வராக புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
பிராமணனே! யார் யாரைக் கொல்லுகிறோம் என்று நினைத்துப் பார்த்தீரா? எல்லா உடல்களிலும் தங்கி இருக்கும் ஆன்மா கொல்வதும் இல்லை, கொல்லப்படுவதும் இல்லை. உடம்பு செய்கின்ற செயல்களுக்கு ஆன்மா பொறுப்பாவதும் இல்லை. எல்லா உடம்புகளிலும் பரவி இருந்தாலும் ஆத்மா ஒன்றே ஆகும் அல்லவா? எந்த ஒரு தனிப்பட்ட உயிருடன் கூடிய உடம்புக்குத் தீமை செய்தால், அது எல்லா உடம்பிலுள்ள உயிர்களுக்கும் சேரும். ஆகவே ஒரு தனிப்பட்ட உயிரை உடம்புடன் கூடிய உயிரைப் பிரிக்க முடியாது. இதை நீர் புரிந்து கொள்வதற்கு நான் ஒரு செயல் செய்து காட்டுகிறேன் என்று கூறி நெருப்பைப் பற்ற வைத்தான். அது கொழுந்து விட்டு எரியும் பொழுது பிராமணனைப் பார்த்து இந்தத் தீ இத்தனை நாக்குகளோடு எரிகிறதே, ஏதாவது ஒரு நாக்கை மட்டும் எடுத்து அணைத்துப் பார் என்றான். பிராமணன் முயன்றபொழுது எந்த நாக்கில் தண்ணீர் பட்டாலும் அது தீ முழுவதையும் அனைத்துவிடக் கண்டான். இப்பொழுது வேடன் சொன்னான், எந்தச் செயலையும் நான் செய்கிறேன் என்று நினைத்தால் அது ஆணவத்தின் எல்லையாகிவிடும், நாராயணன் என்னைக் கருவியாகக் கொண்டு செய்கிறான் என்று நினைத்தால் இதில் கோபிப்பதற்கு, அகங்காரம் கொள்வதற்கு இடமே இல்லை என்று கூறியவுடன், தேவ உலகினின்று விமானம் வந்து அவ்வேடனை அழைத்துச் சென்றுவிட்டது.
இக்கதையைக் கூறிவிட்டு பிரகஸ்பதி, அரசன், முனிவன் ஆகிய இருவரையும் பார்த்து உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விட்டதல்லவா என்று கேட்க அவர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பி விட்டனர். இக்கதையினைக் கேட்ட அஷவசீரா தன் மகனிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டுக் காட்டிற்குத் தவம் புரியச் சென்றான்.
வசு
தன் மகன் விவஸ்வானிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டு புஷ்கரா தீர்த்தம் சென்று யாகம் ஒன்றினைச் செய்தார். அந்த யாகத்தினின்று ஒர் உருவம் வந்து, 'நான் என்ன செய்ய வேண்டும் என்று வசுவைப் பார்த்துக் கேட்டது. வசுவும், நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டான். அந்த உருவம் கீழ்க்கண்ட கதையினைச் சொல்லத் துவங்கியது.
முற்பிறப்பில் வசு காஷ்மீரத்தில் அரசு செலுத்தி வந்தான். அவன் ஒருமுறை வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். அப்பொழுது ஒரு முனிவர், மான் வடிவத்தில் இங்கும் அங்கும் உலவிக்கொண்டிருந்தார். மானை முனிவர் என்று அறியாத வசு, அம்மானைக் கொன்றுவிட்டான். உண்மையை அறிந்து வருந்திய அரசன், பிராயச்சித்தங்கள் பல செய்தான். ஒருநாள் வசு அரசன் தாங்கொணா வயிற்றுவலி காரணமாக இறந்து போனான். அவ்வாறு இறக்கும் சமயத்தில் 'நாராயணா' என்று கூறியபடி உயிர் துறந்தான். யாக குண்டத்தில் இருந்து வெளிவந்த உருவம் "நான் ஒரு ராட்சசன். வசு அரசனின் பிரம்மஹத்தி தோஷத்தால் நான் உன் உடம்பில் புகுந்து கொண்டேன். அதனாலேயே மிகுந்த வயிற்றுவலியினால் நீ துன்பமுற்று இறந்து போனாய்" என்று கூறிற்று. அவ்வாறு இறந்த மன்னன் நாராயணா என்று கூப்பிட்டதால் வைகுண்ட வாசிகள் வந்து, ராட்சசனிடமிருந்து அரசனை மீட்டு அழைத்துச் சென்றனர். அரசன் வைகுண்டத்தில் நீண்ட ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் இருந்து பின் மீண்டும் காஷ்மீரத்து அரசனாகப் பிறந்தான். பிரம்ம ராட்சசனும் மீண்டும் அரசன் உடம்பில் புகுந்து கொண்டான். அரசன் ஒரு யாகம் செய்து விஷ்ணுவின் பெயரைக் கூறியவுடன், ராட்சசன் அரசன் உடம்பிலிருந்து வெளியே வரும்படி ஆயிற்று. ஆனால் இம்முறை விஷ்ணுவின் நாமத்தைக் கேட்டதால், பிரம்ம ராட்சசனின் பாவங்கள் அனைத்தும் விலகி, அவன் நேர்மையானவனாக மாறினான். வசு அரசன் அவனைப் பாராட்டி அவனுக்கு ஒரு வரம் கொடுக்க விரும்பினான். அந்த வரத்தின்படி பிரம்மராட்சசன் ஒரு வேடனாகப் பிறந்து தர்மவியாதா என்ற பெயருடன், நேர்மையானவனாகத் திகழ்வான் என்று கூறினான். வரத்தைக் கொடுத்த வசு அரசன், வைகுந்தலோகம் சென்றான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 6 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அரசன், நான், இல்லை, அந்த, சென்றான், உருவம், வேடன், வந்து, பிராமணன், பார்த்து, எல்லா