பத்ம புராணம் - பகுதி 10 - பதினெண் புராணங்கள்
தந்தை: ஆம் மகனே! இதன் அர்த்தம் எனக்குத் தெரியும். நான் சொல்வதை கவனமாகக் கேள். சோழநாட்டைச் சுவாகு என்ற மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். அவன் மனைவி பெயர் தார்க்ஷி, மன்னன் தன் குருவாகிய ஜைமினி முனிவரின் உதவியுடன் பல யாகங்களைச் செய்தான். ஒருநாள் ஜைமினி முனிவர் அரசனைப் பார்த்து, இந்த யாகங்கள் செய்வதைவிட அதிக புண்ணியம் தான, தருமம் செய்வதால் கிடைக்கும். ஆகவே, இவற்றைச் செய்வதைவிட என் போன்றவர்களுக்கு தானம் கொடுப்பது மிக நல்லது என்றார். அரசன் குருவைப் பார்த்து, அவ்வாறு செய்வதால் எனக்கு என்ன பயன் கிட்டும்? என்று கேட்டான். குரு, உனக்குப் பெரும் புண்ணியம் கிடைக்கும். அப் புண்ணியத்தின் உதவியால் நீ சொர்க்கலோகம் செல்லலாம் என்றார். அரசன் அவரைப் பார்த்து, "நான் சொர்க்கலோகம் சென்றால் நிலையாக அங்கேயே இருந்துவிட முடியுமா? என்று கேட்டான். குரு, 'அது முடியாது. உன் புண்ணியம் தீர்ந்தவுடன் மறுபடியும் உலகில் பிறந்துதான் ஆகவேண்டும் என்று கூறினார். அதைக் கேட்ட அரசன், தாற்காலிகமான பலனை அளிக்கும் இந்தப் புண்ணியம் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டான். அதன் பிறகு மன்னன் நிலையான இன்பத்தைப் பெற என்ன வழி என்பதை ஆராய்ந்து, விஷ்ணுவை தியானிப்பதுதான் நிலையான இன்பத்தைத் தரும் என்பதைக் கண்டு கொண்டான். உடனே, அரசைத் துறந்துவிட்டு அரசனும், அவன் மனைவியும் காடு சென்று விஷ்ணுவை தியானித்துக் கடுந்தவம் இயற்றினர். உரிய காலத்தில் அவர்கள் இருவரும் இந்த உடலை நீத்து 'விஷ்ணுலோகம் சென்றனர். மிக அற்புதமான அந்த உலகத்தில் வாழத் தொடங்கிய இருவருக்கும் ஒரு பெரிய பிரச்சனை உருவாயிற்று. அங்கே வாழ்ந்த மற்றவர்கள் எதையும் உண்பதுமில்லை; தண்ணிர் முதலிய வற்றைப் பருகுவதுமில்லை. காரணம் அவர்கட்குப் பசி, தாகம் என்பதில்லை. ஆனால் மன்னனையும், அவன் மனைவியையும் பசியும், தாகமும் வாட்டிற்று. செய்வதறியாது திகைத்த அவர்கள் இறுதியாக வாமதேவன் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்த பர்ணசாலையைக் கண்டு (மன்னனும், அவன் மனைவியும்) தம் பிரச்சனையை அவரிடம் கூறினர். அவர், 'நீ கடுந்தவம் இயற்றியது உண்மைதான். அதனால் விஷ்ணுலோகம் வந்தாய். ஆனால் நீ உயிருடன் இருக்கும் போது, பசியோடும் தாகத்தோடும் வந்த ஏழைகளின் பசியையோ, தாகத்தையோ போக்க மறுத்துவிட்டாய். அவ்வாறு பிற உயிர்கட்கு இவற்றைப் போக்கி இருந்தால் அந்தப் பசியும், தாகமும் இப்போது உனக்கிராது என்று கூறினார். இதை அறிந்து கொண்ட அரசன் அவரைப் பார்த்து, இப்பொழுது இது தீர என்ன வழி? என்று கேட்டான். வழி ஒன்றுமில்லை. காட்டில் நீங்கள் இருவரும் விட்டு வந்த சடலங்கள் இப்பொழுது சுமேருவில் உள்ள குளக்கரையில் உள்ளன. அங்கு சென்று உங்கள் உடலையே வெட்டி உண்டு உங்கள் பசியைத் தணித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். வேறு வழியில்லை என்பதை அறிந்த அரசன் இதற்கு எப்பொழுது விமோசனம்? என்று கேட்டான். முனிவர், என்றாவது ஒரு நாள் யாரோ ஒருவர் விஷ்ணுவின் மந்திரங்களை உங்கள் காதுகளில் படும்படியாகப் பாடினால், அதைக் கேட்டவுடன் உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கூறினார். அந்த மன்னனும் மனைவியும், விஷ்ணுலோகத்தில் இருந்து தினமும் வந்து தங்கள் உடல்களைத் தாங்களே வெட்டித் தின்பதைத் தான் நீ பார்த்தாய்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்ம புராணம் - பகுதி 10 - Padma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பார்த்து, அரசன், கேட்டான், கூறினார், உங்கள், புண்ணியம், அவன், அந்த, மனைவியும், தின்று, சென்று, என்ன, முனிவர், மன்னன், எனக்கு, வெட்டித்