தமிழ் - தமிழ் அகரமுதலி - முகவுரை
பெப்ரிசியசு என்பார் 1779-ல் 185 பக்கங்கள்கொண்ட தமிழ்-ஆங்கிலச் சிற்றகராதி ஒன்றை வெளியிட்டார் . இதில் 9000 சொற்கள் இடம்பெற்றிருந்தன . இதன் பின்னர் இராட்லர் நான்கு பகுதிகளாகத் தம் தமிழ் - ஆங்கில அகராதியை அச்சிட்டார் ( 1834 , 1837 , 1839 , 1841 ) . வின்சுலோ அகராதி 1862-லும் தரங்கம்பாடி அகராதி 1897-லும் வெளிவந்தன .
தமிழ் - ஆங்கில அகராதிகளில் தமிழ்ச்சொற் பொருளை முதலில் ஆங்கிலத்தில் தந்து அடுத்துத் தமிழ் விளக்கமும் சேர்த்து அமைப்பாராயினர் ; பெயர், வினை முதலிய சொற்பாகுபாடுகளை இனஞ்சுட்டும் குறிப்புகளும் உடன்சேர்த்துத் தந்துள்ளனர். சில அகராதிகளில் ஒரு சொல்லோடு தொடர்புடைய பிற சொற்கள், தொடர்கள் ஆகியவற்றையும் உடன் இணைத்து அமைக்கலாயினர்.
தமிழ் - ஆங்கில அகராதிகளுள் வின்சுலோ அகராதிதான் 67000 சொற்களைக் கொண்ட பேரகராதியாய் விளங்குகிறது. இதில் விடுபட்டுப்போன பல சொற்கள், பொருள்களைப் போப்புப் பாதிரியார் தம்முடைய படியில் குறித்துவைத்திருந்தார் . இவருடைய அகராதிப்படியை அடிப்படையாக வைத்துப் பல்வேறு புதுச் சேர்க்கைகளுடன் அமைந்ததே தமிழ் லெக்சிகன் எனப்படும் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி. தமிழில் வந்த மிகப் பெரிய இருமொழி அகராதி இதுவே. அறிஞர் பலர் கூடிப் பல்லாண்டுகள் உழைத்து உருவாக்கப்பெற்றுது இந்த அகரமுதலி. இதன் ஆறு தொகுதிகளையும், இணைப்புத் தொகுதியையும் பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளையவர்கள் பதிப்பித்து 1939-ல் முற்றுவித்தார்கள். இஃது உலகப் புகழ்பெற்ற ஒரு பேரகராதியாக இப்பொழுது விளங்கிவருகிறது .
தமிழ் லெக்சிகனின் சிறப்பு நிலை:
தமிழ் - தமிழ் அகராதி , தமிழ்- ஆங்கில அகராதிகள் பலவாக வளர்ந்துவந்த போதிலும்் அவற்றில் பல குறைபாடுகள் நீக்கப்பட வேண்டியனவாயிருந்தன .இதுகுறித்துப் பேராசிரியர் ச. வையாபுரிப் பிள்ளையவர்கள் தெரிவிக்கும் கருத்துரை வருமாறு :
முதலாவது , சங்க இலக்கியம் முதலிய ஆதார நூல்கள் பல வின்சுலோவுக்குப் பின்னரே அச்சில் வெளிவந்துள்ளன . அவற்றை நன்கு பயன்படுத்துவது அவசியமாயிற்று.
இரண்டாவது , சொற்களுக்குப் பொருள் எழுதுவதில் வின்சுலோ முதலியோரது அகராதிகள் ஒன்வொன்றிலும் ஒவ்வொரு நயமிருந்தது . இந் நயங்கள் அனைத்தையும் ஒருங்குகொணர்ந்து அவற்றை இன்னும் ஒழுங்காக விருத்திசெய்வது அவசியமாயிருந்தது.
மூன்றாவது , சொற்பொருள்களை அமைப்பதில் சில நியமங்களைக் கையாளுவதும் அவசியமாயிற்று. தமிழ் அகராதி நூல்கள் பலவும் பொருள்களையுங்கூட அகராதிக்கிரமத்தில் அமைத்தன. இது தவறாகும். வரலாற்று முறையிலும் இயலாத இடங்களில் கருத்துத் தொடரும் முறையிலும் இவற்றை அமைக்கவேண்டுவது இன்றியமையாததாகும்.
