பத்ம புராணம் - பகுதி 14 - பதினெண் புராணங்கள்
லக்ஷ்மி விரதத்தின் சிறப்பு
துவாபரயுகத்தில் செளராஷ்டிரதேசத்தில் பத்ராஷ்ரவன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் மனைவி பெயர் சுரதி சந்திரிகா. அவர்களுக்குச் சியாமபாலா என்ற பெண் குழந்தை இருந்தது. ஒருநாள் குழந்தை வெளியே விளையாடச் சென்றிருந்தபொழுது இலட்சுமி தேவி ஒரு வயதான பிராமணத்தி வடிவம் கொண்டு அரண்மனைக்கு வந்தாள். அரண்மனைக் காவல்காரன், 'அம்மா, நீ யார்? இங்கு வந்த காரணம் யாது?’ என்று வினவ, அரசியின் பழைய பிறப்பையும், இப்பொழுது அவள் செய்யத் தவறிய சில காரியங்களையும் அவருக்கு நினைவூட்ட வந்தேன்' என்றாள். காவல்காரன், 'அம்மா நீங்கள் சொல்வது புரியவில்லை என்று சொன்னவுடன் இலட்சுமி தேவி விவரமாகப் பின்வருமாறு கூறினாள்:
இப்பொழுது அரசியாக இருக்கும் சுரதி சந்திரிகா, முன் ஜென்மத்தில் ஒரு வைசியனின் மனைவியாக இருந்தாள். எவ்வித நற்பண்புகளும் இல்லாமல் செல்வச் செருக்காக இருந்தாள். கணவனிடம் சண்டை போட்டுக்கொண்டு அவனை விட்டுச் சென்றாள். சென்ற அவளை மனித ரூபத்தில் இருந்த லட்சுமிதேவி, துயரம் நீங்க வேண்டுமானால் இலட்சுமி விரதம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியவுடன் இந்த வைசியன் மனைவி செம்மையான முறையில் இலட்சுமி விரதம் இருந்தாள். அதன் பயனாக அவள் இறந்தவுடன் விஷ்ணு லோகம் சென்று பல காலம் அங்கே வாழ்ந்தாள். புண்ணிய பயன் தீர்ந்தவுடன் இப்பொழுது சுரதி சந்திரிகா என்ற பெயருடன் இந்த அரசனின் மனைவியாக வாழ்கிறாள். இப்பொழுதும் செல்வச் செருக்கில் எல்லாவற்றையும் மறந்து இலட்சுமி விரதம் இருப்பதையும் மறந்து விட்டாள். அதை அவளுக்கு நினைவூட்டத்தான் வந்தேன் என்ற கூறியவுடன் காவல்காரன், உடனே அரசியிடம் சென்று, இந்த பிராமண அம்மாள் சொன்னதைச் சொல்லவே, அரசி அவளை உள்ளே அழைத்து விவரமாக அனைத்தையும் கேட்டாள். இவள் கூறியதைக் கேட்டவுடன் மிகுந்த கோபம் கொண்ட அரசி அவளை அடித்துத் துரத்தி விட்டாள். அழுது கொண்டே வந்த அவளை, தெருவில் விளையாடச் சென்றிருந்த சிறுமி சியாம பாலா ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேட்டாள். பிராமணத்தி நடந்ததைக் கூறியவுடன் குழந்தை விரதம் இருக்கும் முறையை எனக்குச் சொல்லிக் கொடுங்கள், நான் செய்கிறேன் என்றாள். இலட்சுமி விரதம் எப்படி இருக்கவேண்டும் என்பதை பிராமணத்தி சியாமபாலாவிற்குச் சொல்ல, அவளும் அதை அனுஷ்டித்து வந்தாள்.
உரிய காலத்தில் சியாமபாலா, சித்தேஷ்வரா என்பவனின் மகன் மாலதார என்பவனை மணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்குப் போய்விட்டாள். குழந்தை போனவுடன் அவள் தாய் தந்தையருக்கு செல்வம் எல்லாம் அழிந்து, வறுமை வாட்டியது. ஒருமுறை அரசன் பத்ராஷ்ரவ தன் மகளைப் பார்க்கச் சென்று நடந்தவற்றைக் கூறியவுடன் மகள் தந்தைக்குச் சிறந்த உணவளித்து, அவர் புறப்படும் பொழுது பொன்னையும், மணியையும் மூட்டையாகக் கட்டிக் கொடுத்தாள். மகிழ்ச்சியோடு மகள் கொடுத்த பரிசினைத் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து அரசன் பார்த்தான். அனைத்தும் மண்ணாகவும் கல்லாகவும் மாறியிருந்தது. சில நாட்கள் கழித்து அரசி தன் மகளைப் பார்க்கச் சென்றாள். நல்ல வேளையாக இலட்சுமி விரதம் என்று சொல்லக்கூடிய நாளாக அது அமைந்தது. மகளின் பிடிவாதத்தில் இணங்கி அரசியும் இலட்சுமி விரதம் இருந்தாள். இதனால் அவள் இழந்த செல்வத்தை மீட்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினாள். லட்சுமி விரதத்தின் மகிமை இதுவே ஆகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்ம புராணம் - பகுதி 14 - Padma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இலட்சுமி, விரதம், இருந்தாள், அவளை, குழந்தை, அவள், கூறியவுடன், அரசி, சென்று, காவல்காரன், சுரதி, அரசன், சந்திரிகா, பிராமணத்தி, செய்து, கொண்டு, இப்பொழுது