தமிழ் - தமிழ் அகரமுதலி - முகவுரை
தமிழ்மொழி யகராதி:
தமிழ்ப் பேரகராதியை 1901-ல் வெளியிட்ட பி. வே. நமசிவாய முதலியார் காஞ்சி நாகலிங்க முதலியாரைக்கொண்டு மேலும் பல சொற்களை இணைத்துத் திருத்தியும் விளக்கியும் பேரகராதியை வளப்படுத்தினார் . 1911-ல் வெளிவந்த இந்த அகராதிக்கு நாகலிங்க முதலியாரின் விருப்பப்படி ' தமிழ்மொழியகராதி ' எனப் பெயரை மாற்றினார் . மேன்மைதங்கிய ஐந்தாம் சார்ச்சு மன்னரும் மேரி அரசியாரும் அந்த ஆண்டு தில்லியில் முடிசூடிக்கொண்ட நிகழ்ச்சியை நினைவுகூரும் வண்ணம் ' காரனேசன் தமிழ் டிக்சனரி ' என்னும் பெயரிட்டார் . இந்த அகராதிக்கு வரவேற்பு மிகுதியும் இருந்தது . எனவே , இது மேலும் பல பதிப்புகளை அடுத்தடுத்துப் பெற்றது . இதன் ஏழாம் பதிப்பு 1935-ல் வெளிவந்ததாகத் தெரியவருகிறது . இதன் ஆறாம் பதிப்பை அப்படியே நிழற்படம் எடுத்து மறுதோன்றிப் பதிப்பாகத் தில்லி , ஆசியன் பதிப்பகத்தார் நான்காண்டுகளுக்கு முன் (1980) வெளியிட்டுள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி:
பி. இராமநாதன் என்பார் புலவர் சிலர் துணையுடன் இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி என்னும் பெயரிலே 1909-ல் இருபகுதிகள் கொண்டபேரகராதியை வெளியிட்டுள்ளார். இது நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ப் பேரகராதி முதலிய முந்திய அகராதிகளில் இடம்பெறாத 10,000 சொற்களை மிகுதியாகக் கொண்டுள்ளது. சதுரகராதிக்குப் பின்னர் வந்த தமிழ் - தமிழ் அகரமுதலிகளில் நா. கதிரைவேற்பிள்ளை அகராதி வரையில் சதுரகராதியில் உள்ளபடி பொருள்,
தொகை, தொடை அகராதி ஆகியவற்றையும் சேர்த்து வந்தனர் . இந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதியிலும் மேற்படி மூவகைச் சேர்க்கைகள் உண்டு. ஆயினும், இவர் சதுரகராதி தந்தவற்றைக் காட்டிலும் அதிகமான சொற்களை உடன்சேர்த்து விளக்கப் பகுதிகளிலும் பல மாறுதல்களைச் செய்துள்ளார். அன்றியும் பொருள்விளக்கும் முறையிலும் தெளிவு காணப்படுகிறது. அங்கங்கே பொருள்விளக்கமான சிறிய படங்களையும் உடன் சேர்த்திருப்பது இந்த அகராதிக்குரிய தனிச் சிறப்பாகும்.
தமிழ்ச்சங்க அகராதி:
தமிழ் - தமிழ் அகரமுதலிகளுள் மிகவும் பெரியது தமிழ்ச்சங்க அகராதி . இது மூன்று பெருந்தொகுதிகளாக வெளிவந்தள்ளது . சொற்பொருள் விளக்கம் தவிரப் பொருள் , தொகை , தொடை அகராதி என்னும் சேர்க்கை இந்த அகராதியில் இல்லை . இந்த அகராதியைப் பல்லாண்டுகள் உழைத்து உருவாக்கியவர் யாழ்ப்பாணம் நீதிபதி கு. கதிரைவேற்பிள்ளையாவார் . இவர் சதுரகராதி , மானிப்பாய் அகராதி , சென்னை அகராதிகள் , வின்சுலோ அகராதி , வைத்திய அகராதி என்னும் இவற்றில் இல்லாத புதுச் சொற்களைத் திரட்டி விளக்கம் தந்துள்ளார் . இதனை முற்றுமாய் வெளியிடும் முன்னர் இவர் காலமானார் .
