கம்பராமாயணம் (உரைநடை) - கிட்கிந்தாகாண்டம்
“சுக்கிரீவன் மனைவி உருமை என்பவள் உருவ அழகி, அவளையும் வாலி தன் சுகத்துக்குத் துணையாக்கிக் கொண்டான்; சுக்கிரீவன் நாட்டையும் துறந்தான்; மனைவி யையும் இழந்தான்; அக வாழ்வும், ஆட்சியும் அவனை விட்டு நீங்கின; பாதுகாவல் தேடி அவன் இங்கு வந்து சேர்ந்தான்.” என்று இக்கதை அங்குப் பேசப்பட்டது.
தம்பிக்கு ஆட்சி தந்து, பாசத்தால் உயர்ந்த இராமனால் இந்த நாசத்தை ஏற்க இயலவில்லை; ம்ற்றும் தம்பியின் தாரத்தைக் கவர்ந்து அவளை ஆரத் தழுவிச் செய்த கொடுமையை அவனால் மன்னிக்க இயலவில்லை; தம்பியைக் கொல்ல முயன்றதும் பின் தாரத்தைக் கவ்வியதும் இரக்கமற்ற செயல்கள் என்பதை அறிந்து, அவன் சினம் இருமடங்கு ஆகியது.
சுக்கிரீவனிடம் “அஞ்சற்க; வாலியைக் கொன்று, உன் மனைவியை உன்னிடம் சேர்ப்பேன்; ஆட்சியும் உன் கைக்கு வரும் மாட்சியைப் பெறுவாய்” என்று உறுதி கூறினான் இராமன். அனுமன் இதைக்கேட்டு அகம் மிக மகிழ்ந்தான்.
எனினும், சுக்கிரீவனுக்கு ஒர் ஐயம் எழுந்தது; அடி பட்ட நாகம் அவன்; பிடிபட்டுத் தப்பியவன்; இடியொத்த அண்ணன் வலியை நன்கு அறிந்தவன்; “மேரு மலையை எதிர்க்கும் ஆற்றல் பெருங்காற்றுக்கு ஏது?” என்று ஐயப்பட்டான்; பாற்கடலைக் கடைந்த பராக்கிரமம் நிறைந்தவன் வாலி, அண்டத்தை அளாவும் வேகம் கொண்டவன்; அத்தகையவனை இராமன் எதிர்க்க முடியும் என்பதில் அவனுக்கு உறுதி ஏற்படவில்லை; அனுமனைத் தனியே அழைத்து, இராமன் ஆற்றலுக்கு எடுத்துக் காட்டுக் கேட்டான்.
அனுமன் அவன் ஐயத்தை அறிந்து, தெளிவு படுத்தினான்; “வாலியைக் கொல்லும் ஆற்றல் இராமனிடம் உண்டு” என்று கூறினான்; வேண்டு மனால் அவன் ஆற்றலை அறிய வாய்ப்பினைப் பெறலாம் என்றும் அறிவித்தான்; மராமரங்கள் ஏழையும் ஒரே அம்பால் துளைக்கும் வல்லமை அவனிடம் உண்டு என்பதைக் கூறித் தெளிவுபடுத்தினான்.
சுக்கிரீவனும் “அதுவே தக்கவழி என்று சிந்தித்த வனாய் மகிழ்ச்சி கொண்டான்; இராமனை அணுகித் தன் கருத்தை அடக்கமாய் அறிவித்தான்.
“உன்னுடைய வில்லின் ஆற்றலையும் அம்பின் வேகத்தையும் உன் விரத்தையும் எம் வானரர் காண விழைகின்றனர்; இந்த மராமரம் ஏழனுள் ஒன்றைத் துளைத்துக் காட்டினால் எங்களுக்கு ஊக்கமாக இருக்கும்” என்று தெரிவித்தான்.
இராமன் அவன் ஏக்கத்தை அறிந்து செயல்பட்டான்; “ஒரு மரம் என்ன ஏழு மரமும் என் ஒரே அம்பால் துளைபடும்” என்று கூறினான்.
