கம்பராமாயணம் (உரைநடை) - ஆரணியகாண்டம்
சீதையின் நினைவு ஒருபக்கம்; மானம் ஒரு பக்கம் இரண்டில் சீதையின் நினைவே வெற்றி கொண்டது. மயிலுடைச் சாயலாளை வஞ்சித்து எயிலுடைய இலங்கையில் சிறை வைப்பதற்குமுன் தன் இதய மாகிய சிறையில் வைத்தான்; வெயிலிடை வைத்த மெழுகுபோல் அவன் உள்ளம் மென்மை உற்றது; காமநோயால் பீடிக்கப்பட்டு விரக வேதனையால் வெந்து அழிந்தான்; சீதையை அடைந்தால் தவிரத் தன் துன்பம் தீராது என்ற முடிவுக்கு வந்தான்; அமைச்சர்களை அழைத்து அவர்களுடன் கலந்து பேசினான். பின்பு ஒரு முடிவுக்கு வந்தான், தனியனாக விமானம் ஏறி ஐம்புலன்களை அடக்கித் தவ நிலையில் இருந்த மாரீசன் இருந்த இடத்தை அடைந்தான்.
மாரீசன் வதை
இராவணன் வந்து அடைந்ததும் என்னவோ என்று அச்சம் கொண்டான் மாரீசன். கரியமலை போன்ற இராவணனை எதிர் கொண்டு வரவேற்று உபசாரங்கள் செய்து “இந்த வனத்துக்கு என் இருக்கை நோக்கி வந்த கருத்து யாது?” என்று கேட்டான்.
“என்னால் இயன்ற அளவு என் உயிரைத் தாங்கிக் கொள்ள முயன்றேன். இப்போது அதுவும் முடியாமல் மனத் தளர்ச்சி கொண்டேன், என் அழகும் பெருமையும் புகழும் ஒருசேர அழிகின்றன. இதற்குக் காரணம் யாது? சொன்னால் வெட்கக் கேடுதான்.”
“வன்மை மிக்கவர் மானிடர் ஆகிவிட்டனர். உன்மருகி நாசி இழக்கும் நிலையை உண்டாக்கினர்; இதைவிட நம் மரபுக்கு ஒர் இழிவு உண்டோ? கரனும் துஷணனும் உயிர் இழந்தனர் என்றால் இதைவிட அவமானம் வேறு என்ன இருக்கிறது? இருகை சுமந்தாய்!’ இனிதின் இருந்தாய்! கேட்டால் ‘தவம் செய்கிறேன்’ என்கிறாய்; ஒருவன் கட்டமைந்த வில்லால் இருவர் உயிரைப் பருகினான்; வெம்பிய மனத்தோடு வேகின்றேன், அவர்கள் எனக்கு ஒப்பிலார், என்பதால் போர் செய்யத் தயங்குகிறேன். பவழம் போன்ற செவ்வாய் வஞ்சியை வவ்வ உன் துணை நாடுகிறேன்; இப்பழியை நீதான் தீர்த்துத் தரவேண்டும்” என்றான்.
எரியும் நெருப்பிலே அரக்கை உருக்கிச் செவியில் கொட்டியதுபோல் இச் இச்சொற்கள் கடுமையாக இருந்தன; காதுகளைப் பொத்திக் கொண்டு அச்சம் நீங்கிச் சினத்தோடு சீரிய உரைகள் பேசினான் மாரீசன்.
“மன்னர், நீ நின் வாழ்வை முடித்தாய்; மதி அற்றாய், நீ தேடிக் கொண்ட அழிவு அன்று இது. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டுகிறது; செவிக்கு இன்னா எனினும், உனக்கு இதம் வேண்டி இவை சொல்கிறேன்.
