வராக புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
பிரபஞ்சம் பதினான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏழு பிரிவுகள் மேலுலகம் என்றும், மற்ற ஏழும் கீழுலகம் என்றும் கூறப்படும். மேலுலகம் என்று கூறப்படும் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனலோகம், சத்யலோகம், தடலோகம் ஆகியவை. கல்பத்தின் முடிவில் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகியவை அழிந்துவிடும். மீதமுள்ள நான்கு லோகங்கள் மகாப்பிரளய காலத்தில் மட்டுமே அழிகின்றன. மக்கள் பூலோகத்திலும், பறவைகள் புவர்லோகத்திலும், நேர்மையும், தகுதியும் உள்ளவர்கள் சுவர்லோகத்திலும், முனிவர்கள் மகர்லோகத்திலும் உள்ளனர்.
மந்தரமலை என்ற மலை, பூமியில் அமைந்துள்ளது. வைஷ்ணவி தேவி திருமணம் செய்து கொள்வதில்லை என்று முடிவு செய்து, மந்தர மலைக்குச் சென்று தவம் இயற்றினாள். (வராக புராணம் வைஷ்ணவி தேவியும், சரஸ்வதியும் ஒன்றே எனக் கூறுகிறது,)
ஒரு சமயம் வைஷ்ணவி தேவியின் தவம் சற்றுக் கலைந்து, அதிலிருந்த லட்சக்கணக்கான அழகான பெண்கள் தோன்றினர். இந்தச் சிறு தேவதைகளுக்கென ஒரு அழகிய அரண்மனையை நிர்மாணித்தனர். பிரம்மன், இந்திரன் ஆகியோரைக் காணச் சென்றுகொண்டிருக்கும் பொழுது, இந்த அழகிய வடிவம் கொண்ட வைஷ்ணவி தேவி, மற்றும் உள்ள பெண்களைப் பார்த்து வியப்படைந்தார். இவர்களைக் கண்டவுடன், மிகவும் சக்தி வாய்ந்த மகிஷாசுரனை ஒழிப்பதற்கு ஒரு நல்ல உபாயத்தைக் கண்டார் நாரதர்.
கடற்கரையில் மாபெரும் நகரம் அமைத்து அதில் ஆட்சி செய்து வந்த மகிஷாசுரனைக் காணச் சென்றார் நாரதர். அவனைப் பார்த்து மந்தர மலையில் வைஷ்ணவி தேவி என்ற அழகான பெண்ணைப் பார்த்தேன். உன்னைவிடச் சிறந்த மணவாளன் அவளுக்குக் கிடைப்பது கடினம். யாரையாவது அனுப்பி அவளை மணம் பேசி முடித்துக் கொள் என்று கூறிப் போனார் நாரதர்.
நாரதர் பேச்சைக் கேட்ட மகிஷன் தன் பிரதானிகள் முதலானவர்களை அழைத்தான். அவர்களில் யாரையாவது அனுப்பி மணம் பேசலாம் எனக் கூறினார். மகிஷன் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் பெரிய படையை விருபாக்ஷன் தலைமையில் அனுப்பிப் போரில் வைஷ்ணவியைத் தோற்கச் செய்து மணந்து கொள்வதே சரி என்று எண்ணினான்.
அதன்படி ஒரு பெரிய அசுரப்படை மந்தர மலைக்கு வந்தது. தேவர்கள் அனுப்பிய படை அசுரர்களை எதிர்க்க முடியாமல் சின்னாபின்னப்பட்டு ஓடின. அப்பொழுது மகிஷனுடைய பணியாளர்களில் ஒருவராகிய வித்யுத்பிரபா என்பவர் வைஷ்ணவியிடம் சென்று, மகிஷனைவிடச் சிறந்த மாப்பிள்ளை கிடைப்பது முடியாத காரியம். ஆகவே அவனை மணந்து கொள் என்று புத்திமதி கூறினார். இத்தோடு நில்லாமல், வித்யுத்பிரபா, மகிஷனுடைய பழைய வரலாற்றையும் சொல்ல ஆரம்பித்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 8 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வைஷ்ணவி, நாரதர், செய்து, தேவி, மந்தர