கம்பராமாயணம் (உரைநடை) - ஆரணியகாண்டம்
“இந்தப் பர்ணசாலை உள் இருப்பது யார்?” என்று கேட்டான், பவளக்கொம்பு போன்ற சீதை, “உள்ளே வாருங்கள்” என்று வரவேற்றாள்; அவனும் அவள் தந்த இருக்கையில் அமர்ந்தான்.
“இந்த சாலை யாருடையது? இங்கு உறையும் அருந்தவன் யாவன்? நீவிர் யாவிர்?” என்று கேட்டான்.
“புதியவர்போல இருக்கிறது”” என்று அவனிடம் பரிவு காட்டிப் பேசினாள்.
“இராமனும் யானும் அவன் தம்பியோடு இங்குத் தங்கி இருக்கிறோம்; அன்னை சொற்கேட்டு இங்கு வந்திருக்கிறோம். அவர் பெயரினை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர் என்று நினைகிறேன்” என்றாள்.
“உம்முடைய பெற்றோர் யார்?” என்று கேட்டான்.
“சனகன் மகள்; என் பெயர் சானகி என்றாள்.
“முதியவரே நீர் எங்கிருந்து வருகிறீர்?”
“இராவணன் திருநகரில் இருந்து வந்திருக்கிறேன்; அவனுக்கு எந்தக் குறையும் இல்லை; எனினும், அவன் ஒரு மங்கையைத் தேடிக் கொண்டிருக்கிறான்” என்றான்.
“அரக்கர் நகரில் அருந்தவ முனிவராகிய நீர் எப்படித் தங்கி இருந்தீர்” என்று கேட்டாள்.
“நீ கருதுவதுபோல அரக்கர் தீயவர் அல்லர்” என்றான்.
“தீயவர்களோடு சேர்கிறவர்கள் நல்லவர்களாய் இருக்க முடியாதே”
“வல்லமை உடையவர் அரக்கர்; அவர்களை அனுசரித்து வாழ்வதுதான் அறிவுடைமை” என்றான்.
“அரக்கரை அடியோடு ஒழிக்க இராமன் காத்திருக்கிறான்; அவர்கள் அழிந்தபின்னரே உலகம் சீர்படும்” என்றாள்.
“மனிதர் வலியவரான அரக்கரை அழிப்பார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது; யானைக் கூட்டத்தை ஒருசிறு முயல் வெல்லாது; ஆண் சிங்கத்தை ஒரு மான் குட்டி எப்படி வெல்லும்?” என்று கேட்டான்.
“இராமன் விராதனையும் சூர்ப்பனகையையும், கரன் முதலானவரையும் கொன்றது உமக்குத் தெரியாது போலும்! ஆண் சிங்கம் என்பது இராமன்தான்; அரக்கர்தாம் மான் கூட்டம்” என்றாள்.
“இராவணன் ஆற்றல் மிக்கவன்; அது தெரியாமல் நீ பேசுகிறாய்” என்றான்.
“பரசுராமனை வென்றவன் இராமன்; அவன் ஆற்றலை நீ அறியாமல் பேசுவது வியப்பாக இருக்கிறது” என்றாள்.
அவன் பெருஞ்சினம் கொண்டான்; அதனால், அவன் மாயவேடமும் மறைந்தது; தன் முன்னால் இருப்பவன் இராவணன் என்பதைச் சீதை அறிந்தாள்; அவனிடமிருந்து தப்பிச் செல்ல வழியறியாமல் தவித்தாள்.
“தேவர் எனக்கு ஏவல் செய்கிறார்கள்; புழுக்களைப் போல வாழும் மானிடர் அரக்கனாகிய என்னிலும் வலியவர்” என்று பேசுகிறாய்; உன்னைப் பிசைந்து தின்று விடுவேன்; அதன்பின் நீ இல்லாமல் நான் வாழ முடியாது என்பதால்தான் தயங்குகிறேன்” என்றான்.
“நீ கவலைப்படாதே; என் செல்வச் சிறப்பில் நீ மகிழ்ச்சியோடு இருக்கலாம்” என்று தொடர்ந்தான்.
“நான் இராமன் மனைவி; நீ நாயினும் கேடானவன்; இராமனது கொடிய அம்பு பாய்வதன்முன் தப்பி ஒடிவிடு!” என்று கூறினாள்.
“அந்த அம்பு என்னை ஒன்றும் செய்யாது. அது மலராக எனக்குப்படும், நீ என் விருப்பத்தை நிறைவேற்றி எனக்கு உயிர்ப் பிச்சை கொடு” என்று இரந்து அவள் கால்களில் விழுந்து வனங்கினான். அவள் இராமனையும் இலக்குவனையும் ‘இறைவா இளையாங்னே’ என்று கூவிஅழைத்தாள். அவனுக்கு பிரம்மனால் ஏற்பட்டிருந்த சாபத்தால் அவளைத் தொட அஞ்சினான். அவளைத் தொடாமல் தரையோடு பர்ண சாலையைப்பெயர்த்து எடுத்து விமானத்தில் வைத்து விண்ணில் பறந்தான். மேகத்திலிருந்து நிலத்தில் விழும் மின்னலைப்போல அவள் மயங்கி விழுந்தாள். மயக்கம் நீங்கி ‘ஒ’ என்று கதறினாள்.
“நீ ஒரு கோழை; அதனால்தான் இந்த வஞ்சகச் செயலை மேற்கொண்டாய்” என்று விளம்பினாள்.
“மனிதரிடம் போர் செய்தால் அது என் வீரத்துக்கு இழுக்கு; வஞ்சனைதான் வெற்றி தரும்” என்றான்.
“சித்திரப்பாவை நிகர்த்த சீதை அவன் கூறுவதை எள்ளி நகையாடினாள். கற்புடைய பெண்களை வஞ்சிப்பது குற்றமில்லையா?” என்று கேட்டாள்.
சீதையின் குரல் கேட்டுக் கழுகின் வேந்தன் சடாயு என்பான் வந்து இடை மறித்தான்.
“அடே! எங்கே போகிறாய்? நில், நில்”” என்று கூவிக்கொண்டு சடாயு வழி மறித்தான்.
“நீ அழிவைப் பெறப்போகிறாய். உன் சுற்றத்தாரையும் அழிக்கிறாய். இராமன் முன் உன் ஆற்றல் நிற்காது. ஏன் வீணே அழிவைத் தேடிக் கொள்கிறாய்; சீதையை விட்டுவிடு” என்றான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரணியகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - என்றான், அவன், என்றாள், இராமன், அவள், கேட்டான், சீதை