பின்னர் அப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவராக விளங்கிய பொன் . பாண்டித்துரைத் தேவரவர்கள் அகராதிப் படிவங்களைக் கதிரைவேற்பிள்ளையின் குமாரர் பாலசிங்கம் என்பவரிடமிருந்து பெற்றார் ; மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான்களைக் கொண்டு பரிசோதித்து அச்சிட்டு வெளியிடப் பணித்தார் . சே.ரா . சுப்பிரமணியக் கவிராயர் முதலிய பலரும் பல்லாண்டுகள் உழைத்து இந்த அகராதியை மூன்று பகுதிகளாக 1910,1912,1923 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டு முற்றுவித்தனர் .
நீதிபதி கு . கதிரைவேற்பிள்ளை சூட்டிய ' தமிழ்ச் சொல்லகராதி ' என்னும் பெயருடன் இந்த அகரமுதலி வெளிவந்த போதிலும் மதுரைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டமையால் ' தமிழ்ச்சங்க அகராதி ' எனக் குறிப்பதே பெருவழக்காயிற்று .
ஒருசொற் பல்பொருள்களுக்கு விளக்கம் தரும்போது பொருள்களை 1, 2 என எண் குறியிட்டுக் காட்டியிருப்பது புதுமை . இதனால் ஒரு சொல்லுக்கு எத்தனை பொருள்கள் உண்டு என்பதும் தெளிவுபடுகிறது . மேலும் , சொற்பொருளுக்கு அடிப்படை ஆதாரமான நூற்சான்றுகளையும் உதாரணம் என எடுத்துக்காட்டியது புதுமுயற்சி . சொற்பொருளுக்கு இலக்கிய இலக்கணம் முதலிய நூல்களிலிருந்து மேற்கோள் எடுத்துத் தந்த முதல் தமிழ் - தமிழ் அகராதி இதுவே . இவர் 344 நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்தாண்டுள்ளார் . சொல் மூலங்களைக் காட்டியதோடு வடசொற்கள் , இந்துஸ்தானிச் சொற்கள் , தெலுங்குச் சொற்கள் முதலியவற்றையும் இனஞ்சுட்டிக் காட்டியுள்ளார் . இந்த அகரமுதலியில் முந்திய அகரமுதலிகளில் இல்லாத பல சொற்களும் திருந்திய விளக்கங்களும் காணப்படுகின்றன . தமிழ் - தமிழ் அகரமுதலிகளுள் கால அடைவில் விரிவுபெற்ற பேரகராதி இதுவே .
லெக்சிகனை அடுத்துவந்த பேரகராதிகள்:
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் லெக்சிகன் என்னும் தமிழ்ப் பேரகராதி நிறைவுறும் நிலையெய்திய காலத்தில் , 1935 ஆம் ஆண்டிலே இரு பேரகராதிகள் தோன்றின . ஒன்று நெல்லை எஸ் . சங்கரலிங்க முதலியார் தொகுத்தளித்த ஜூபிலித் தமிழ்ப் பேரகராதி மற்றொன்று ஆனந்தவிகடன் அகராதி. ஜூபிலித் தமிழ்ப் பேரகராதியை வெளியிட்டவர் பி. அரங்கசாமி நாயகர் ஆவார் .இந்தப் பேரகராதி யாழ்ப்பாண அகராதி முதலிய பல அகராதிகளைக் கொண்டு புதுக்கியும் திருத்தியும் விளக்கியும் செம்மை செய்யப்பெற்றது ; சதுரகராதியின் அமைப்பை அடியொற்றியது . சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் பதிப்பாசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் இதற்கு முன்னுரை அளித்துள்ளார்கள் .