மராமரங்கள் ஏழும் ஒன்றன்பின் ஒன்றாய் வரிசையாய் நின்று கொண்டிருந்தன. இராமன் வில்லை வளைத்து, நாண் ஏற்றி அம்பு தொடுத்தான் அவ் ஒலி ஏழ் உலகும் கேட்டது; அனைவரும் நடுங்கினர்; அவ் அம்பு ஏழு மராமரங்களையும் துளைத்து முடித்து அவனிடம் வந்து சேர்ந்தது; ‘ஏழு’ என்ற எண்ணிக்கை உடைய பொருள்களும் உயிர்களும் “அது தம்மையும் தாக்குமோ?” என்று அஞ்சின.
இராமன் வில்லாற்றலைக் கண்டு சுக்கிரீவன் சொல்லொணா மகிழ்வும் நம்பிக்கையும் கொண்டான்; அதற்குமேல் அவர்கள் சிறிதும் தூரம் நடந்து சென்றனர்; வழியில் துந்துபி என்ற அசுரனது எலும்புக் கூடு மலை போல் படிந்து கிடந்தது; அதனைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
வற்றி உலர்ந்த அந்த எலும்புக்கூடு வழிமறித்தது. இராமன் தன் தம்பியிடம் அதை அகற்றுமாறு குறிப்புக் காட்டினான். இலக்குவன் தன் கால் நகத்தால் அதை உதைத்துத் துக்கி எறிந்தான். அது சென்ற இடம் தெரியாமல் நெடுந்தொலைவில் விழுந்து மறைந்தது. இலக்குவன் ஆற்றலை அறிய, இது சுக்கிரீவனுக்கு ஒரு வாய்ப்பாய் அமைந்தது.
“இது என்ன?” என்று இராமன் கேட்டான்.
“துந்துபி என்பவன் போர்த்தினவு கொண்டு வாலியொடு மோதினான்; வெற்றி தோல்வி இன்றி இருவரும் கட்டிப் புரண்டனர். இறுதியில் வாலி அவனைக்குத்திக் கொன்று தரையில் வீழ்த்தினான். அவன் தசைப் புண்களைக் கழுகும் நரிகளும் தின்று ஒழித்தன; அவன் எலும்பு மட்டும் அசையாமல் இங்குக் கிடந்தது” என்று கூறினான்.
“துந்துபியின் மாமிசப்பிண்டம் இந்த ருசியமுக பருவதத்தில் வாலியினால் தூக்கி எறியப்பட்டது; இங்கு மதங்க முனிவர் தங்கி இருந்தார். அவர் இதைக்கண்டு அருவெறுப்புக் கொண்டார். “இதை எறிந்தவன் இங்குவந்தால் அவன் தலை சுக்கு நூறாகுக” என்று சாபம் இட்டார்; அந்தச் சாபம்தான் எங்களுக்குப் புகலிடம் தந்தது” என்று விளக்கினான்.
சீதை சிந்திய கலன்கள்
அப்பொழுது வானரக்குலம், இடியும் அஞ்சும்படி வாய் திறந்து ஆரவாரித்தது. தூய நற்சோலையில் இராமனும் சுக்கிரீவனும் அமர்ந்து இன்னுரையாடினான்.
“நாயக! நான் உணர்த்துவது ஒன்று உண்டு” என்று சுக்கிரீவன் உரையாடினான்.
“இவ்வழி யாம் இருந்தபோது விண்வழியாய் இராவணன் கையகப்பட்ட அபலை ஒருத்தி, அழுத கண்ணிரோடு தான் முடித்து வைத்திருந்த அணிகலன் களைக் கீழே போட்டுச் சென்றாள்; அவற்றைப் பாதுகாத்து வைத்துள்ளோம்” என்று கூறி அவற்றை அவன்முன் வைத்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிட்கிந்தாகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், இராமன், கூறினான், அறிந்து, வாலி, சுக்கிரீவன், கொண்டான்