நான்காவது , சொல்லுக்குப் பொருளாகப் பரியாயச் சொற்களைக் கொடுப்பது போதாது. சொல்லுக்கு உரிய பொருளின் லட்சணத்தையும் வரையறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் வழக்கமே தமிழ் அகராதிகளில் பெரும்பாலும் இல்லாமலிருந்தது. பரியாயச் சொல்லைக் கூறுவதுதான் லட்சணமாகக் கருதப்பட்டது. தமிழ் - ஆங்கில அகராதிகளில் கொடுக்கப்பட்டுள்ள லட்சணங்களும் ஒவ்வொரு வகையில் பிழைபாடு உடையனவாயிருந்தன. இக் குறைகளை எல்லாம் நீக்கவேண்டுவது அவசியமாயிற்று.
ஐந்தாவது , சொல்லின் பிறப்பைக் குறித்து அகராதியாளர்கள் பெரும்பாலும் கவனஞ் செலுத்தியதே இல்லை . வடமொழி மூலங்கள் சிலவற்றிற்குத் தரப்பட்டிருந்தன. பிற திராவிட மொழிகளினின்று பிறப்பொத்த சொற்கள் சுட்டப்பெறவில்லை.
ஆறாவது , மேற்கோள் காட்டுவதில் தகுதியான நியமங்கள் கையாளப்படவில்லை . தக்க நியமங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள் கொடுப்பது அவசியமாயிருந்தது .
மேற்குறித்த அம்சங்களிளெல்லாம் திருத்தமெய்தியது சென்னை சர்வ கலாசங்கத்தார் வெளியிட்டுள்ள ' தமிழ் லெக்சிகன் ' ஆகும் . *
இத்தனை சிறப்புடைய தமிழ் லெக்சிகன் தமிழுணர்ந்தார்க்கேயன்றிப் பிறமொழியாளர்க்கும் பெரிதும் பயன்படும் பேரகராதியாக விளங்கிவருகிறது . இதனினும் மேம்பட்ட சிறப்புடைய பேரகராதி இனித்தான் தோன்றவேண்டும் .
ஒருசொற் பல பொருள் விளக்கம்:
பேரகராதிகள் பலவாக வளர்நிலையுற்றபோதிலும் ஆங்கிலத்தில் இருப்பதுபோலப் பல்வேறு படிநிலையாளர்க்கும் ஏற்றவகையில் இயற்றப்பட்ட அகராதிகள் சென்ற நூற்றாண்டில் அதிகமாயில்லை சூடாமணி நிகண்டின் பதினோராம் தொகுதியில் உள்ள ஒருசொற் பல பொருள்களை அகராதியாக மாற்றி அமைக்கும் முயற்சி சென்ற நூற்றாண்டின் மத்தியில் தோற்றமாயிற்று . அண்ணாசாமிப் பிள்ளை என்பவர் , ' ஒருசொற் பலபோருள் விளக்கம் ' என்னும் அகராதியை 1850-ல் வெளியிட்டார் . இதில் அத் தொகுதியில் உள்ள 1575 சொற்களும் அகராவரிசையில் தரப்பெற்று அவற்றிற்கு நிகண்டாசிரியர் தந்த பொருளும் அதற்கு விளக்கமும் சேர்த்துத் தரப்பட்டுள்ளன . இஃது இலக்கிய மாணவர்க்கு ஒரு சிற்றகராதியாகப் பயன்படத்தக்கது .
அகராதிச் சுருக்கம்:
சென்ற நூற்றாண்டில் பள்ளியிற் பயிலும் மாணவர்க்கு ஏற்றதாகச் செய்து அளிக்கப் பெற்ற சிறிய அளவிலான நூல் , ' அகராதிச் சுருக்கம் ' .இது கோ.விஜயரங்க முதலியாரால் 1883-ல் வெளியிடப்பெற்றது . இதற்கு அவர் தந்த ஆங்கிலத் தலைப்பு 'தமிழ் பாக்கெட் டிக்ஷனரி' (Tamil Pocket Dictionary) என்பதாகும் .
இதன் ஆசிரியர் , மாணவர்க்கு ஆங்கிலமும் தமிழும் பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் . ஆங்கிலத்தில் மாணவர் படிநிலைகளுக்குத் தக்கவண்ணம் பல்வேறு தரங்களில் அகராதிகள் இருப்பது கண்டு , தமிழ் மாணவர்க்காக இத் தொகுப்பினை ஆக்க முற்பட்டார் . ஆங்கில அகராதிகளின் போக்கினைப் பின்பற்றி அகரவருக்கம் முதல் வகரவருக்கம் வரை 3615 சொற்களுக்குத் தெளிவான முறையில் பொருள்விளக்கமும் தந்துள்ளார் . ஒவ்வொரு பக்கத்திலும் அமைந்த எழுத்து வருக்கத்தில் தொடங்கும் குறட்பா ஒன்றையும் தலைப்பில் சேர்த்துள்ளார் .
