கம்பராமாயணம் (உரைநடை) - ஆரணியகாண்டம்
“கானிடை அடைந்து காவல் புரிகின்ற வீரர் இருவர், மன்மதனைப் போன்ற அழகு உடையவர்; அவர்கள் மானிடர்தான் எனினும் மாஇடர் செய் துள்ளனர்; வாள் உருவித் தடிந்தனர்” என்றாள்.
“மானிடருக்கு இத் துணிவு வாராது; நீ ஏதோ பெரிய தவறு செய்திருக்கிறாய்; அதனால்தான் அவர்கள் பொறுக்க முடியவில்லை இந்த எல்லைக்குச் சென்று இருக்கிறார்கள்; நடந்ததை அச்சமின்றிச் சொல்” என்று கேட்டான்.
“உருவிலே மன்மதனை ஒப்பர்; தோள் வலிமை யில் மேருமலையை நிகர்ப்பர்; முனிவர் வாழ்வில் அவர்கள் அக்கறை கொண்டவர்; வில்லாற்றலும் வீரமும் உடைய அவர்கள் உன்னைத் துரசாக மதிக்கின்றனர்; அரக்கரை வேரோடு அழிக்க உறுதி பூண்டுள்ளனர்; அவர்கள் தசரதன் புதல்வர்; இராமன் இலக்குவன் என்பன அவர்கள் பெயர்கள்” என்றாள்.
“அங்கிருந்த நம் இனத்தவர் அவர்களை எப்படி விட்டு வைத்தனர்?” என்று கேட்டான்.
“கரனும் தூஷணனும் என் குறையைக் கேட்டனர். பின் அவர்களை எதிர்த்து மாண்டுவிட்டனர்” என்றாள்;
“நீ செய்த தவறு என்ன? மூக்கும் செவியும் அறுக்க நீ செய்த பிழை யாது?” என்று கேட்டான்.
“பெண்ணால் வந்த பெரும்பிழை” என்றாள்.
“யார் அவள்?”
“கொடி போன்ற மென்மை உடைய அப் பேரழகியின் பாதம் தீண்ட இந்தப் பார் பாக்கியம் செய்தது; அவள் பேர் சீதை” என்று கூறி அவள் வடிவினை எல்லாம் பாராட்டத் தொடங்கினாள்.
“அவள் சொற்கள் காமரம் என்னும் பண்ணிலே இசைக்கும் பாடலாகும்; திருமகளும் அவளுக்குப் பணிப் பெண் ஆகும் தகுதியைப் பெறமாட்டாள்; அவள் கூந்தல் மேகத்தைப் போன்றது; பாதங்கள் செம்பஞ்சு போன்றவை; விரல்கள் பவளத்தைப் போன்றவை; வதனம் தாமரை மலரைப் போன்றது; கண்கள் கடலைப் போன்றன; “ஈசனார் கண்ணால் அநங்கன் எரிந்து அழிந்தான்” என்பது பொய்யுரை, வாசம் நாறும் கூந்தலாளைக் கண்டு அவளை அடைய முடியாமல் அவன் வெந்து தேய்ந்தான் என்பதுதான் உண்மை”.
“வேலினையும் வாளினையும் வெற்றி கொண்ட கண்ணை உடைய அழகியை ஒவியத்திலும் எழுத முடியாது; இவளைப் போன்ற பேரழகியைத் தேவர் உலகத்திலும் காண முடியாது; நாகர் உலகத்திலும் காண முடியாது; இந்த மண்ணுலகத்திலும் பார்க்க முடியாது. இம்மூவுலகத்திலும் காண முடியாத பேரழகி அவள்”.
“அவள் தோள் அழகை எடுத்துச் சொல்லு வேனோ? அவள் முகத்தில் உலவுகின்ற கண் அழகைச் சொல்லுவேனோ! மற்றைய அங்கங்களில் அழகை வருணிப்பேனோ! அவள் அழகைத் தனித்தனியே சொல்லும் ஆற்றல் எனக்கு இல்லை; நாளையே நீ பார்க்கப் போகிறாய்; அதனால் யான் எடுத்துச் சொல்லத் தேவை இல்லை”.
“வில்லைப் போன்றது நெற்றி என்றாலும், வேல் போன்றது விழிஎன்றாலும், முத்துப் போன்றது பல் என்றாலும் சொல்ல அழகாக இருக்குமேயன்றி உண்மையை உரைத்தது ஆகாது. புல்லைப் போன்றது நெல் என்று கூறினால் எப்படி இருக்குமோ அதனைப் போன்றதுதான் இவ் உவமைகள்.”
“இந்திரன், இந்திராணியைப் பெற்றான். ஈசன் உமையைப் பெற்றான். தாமரைச் செங்கணான் செந்திருவைப் பெற்றான்; சீதையை நீ பெறறால் நீ தான் அவர்களைவிட மேன்மை பெற்றவன் ஆவா”
“பார்வதியை இடப் பாகத்தில் ஒருவன வைத்தான்; தாமரையில் வாழும் திருமகளை மார்பகத்தில் ஒருவன் வைத்தான்; பிரமன் நாவில் வைத்தான்; மின்னல் போன்ற இடையாளாகிய சீதையை வீரனே! நீ பெற்றால் எப்படி வைத்து வாழப் போகிறாய்?"
“மழலை மொழி மகிழப் பேசும் அழகியைப் பெற்ற பின் கொள்னை மாநிதிகளை அவளுக்கே கொடுப்பாய்; சீதையை நீ பெறுமாறு செய்வதால் நான் உனக்கு நல்லவள் ஆகின்றேன்; ஆனால், கிள்ளைபோல் மொழி பேசும் உன் விருப்ப மாதர்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அல்லவா?”
“அவள் தெய்வ மகளும் அல்லள்; தாய் வயிற்றில் பிறந்த மானுட மகளும் அல்லள், மண்மகள் தந்த மாமகள் ஆவாள்; சிற்றிடையாளாகிய சீதை என்னும் மானை நீ பெற்றுக் கொண்டு இராமன் என்னும் யானையை வளைத்துப் பிடித்து எனக்கு விளையாடத் தந்துவிடு.”
“அன்னவள் தன்னை உன்னிடம் சேர்க்கவே அவளை அணுகினேன்; அவ் இராமன் தம்பி என்னை இடையிலே புகுந்து மூக்கு அரிந்துவிட்டான் அப்பொழுதே என் வாழ்வினை முடித்துக் கொண்டு இருப்பேன்; உன்னிடம்; சொல்லிவிட்டு உயிரைவிடத் துணிந்தேன்” என்று சொல்லி முடித்தாள்.
அவள் பற்றவைத்த நெருப்பு அவனைச் சுட்டெரித்தது. சீதையின்பால் சிந்தை இழந்த அவன் அவள் நினைவாக மாறிவிட்டான், இராமனால் உயிரிழந்த தன் தம்பி கரனையும் மறந்தான்; தன் தங்கையின் மூக்கைத் தடிந்த இலக்குவன் மீது கொண்ட பகையையும் மறந்தான்; அதனால், தனக்கு நேர்ந்த பழியையும் மறந்தான்; தான் பெற்றிருந்த வரங்களை எல்லாம் மறந்தான்; சூர்ப்பனகை சொல்லிக் கேட்ட மங்கையை மட்டும் அவனால் மறக்க முடியவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரணியகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவள், போன்றது, முடியாது, என்றாள், மறந்தான், சீதையை, வைத்தான், பெற்றான், “அவள், உடைய, கேட்டான், இராமன், எப்படி, எல்லாம், என்னும்