கம்பராமாயணம் (உரைநடை) - கிட்கிந்தாகாண்டம்
அனைவரும் அனுமன் உதவியை நாடினர். ‘அஞ்சற்க’ என்று சொன்ன அஞ்சனை மைந்தன் அனுமன், விண்ணுயர வளர்ந்து பேருருவம் கொண்டான்; மேலே திறந்து வெளியே வந்தான்; திருமால் வராக அவதாரம் எடுத்ததுபோலப் பிலத்தைப் பிளந்து மேலே வந்தான். சுயம்பிரபை விடுதலை பெற்றவளாய் விண்ணுலகம் போய்ச் சேர்ந்தாள். வானவர், அனுமன் அளவற்ற ஆற்றலை வியந்து பாராட்டினார்.
வழிப் பயணம்
அங்கிருந்து தொலை தூரம் நடந்து சென்று, குளிர்ந்த பொய்கைக் கரை ஒன்றினை அடைந்தனர். சூரியன் அஸ்தமித்தான். அப்பொய்கையில் குளிர்ந்த நீரைக் கையால் வாரிப் பருகி நீர்வேட்கை தீர்ந்தனர். தேனும் பழமும் அவர்களுக்குத் தெவிட்டாத உணவுகளாயின. பொய்கைக் கரை ஓரம் குளிர்ந்த காற்று வீசியதும் அவர்கள் மெய் மறந்து உறக்கம் கொண்டனர்.
அந்தப் பொய்கையைக் காத்து வந்த அசுரன், அதற்கு உரிமை கொண்டாடினான்; நீரைக் குடித்த வானரரைத் தாக்க நினைத்தான்; அங்கதன் மார்பில் ஒரு குத்து விட்டான்; அங்கதன் விழித்து எழுந்து பதிலுக்குத் தாக்கி, அந்த அசுரன் உயிரைப் போக்கினான்.
‘அவன் யாராக இருக்கக்கூடும்?’ என்று யோசித் தனர். கரடிகளுக்குத் தலைவனான சாம்பவான், “வேற் படையைத் தாங்கிய அவ் அசுரன், துமிரன் என்பவன் ஆவான்; அவன் அப் பொய்கைக்கு உரிமை உடையவன்; இவனைப் போல அசுரர் பலர் ஆங்காங்கே இருப்பர்” என்று கூறினான்.
பிறகு அவர்கள் சீதையைத் தேடிச் சென்று பெண்ணை நதியை அடைந்தனர்; தசநவம், உசநவம் என்னும் பெயர்களை உடைய நாடுகளைக் கடந்து விதர்ப்ப நாட்டை அடைந்தனர்; அதற்குப் பிறகு தண்ட காரண்யம், முண்டகத்துறை. பாண்டுமலை, கோதாவரி நதி, சுவணகம் நதி, குலிங்க தேசம், அருந்ததி மலை, மரகத மலை ஆகியவற்றை எல்லாம் கடந்து வேங்கடமலையை அடைந்தனர்; அங்குத் தவம் செய்து கொண்டிருந்த அருந்தவ முனிவர் திருவடிகளை வணங்கிப் பின், சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டை அடைந்தனர். அதன்பின் செந்நெல்லும், பாக்குமரமும். கரும்பும் நிறைந்த காவிரி நாட்டை அடைந்தனர்; அதன்பின் முத்தமிழ் வளர்க்கும் தென் தமிழ் நாடாகிய பாண்டிய நாட்டை அடைந்தனர். அதனையும் கடந்து சுக்கிரீவன் குறிப்பிட்ட மகேந்திர மலையைச் சேர்ந்தனர்.
சம்பாதியைச் சந்தித்தல்
அங்கதன் தலைமையில் தென்திசை நோக்கி நாலாப்பக்கமும் அனுப்பிய சேனைகளும் அந்த மயேந்திர மலையை அடைந்தன. கால் கடுக்க நடந்தும் அவை கண்டது, கலக்கமே தவிரக் கொண்ட இலக்கு அன்று; சீதையைக் காண முடியாதவர்களாய் மனம் நொந்து, வேதனையால் வெந்து, வெதும்பி உள்ளம் சோர்ந்தனர்.
“'சீதையைத் தேடி மண்முழுவதும் சுற்றினோம். சுக்கிரீவன் விதித்த காலம் திங்கள் ஒன்றும் கடந்துவிட்டது திரும்பிச் சென்று, இயலாமையை இயம்பினால் சுக்கிரீவன் இறப்பான், இராமனும் உயிர் துறப்பான்; அதனால் அங்குத் திரும்பிப் போவதில் பயனில்லை; தோல்வியை ஏற்றுக் கொண்டு இங்கேயே தவம் செய்து காலத்தைக் கழிக்கலாம்; அதுவும் சுமை எனத் தோன்றினால் நஞ்சினை உண்டு உயிர் விடுவோம்” என்று கருத்துத் தெரிவித்தனர்.