இந்த அகராதித் தொகுப்பைச் சென்னைச் சர்வ கலாசாலைத் தமிழ்த் தலைமைப் புலவர் கோ . இராசகோபாலப் பிள்ளை பரிசோதித்துத் தந்துள்ளார் என்பதும் தெரியவருகிறது . அகராதியின் முடிவில் பெயரும் வினையுமாய்ப் பொருள் தரும் சொற்களும் (237 ) அகரவரிசையில் அமைக்கப்பெற்று அவற்றிற்குரிய பெயர் வினைப் பொருள்களும் ஓர் அட்டவணைபோலச் சேர்க்கப்பட்டிருக்கின்றன . இப் பகுதி , மாணவர்க்குச் சொல்நிலை தெரிந்து பொருள்காணவேண்டும் என்னும் பெற்றியை விளக்குவதாகும் .
இலக்கியச்சொல்லகராதி:
இலக்கியச்சொல்லகராதியை ஆக்கியவர் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் பிள்ளையாவார் . இவர் செய்யுளும் உரைநடையும் வல்ல பெரும்புலவர் . சில நூல்களைத் தம் புத்துரையுடன் பதிப்பித்துமுள்ளார் . புத்தாக்கமாக இவர் இயற்றிய இலக்கணச்சந்திரிகை , வினைப் பகுபத விளக்கம் என்னும் இருநூல்களும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன . இவை தமிழ் மாணவர் இலக்கணப்புலமை நிரம்பக் கற்கவேண்டிய விளக்க நூல்களாகும் . இவர் நீதிபதி கு. கதிரைவேற்பிள்ளையின் பேரகராதிக்கும் துணைநின்றவர் . இத்தகு பெரும்
புலமையும் பெரும் பயிற்சியுமுடைய இப் புலவர்பெருமான் 1914ஆம் ஆண்டில் இந்த அகராதியை வெளியிட்டார் .
பெயருக்கு ஏற்றாற்போல இலக்கியச் சொற்களே இதில் பெரும்பாலும் தரப்பட்டுள்ளன. இலக்கியத்துள் பயின்றுவரும் அருஞ்சொற்களைக் கொண்டது இத் தொகுப்பு .
நிகண்டு நூல்களிலும் பிற பெயர்த்தொகுதிகளிலும் பாரதம் , இராமாயணம் , கலித்தொகை , சிந்தாமணி முதலிய இலக்கியங்களிலுமிருந்து புதியனவாகச் சொற்களைத் தொகுத்துத் தந்துள்ளார் . சொற்களேயன்றிப் பொருள்களும் புதியனவாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பொருள்களுக்குச் சான்றாகவுள்ள இலக்கிய மேற்கோள்களையும் எடுத்துத் தந்திருப்பது இந்த அகராதியின் தனிச் சிறப்பாகும் . இஃது இலக்கியம் கற்கும் மாணவர்க்குப் பயன்படத்தக்க சிறப்பு அகராதி ; ஒரு சிற்றகராதி .
மாணவர் தமிழகராதி:
சென்ற நூற்றாண்டிலே 1883 - ல் கோ. விஜயரங்க முதலியார் தொகுத்து வெளியிட்ட பள்ளியிற் பயிலும் மாணவர்க்கான ' அகராதிச் சுருக்கம் ' மாணவர் பொருட்டாகவே இயற்றப் பெற்றது. அதன்பின் 1920ஆம் ஆண்டுவரை மாணவர்க்கான அகராதிகளை ஆக்குவதில் அறிஞர் பெருமக்கள் ஈடுபட்டிலர் .இந்த வகையில் இருபதாம் நூற்றாண்டில் மாணவர்க்காகவே செய்யப் பெற்ற முதல்நூல் என்று போற்றத்தக்கது ' மானவர் தமிழகராதி ' . இதனைத் தொகுத்து அளித்தவர் தமிழப் பெரும் பேராசிரியர் எஸ். அனவரதவிநாயகம் பிள்ளையவர்களாவார் . 1921 - ஆம் ஆண்டிலே சென்னை ஸி . குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் புத்தக வெளியீட்டாளர் இதனை வெளியிட்டனர் . இஃது ஏறத்தாழ 26000 சொற்கள் கொண்டதொரு சிற்றகராதியாகும் . இது பள்ளியிற் பயிலும் மாணவர்க்குப் பெரும் பயனுடையது .
