் முணுமுணுப்பு இருந்தது.
அங்கதன் அனுமனை அடைந்து, அடுத்து நடப்பது குறித்து ஆலோசனை செய்தான். அன்னை தாரையை அணுகி, நிலைமையைத் தெரிவியுங்கள் என்று அனுமன் அறிவுரை கூறினான்.
வெள்ளம் பெருக்கெடுத்து வந்துவிட்டது; அணை போடவேண்டிய பொறுப்புத் தாரைக்கே உரியது; அனுமன் அறிவுரையின்படி தாரை, தாரகை போன்ற அழகிகள் சூழ்ந்துவர, இலக்குவன் வரும் வழியில் குறுக்கே எதிர்நோக்கிச் சென்றாள்; அவன் வழியை மறித்தாள்; இலக்குவன் தன்னைப் பெரிய சேனை ஒன்று எதிர்க்கும் என்று எண்ணினானே தவிர, பெண்கள் புடைசூழ வந்து தன்னை மறிப்பர் என்று எதிர்பார்க்கவில்லை.
தன்மனைவியைத் தவிர, வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்து அறியாதவன் அவன். சிரித்த முகமும், விரித்த கூந்தலும், இனித்த சொல்லும் கனிந்த பார்வையும் கொண்ட மகளிரைக் கண்டு இலக்குவன் நாணினான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிட்கிந்தாகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், இராமன், இலக்குவன், சுக்கிரீவன், அடைந்தான், கூறினான்