கம்பராமாயணம் (உரைநடை) - ஆரணியகாண்டம்
“எனது மூக்கை அறுத்துவிட்டீர்; என்னை நீர் ஏற்றுக் கொண்டால் மூக்கை மறுபடியும் உண்டாக்கிக் கொள்வேன்; முழு அழகையும் பெறுவேன்; அதிக மான நெடிய மூக்கும் மடந்தையர்க்கு மிகைதானே”.
“பெண்ணுக்கு மிகைப்பட அழகும் பகையாய் முடியும்; குடும்பப் பெண்ணுக்குக் கொண்டானை மகிழ்விக்கும் உரு இருந்தால் போதாதோ!”
“மூக்கு அழகு என்பதால் பிறர் என்னை நோக்கு வர்; அது விருப்பை ஊக்குவிக்குமல்லவா? என்மீது கொண்டுள்ள பிரியத்தால் மூக்கு அறுத்தீர் ஆதலின், உம்மிடம் என் அன்பு இருமடங்கு ஆகிறது”.
“அறுபட்ட மூக்கு உடையவளோடு எப்படி வாழ்வது? என்று உன் தம்பி திகைக்கலாம்; நீ விடுபட்ட இடையை உடைய மெல்லியலோடு சேர்ந்து வாழ வில்லையா? இராவணனை அழிப்பதில் உங்களுக்கு உற்ற துணையாவேன்; என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று தொடர்ந்து தொல்லைகள் தந்தாள். அதற்கு ஒர் எல்லை காண விரும்பினர். அதனால் வில்லை வளைத்து அம்பு தொடுக்க இளயவன் இராமன் ஆணையை எதிர் நோக்கி நின்றான். “இனி இங்கிருந்து பல்லைக் காட்ட முடியாது” என்று உணர்ந்த சூர்ப்பனகை பழி தீர்க்கும் படலத்துக்குச் சென்றான்.
கரன்வதை கதை
செக்கர் வானம் மேல்தழுவிய கரிய மேகம்போல் அவள் காட்சி அளித்தாள், வெம்மையான தீயில் புழுங்கும் பாம்பு எனப் புரண்டாள்; கரன் இராவணன் உடன் பிறந்த தம்பி, அவன் அந்த எல்லைக்குக் காவலனாக இருந்தான்; அவனிடத்தில் சென்று தன்துயரத்தை வெளியிட்டாள்; மூக்கு அறுத்தவரை வேர் அறுக்கும்படி வேண்டினாள்.
கரன் போருக்குப் புறப்பட்டான்; அவன் படை வீரர் பதினான்குபேர் அவனைத் தடுத்து நிறுத்தித் தாமே களம் நோக்கிச் சென்றனர்; அவர்கள் முதற்பலி ஆயினர்.
கரனின் அரக்கர்சேனை கடலெனத் திரண்டு இலக்குவனை எதிர்க்க வந்தது; இலக்குவன் போர் செய்யத் துடித்தான்; தன்னை அனுப்புமாறு வேண்டினான்.
“தவம் செய்யும் முனிவர் அரக்கர்களை அழிக்கும் பணியைத் தன்னிடம் ஒப்புவித்துள்ளனர். அதனைத் தானே செய்து முடிக்க வேண்டும்” என்று கூறி வில்லேந்திய வண்ணம் இராமன் பகைவர்களைச் சந்தித்தான்; சிங்கத்தைச் சூழ்ந்த யானைக் கூட்டம் போலக் கரன்படைகள் இராமனைச் சூழ்ந்தன. அவர்களுக்குத் திரிசிரா (முத்தலையன்) என்பவன் தலைமை தாங்கினான். அவனுடைய மூன்று தலைகளும் மூலைக்கு ஒன்றாகச் சென்று உருண்டன. படைவீரர் அச்சம்கொண்டு சிதறி ஒடினர். துடணன் என்பவன் அடுத்துத் தலைமை தாங்கினான். அவன் கரன் தம்பி; அவனும் போர்க்களத்தில் மடிந்தான்.
பிறகு கரனே களம்நோக்கித் தேரைச் செலுத்தினான்.
இராமனுக்கும் இராவணனுக்கும் நடக்க இருக்கும் போருக்கு முன்னிகழ்வாகக் கரனோடு நடந்த போர் அமைந்தது. இராமன் ஒன்பது அம்புகளை ஒருசேரக் கரன் மீது ஏவினான். அவற்றிற்கு எதிராக அம்புகளைச் செலுத்திக் கரன் அவற்றை அறுத்து அழித்தான்; அம்பு மழையினால் இராமனது உருவம் முழுவதையும் மறைத்து விட்டான். அதைக் கண்டு தேவர் நடுங்கினர். இராமன் வீராவேசம் கொண்டு வில்லை வேகமாக வளைத்தான்; அது முறிந்து விட்டது.
வில்லிழந்து இராமன், நிராயுத பாணியாக ஆகி விட்டான். அடுத்து என்னை நடக்குமோ? என்று அஞ்சும் சூழ்நிலை ஏற்பட்டது. பரசுராமனிடமிருந்து பெற்ற மாபெரும் வில்லை வருணனிடம் கொடுத்திருந்தான்; அதற்காகக் கைநீட்டினான்; வருணன் கொண்டுவந்து சேர்த்தான்; அந்த வில் அவனுக்குக் கைகொடுத்தது: அதனால் ஏவிய அம்பு, கரனின் உயிரைக் குடித்தது.
சூர்ப்பனகை செயலிழந்து வயிற்றிலும் வாயி லும் அடித்துக்கொண்டாள்; மூக்கோடு தான் முடிந் திருக்கலாம்; வாக்கினால் கரன் உயிர் குடித்தமைக்கு வருந்தினாள்; எனினும், அந்தத் துன்பம் நீடித்திருக்கவில்லை; இராமனை அடைய வேண்டுமென்ற ஆசை அவளை வெறி கொள்ளச் செய்தது; “இராவணனிடம் சென்று இராமனைப் பிடித்துத்தரும்படி கேட்கலாம்” என்று நினைத்த வண்ணம் இலங்கை நோக்கி விரைந்தாள்.
இராவணன் தன் அத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றிருந்தான், ஊர்வசி, திலோத்தமை முதலிய தெய்வ மகளிர் நடனமாடினர். அவன் செல்வக் களிப்பிலும் காமக் களிப்பினும் தன்னை மறந்து தருக்கோடு வீற்றிருந்தான். தன்னை வெல்வாரும் கொல்வாரும் இன்றித் தரணியை ஆண்ட காவலன் அவன்.
இலங்கை நகரின் வடக்கு வாயிலில் மூக்கிலும் செவியிலும் குருதி கொட்டச் சூர்ப்பனகை முறையிட்டுக் கொண்டே வந்தாள். அந்நகர் அரக்க மகளிர் இதைக் கண்டு வயிற்றில் அடித்துக் கொண்டு இரங்கி அழுதனர். இராவணன் தங்கை மூக்கு அற்றுத் துணையின்றிப் போக்கற்று வந்திருப்பதை அவர்கள் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இலங்கை அரசன் கால்களில் விழுந்து புரண்டாள்; வேந்தன் இதைக் கண்டு. அதிர்ச்சியும் ஆவேசமும் கொண்டான், இடியொலிபோல் பேரார வாரம் செய்து, “யாவர் செயல்?” என்று கேட்டான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரணியகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - கரன், இராமன், அவன், என்னை, மூக்கு, சென்று, தன்னை, இலங்கை, கண்டு, சூர்ப்பனகை, தம்பி, வில்லை, அம்பு, இராவணன்