மாணவர்க்கான சிற்றகராதிகள்:
இதன் பின்னர் மாணவர்க்கென ஆக்கப்பெற்ற அகராதிகள் பல ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து வெளிவரலாயின . இவற்றின் எண்ணிக்கை இதுநாள் வரை எறத்தாழ 20 - க்கு மேலாக உள்ளன . இவற்றைப் பின்வரும் காலமுறை அட்டவணை விளக்கும் . அடுத்துள்ள அட்டவணையிற் சுட்டிய அகராதிகளுள் முதல் நான்கு அகராதிகள் முற்பட விளக்கப்பெற்றன . இனி ஏனைய அகராதிகள் பற்றிய வரலாறுகளைக் காண்போம் .
சொற்பொருள் விளக்கம:்
'சொற்பொருள் விளக்கம் என்னும் தமிழகராதி ' 1924 - ல் யாழ்ப்பாணத்தில் பிறந்தது . இது கிட்டத்தட்ட குமாரசாமிப் பிள்ளையின் இலக்கியச் சொல்லகராதி போன்றது எனலாம் . இதன் பெயர்க்கு ஏற்பச் சொற்களின் பொருளில் தெளிவுற அமைந்த விளக்கங்களைக் காணலாம் . பிரபந்தங்களின் இலக்கணங்களும் மற்றும் பல சிறப்புப் பெயர்களும் சிறப்பாக எடுத்துத் தக்கமுறையில் விளக்கப்பெற்றுள்ளன . இதுவும் இலக்கிய மாணவர்க்கே தனித்துரிய ஒரு சிறப்புச் சிற்றகராதி எனலாம் .
தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி:
மாணவர் அகராதிக்குப்பின் வந்த மாணவர்க்குப் பெரும்பயனுடைய அகராதி 'தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி'. பெரும்பான்மை கருதி இப் பெயரிடப்பட்டதே யன்றி முன்னைத் தமிழ்ச் சொற்களையும் இது கொண்டுள்ளது. இதனைத் தொகுத்து அளித்தவர் ச. பவானந்தம் பிள்ளையாவார் . காவல்துறைப் பணியிலிருந்த இவர் தமிழில் நல்ல புலமை பெற்றிருந்தார் ; நன்னூற் காண்டிகை , தொல்காப்பியப் பொருளதிகார உரை , இறையனாரகப்பொருளுரை , யாப்பருங்கல விருத்தியுரை முதலியவற்றைப் பதிப்பித்த பதிப்பாசிரியரும் ஆவார் . ' பவானந்தர் கழகம் ' என்னும் நிறுவனம் கண்டு அதன்வழிப் பல நூல்களை வெளியிட்டார் இவர் தொகுத்த இந்த அகராதியை மாக்மில்லன் கம்பெனியார் அழகுற அச்சிட்டு வெளியிட்டனர் . இந்த அகராதியில் பற்பல தகவல்களும் வகைப்பட அமைத்துத் தரப்பட்டுள்ளன . இந்த அகராதியின் தொகுப்பும் அமைப்பும் குறித்து ஆசிரியர் வழங்கிய முகவுரைச் செய்திகளை இங்கே காண்போம் .
* இலக்கியச் சிந்தனைகள் - முதற் பதிப்பு - பக்கம் 163 - 164.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகவுரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தமிழ், அகராதி, அகராதிகள், ஆங்கில, சொற்கள், இவர், என்னும், மாணவர், இதன், சென்ற, இஃது, பெரும், விளக்கம், அகராதிகளில், வெளியிட்டார், இதில், அகராதியை, சுருக்கம், தந்துள்ளார், பள்ளியிற், பயிலும், மாணவர்க்குப், மாணவர்க்கான, சொல்லகராதி, தமிழ்ச், தொகுத்து, தமிழகராதி, இலக்கியச், அகராதிச், அகராதியின், ஒருசொற், பல்வேறு, லெக்சிகன், முதலிய, ஆங்கிலத்தில், சிற்றகராதி, வின்சுலோ, பேராசிரியர், அவசியமாயிற்று, தரப்பட்டுள்ளன, இலக்கிய, நூற்றாண்டில், பெரும்பாலும், பொருள், ஒவ்வொரு, மாணவர்க்கு