“நீ தவம் செய்து பெற்ற செல்வ மெல்லாம் அவமே அழிக்கிறாய், இழந்தவை மீட்க முடியுமா? அறவழியில் ஈட்டிய செல்வத்தை அநீதிக்கு அழிக்கிறாய், பிறன் மனைவியைக் கவர்வது உன் பேராண்மைக்கு இழுக்காகும்; பாவமும் பழியும் சேரும், உன் கூட்டமே அழியும்;
“கரன் உன்னைவிட அதிகம் ஆற்றல் மிக்க சேனை கொண்டவன்; அவனை எதிர்க்க முடியாமல் தேரோடு மாண்டான்; விராதன் என்பவனைவிட வலிமை உடையவர் யார் இருக்கிறார்கள்? அவன்கதி என்ன ஆயிற்று? என் தம்பியான சுபாகுவும் என் தாயாகிய தாடகையும் இராமன் அம்புக்கு ஆற்ற முடியாமல் உயிர் விட்டனர். அவன் முன்நின்று போர் செய்ய முடியாமல் நான் உயிர் பிழைத்து ஓடிவந்து விட்டேன்; நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது; ஆற்றல்மிக்க அந்த இராமனோடு நீ மோதிக் கொள்கிறாய் என்று நினைக்கும்போது அச்சம் மிகுகிறது; அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு உன் ஆயுளை இழக்காதே!” என்று அறிவுரை கூறினான்.
“சீதையைக் கடத்திச் செல்வதில் யான் பின் வாங்க வில்லை; உன் குலத்தின் நலத்தைக் கருதித்தான் இவ்வளவும் சொல்கிறேன்; காமத்தால் கண்ணிழந்து நீ கருதியதை அடைய விரும்புகிறாய்; உன் ஆசைக்கு நான் குறுக்கே நிற்கவில்லை; உன் அழிவுக்குத் தடை போடுகிறேன்” என்றான்.
“நீ அறிவுரை கூற அமைச்சன் அல்லை; நான் இடும் கட்டளையை ஏற்று நீ நடந்து கொள்ள வேண்டும்; நீ ஒரு வீரன், தலைமையிடும் கட்டளையைத் தலைமேல் தாங்க வேண்டுமே தவிர, மற்றைய நிலைமைகளை எல்லாம் நீ பேசக்கூடாது; உயிருக்கு அஞ்சி நீ ஏதேதோ உளறுகிறாய்”.
“என் அழிவுக்காக யான் சிறிதும் கவலைப்படவில்லை; மூத்தவன் என்பதால் மூதுரை வழங்குகிறேன்; கட்டளையிடு; ஏற்கிறேன்” என்றான்.
“மன்மதன் என்னைத் துளைக்கிறான்; அந்த அம்புக்கு ஆற்றாமல் உயிர் விடுவதைவிட இராமனை எதிர்த்து உயிர் விடுவது புகழைத் தரும்; சீதைதான் என் துயருக்கு மருந்து; என் வாழ்வுக்கு விருந்து; அவளை என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும்” என்றான்.
“ஏற்கனவே இராமன் தாடகையைக் கொன்றதற்குப் பழிதீர்க்க, மான் வடிவத்தில் தண்டக வனத்தில் இரண்டு அரக்கர்களோடு சென்றிருக்கிறேன். அந்த இருவரும் அவன் அம்புக்கு இரையானார்கள். நான் தப்பித்து வந்து விட்டேன்” என்றான்.
“வஞ்சனையால்தான் அவனை வெல்ல வேண்டும்; மாயமான் வடிவத்தில் சென்று, அப்பெண் மானை மயக்கு; பெண்ணாகிய அவளுக்குப் பொன்னிறம் மிகவும் பிடிக்கும்; நீ பொன்மானாய் உருவெடு; அவள்முன் பாய்ந்து ஒடு; அவள் இம்மானைப் பிடித்துத் தருக என்பாள்; அதை இராமனால் மீற முடியாது; அவனுக்கு ஒட்டம் காட்டு; அவன் உன்மீது அம்புவிட்டால், ‘இலக்குமணா’ ‘சீதா’ என்று அவன் குரலில் ஒலமிடு; இலக்குவன் காவல் நீங்கும்; என் ஆவல் ஒங்கும்” என்றான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரணியகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - என்றான், அவன், உயிர், நான், முடியாமல், மாரீசன், அந்த, அம்புக்கு, வந்து, அச்சம்