இந்த அகராதி வெளிவந்த 1935ஆம் ஆண்டிலேயே ஆனந்தவிகடன் ஆசிரியர் ஆனந்தவிகடன் அகராதி என்னும் பெருந்தொகுதியை வெளிப்படுத்தினார் . ஆனந்தவிகடனில் போட்டிப் பந்தயங்கள் தொடர்ந்து வெளிவந்த காலம் . இப் போட்டிக்குப் பயன்படும் நோக்கில் எழுந்ததாயினும் முந்திய பேரகராதியில் உள்ள சொற்கள் இதிலும் உண்டு . வழக்குச் சொற்கள், மரூஉச் சொற்கள் , வட்டார வழக்கான பல குறைச்சொற்கள் , வேற்று மொழி வழக்குகள் முதலியவற்றை மிகுதியாகக் கொண்டுள்ளது ; 2,040 பக்கங்கள் கொண்டது ; அடுத்தடுத்து 1937 , 1938 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது , மூன்றாவது பதிப்புகளையும் பெற்றுள்ளது . எனவே , இந்த அகராதி எத்துணையளவாக நாட்டு மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தது என்பது புலப்படும் .
சதுரகராதியின் அமைப்பில் நான்கு வகையான அகராதிகளைக் கொண்டு அமைந்த பெருநூல் ,மதுரைத் தமிழ்ப் பேரகராதி . இவ்வகை நான்கு கூறுபாடுகளுடன் அமைந்த அகராதிகளுள் இதுவே இறுதியானது .
பண்டிதர் பலர் இதனை உருவாக்குவதில் துணை புரிந்துள்ளனர் . மதுரையில் பெரிய புத்தக வெளியீட்டாளரும் புத்தக வணிகருமாக விளங்கிய இ. மா. கோபாலகிருட்டினக் கோனார் 1937-ல் இதனை அச்சிட்டு உலகிற்கு வழங்கினார் .
இதுகாறும் வெளிவந்த யாழ்ப்பாண அகராதி , ஆனந்தவிகடன் அகராதி முதலிய பல அகராதிகளைக் கொண்டு புதுக்கியும் , திருத்தியும் , விளக்கியும் அவைகளில் விடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான சொற்களைப் பற்பல நூல்களினின்றும் ஆராய்ந்து எடுத்துத் தந்துள்ளார் . கற்றுத் தேர்ந்த பண்டிதர் பலரால் தொகுக்கப்பெற்றது ; மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் எழுதிய முன்னுரையுடன் கூடியது . பெயரகராதி 605 பக்கம் ; பொருளகராதி 149 பக்கம் (606- 754 ) ; தொகையகராதி 89 பக்கம் (755 - 843 ) , தொடையகராதி 108 பக்கம் (844 - 951 ) . இவற்றிற்கு மேலும் இணைப்பாகத் தமிழ்மொழியில் வழங்கிவரும் உருது , அராபி முதலிய சொற்கள் தனிப்படத் தொகுத்துக் காட்டப்பட்டும் உள்ளன .
இருமொழி அகராதிகள்:
பிறமொழியார் தமிழ் பயிலத் தழிழுடன் பிறமொழி விளக்கமும் தரும் அகரமுதலிகள் வேண்டியிருந்தன . இருமொழி அகராதிகள் ஆக்குவதில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் பாதிரிமார்களேயாவர் . வீரமாமுனிவரே இருமொழி அகராதிகளும் ஆக்கி முதலில் வழிகாட்டினார் என்பதனை முன்னர்க் கண்டோம் . அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றித் தமிழ் - ஆங்கில அகராதிகள் அதிகமாகத் தொகுத்து வெளியிடப்பெற்றன .
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகவுரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், அகராதி, தமிழ், என்னும், பேரகராதி, முதலிய, சொற்கள், தமிழ்ப், வெளிவந்த, மதுரைத், அகராதிகள், கொண்டு, மேலும், பக்கம், ஆனந்தவிகடன், இவர், தமிழ்ச்சங்க, இருபதாம், நூற்றாண்டுத், அகராதிகளைக், விளக்கியும், இருமொழி, இதுவே, திருத்தியும், விளக்கம், பேரகராதியை, முந்திய, இதனை, சொற்களை, உண்டு