அங்கதன், சாம்பவன், அனுமன் மூவரும் ‘அடுத்துச் செய்வது யாது?’ என்று யோசித்தனர். உயிர் விடுவதே மேல் என்ற கருத்தை மற்றவர் சொல்ல, அனுமன் அதற்கு இசையவில்லை. “சடாயுவைப் போலப் போராடி. உயிர் துறப்பதுதான் ஆண்மைக்கு அழகு; செயலற்றுத் தற்கொலை செய்து கொள்வது கோழமைச் செயலாகும்; வீரச் செயலை வேண்டி நின்றவர் வேறு ஒன்றையும் எண்ணிப்பார்ப்பரோ? எலி தவளைகள் தான் குழிகளின் பதுங்கிக் கொள்ளும்; புலிகளும் யானைகளும் போன்ற நாம், போரிட்டு வீரமரணம் அடைதல்தான் புகழ் மிக்க செயலாகும்” என்று கூறினான்.
இராவணனை எதிர்த்துக் கழுகின் வேந்தனான சடாயு உயிர் விட்டான் என்ற செய்தி அவர்கள் பேச்சில் அடிபட்டது. அதைக் கேட்ட சம்பாதி என்னும் கழுகுக்கு அரசன், அவர்களை அடைந்து, சடாயுவின் மரணத்தைக் குறித்து விரித்து உரைக்குமாறு கேட்டுக் கொண்டான்.
இராவணன், தன்வாள் கொண்டு சடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்திய செய்தியை விவரமாக அனுமன் எடுத்துக் கூறினான். சம்பாதி சடாயுவின் தமை யனாவான். இச்செய்தி அவனைச் சோகத்தில் ஆழ்த்தியது.
தான் சடாயுவின் தமையன் என்பதை வானரர்களுக்குத் தெளிவுபடுத்தினான். ‘இராமனுக் காகச் சடாயு உயிர் விட்டான்’ என்ற செய்தி அவனுக்குப் பெருமையைத் தந்தது. பேருவகை அடைந்தான்; சம்பாதி இறக்கைகள் தீய்ந்து கருகிப் பறப்பதற்கு இயலாமல் மெதுவாய் நடந்து வந்தான். அவன் தன் இறகுகளை இழந்த சிறுமையை அவர்களுக்கு எடுத்து உரைத்தான்; தானும் தன் தம்பியும் விண்ணவர் நாடு அடைய, விண்ணுயரப் பறப்பதில் போட்டி போட்டுக் கொண்டு சென்றதாகவும், சூரியனின் வெப்பம் தாங்காமல் சடாயு இறக்கைகள் தீய உடல் காய வேதனைப்பட்டதாக வும், அவனைக் காப்பதற்காக அவனுக்கு மேலே தான் பறந்து, தன் சிறகுகளை விரித்து, அவனுக்கு நிழல் உண்டாக்கி யதாகவும் தெரிவித்தான். கதிரவன் வெம்மையால் சிறகுகள் தீய்ந்து தரையில் விழுந்தான் என்பதையும் “இராமன் தூதுவனான அனுமனொடு வானரப் படைகள் இராமன் திருப்பெயரைச் சொல்லும் அப்பொழுது சிறகுகள் தளிர்க்கும்” என்று சூரியன் சொல்லி இருந்தான் என்பதை யும் தெரிவித்தான். அதன்படி வானரரை இராமன் திருப் பெயரைக் கூட்டமாகக்கூடி விளிக்குமாறு சம்பாதி வேண்டினான். அவ்வாறே அவர்கள் வாயினிக்க, இராமன் திருப்பெயரைச் சொல்லச் சம்பாதியின் சிறகுகள் தழைத்து வளர்ந்தன. சம்பாதி இழந்த வலிமையை மீண்டும் பெற்றான்; கழுகுகளுக்குத் தலைவனாய் மீண்டும் அவனால் செயல்பட முடிந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிட்கிந்தாகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அடைந்தனர், அனுமன், உயிர், சம்பாதி, சடாயுவின், அங்கதன், நாட்டை, சடாயு, தான், வந்தான், மேலே, இராமன், சிறகுகள், கொண்டு, சென்று, கடந்து, கூறினான், குளிர்ந்த, செய்து, சுக்கிரீவன், அசுரன்