வாயு புராணம் - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
சிவ - பார்வதி திருமணம்
கைலையில் இருந்த சிவன் சப்தரிஷிகள் என்று சொல்லப்படும் ஏழு முனிவர்களை அழைத்து, இமவானிடம் சென்று அவனுடைய மகளான பார்வதியைத் தான் மணக்க விரும்புவதாகச் சொல்லுமாறு பணித்தார். மிக்க மகிழ்ச்சி கொண்ட முனிவர்கள் இமவானைக் கண்டு சொல்ல, அவனும் பெரு மகிழ்ச்சி கொண்டான். திருமணத்திற்குரிய நாள் குறிப்பிடப்பட்டது. திருமணத்தன்று முனிவர்கள், யோகிகள், ரிஷிகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், தேவர்கள், திக்பாலர்கள் ஆகியவர்களும் திருமால், நாரதர், பிரம்மன் ஆகியவர்களும் வந்து கூடினர். பார்வதியின் தாயாகிய மேனகைக்குத் தன் மருமகனாகிய சிவபிரானைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம். அப்போது ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டு வந்தாள். கந்தர்வர்களின் தலைவனாகிய விஸ்வவசு அழகாக இருந்ததால் அவன்தான் மருமகன் என்று நினைத்தாள். நாரதர் இல்லை என்றவுடன் அவனை விட அழகான குபேரனைப் பார்த்தாள். அழகில் ஒருவரை ஒருவர் விஞ்சும்படியாக இருந்த வருணன், அக்னி, இந்திரன், சத்திரன், சூரியன், பிரம்மன், பிரகஸ்பதி, விஷ்ணு ஆகியோரை ஒவ்வொருவராகப் பார்த்து ஒருவரைவிட ஒருவர் அழகாக இருப்பதால் இவர்கள்தான் மாப்பிள்ளையோ என்று சந்தேகப்பட்டாள். நாரதர், இவர்கள் அனைவரும் சிவனுடைய பணியாட்கள். அதோபார் சிவபிரான் வருகிறார்’ என்றார். மேனகை திரும்பிப் பார்த்தாள். என்ன கொடுமை, ஒரே பிசாசுக் கூட்டங்கள். எல்லாம் கறுப்பு நிறம். அந்தக் கூட்டத்தின் நடுவே ஐந்து தலைகளுடனும், பத்துக் கைகளுடனும் ஒரு வடிவம். அந்த வடிவமெல்லாம் சாம்பல் பூசப்பட்டிருந்தது. கழுத்தில் எலும்பு மாலை, பாம்புகள் இடுப்பில் புலித்தோல், தலையில் சடைஇவர்தான் மாப்பிள்ளை என்று நாரதர் சொல்லியவுடன், மேனகை மயங்கியே விழுந்துவிட்டாள். மயக்கம் தெளிந்து எழுந்தவுடன், “என்ன ஆனாலும் சரி, இந்தப் பைத்தியத்திற்கு என் பெண்ணைக் கொடுக்க மாட்டேன். இந்திரன் முதலிய யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும். இல்லை என்றால் அவளை விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடுவேன். என்ன ஆனாலும் இந்தத் திருமணத்தை நடக்க விடமாட்டேன்” என்று கூறினாள். இதைக் கேட்ட நாரதர் சிவபிரானிடம் சென்று மிக்க பணிவோடு, 'ஐயனே! தயவு செய்து தங்களின் உருவத்தை மாற்றிக் கொண்டு மேனகையின் துயரத்தைப் போக்குங்கள்” என்று வேண்டிக் கொண்டார். ஒரு விநாடி நேரத்தில் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டார், சிவபிரான். அழகே வடிவாக மாறிவிட்ட அவரைப் பார்த்து மேனகை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். பிரம்மன் சடங்குகள் செய்ய சிவபார்வதி திருமணம் இனிதே நிறைவேறியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 4 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பார்வதி, நாரதர், சிவபிரான், சென்று, திருமணம், மேனகை, கொண்டார், பிரம்மன், மணக்க, தவம், வேண்டும், சிவன், என்ன