பத்ம புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்
இறந்து போன ஹீண்டாவின் மகன் விகுண்டன் பெரியவனாகி தன் தந்தையைக் கொன்ற நகுவடினைக் கொல்வதற்காக சக்தி பெற விஷ்ணுவைக் குறித்துத் தவம் புரிந்தான். அத் தவம் பலித்தால் அதனால் ஏற்படப் போகும் பெரிய பிரச்சனை கருதி விஷ்ணுவே தவத்தைக் கலைக்கப் புறப்பட்டார். ஒர் அழகிய பெண் வடிவை எடுத்துக் கொண்டு நடமாடினார். அந்தப் பெண்ணின் அழகைக் கண்ட விகுண்டன், அவள் தன்னை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டினான். அப்பெண் 'தடையொன்றுமில்லை. ஆனால் ஏழுகோடி கமோடா பூக்களைக் கொண்டு சிவனை அருச்சித்துவிட்டு அதை ஒரு மாலையாகக் கட்டி என் கையில் கொடுத்தால் உன்னை மணந்து கொள்வேன்' என்றாள். சரி என்று ஒப்புக்கொண்ட விகுண்டன் கமோடா புஷ்பங்களைத் தேடினான். காட்டில் அப்படி ஒரு பூ இல்லை என்று அறிந்து கொண்ட நிலையில், தன் குல குருவான சுக்ராச்சாரியாரை நாடினான். அவர் இது மண்ணில் பூக்கும் பூ அன்று என்று கூறிவிட்டு, 'பாற்கடல் கடைந்த பொழுது வெளிவந்தவள் கமோதா என்ற பெண். இவள் கங்கைக் கரையில் உள்ளாள். இவள் சிரித்தால், இவள் சிரிப்பிலிருந்து மஞ்சள் நிறமுடைய கமோதா பூக்கள் தோன்றும். அதைச் சிவனுக்கு அர்ச்சித்தால் நினைத்ததெல்லாம் கைகூடும். ஆனால் அப்பெண் அழுதால் மணமில்லாத சிவந்த பூக்கள் வெளிவரும். அதைத் தொடவே கூடாது என்றார்.
கங்கைக் கரையில் கமோதாவைத் தேடிச் செல்லப் புறப்பட்டான், விகுண்டன். நாரதர் எதிரே வந்து, நீ அவள் இருக்கும் இடம் தேடிச் செல்ல வேண்டாம். அவளிடமிருந்து வரும் பூக்கள் கங்கையில் மிதந்து வரும். அவற்றை எடுத்து நீ சிவனுக்கு அர்ச்சித்தால் அது போதும்! என்று கூறினார். விகுண்டன் அதை ஏற்றுக் கொண்டவுடன் நாரதர் கமோதாவிடம் சென்று 'விஷ்ணு உலகத்தில் சென்று பிறக்கப் போகிறார் என்று கூறிவிட்டார். அதைக் கேட்ட கமோதா, விஷ்ணு அவருடைய லோகத்தில் இருந்து பூலோகம் போகிறார் என்பதைக் கேட்டு, கண்ணிர் சிந்தி அழலானாள். கங்கையில் வந்த பூக்களை எடுத்து சிவ பூசை செய்யத் துவங்கிய விகுண்டன் சுக்ராச்சாரியார் சொன்னதை மறந்துவிட்டான். பூக்கள் கங்கையில் வருவதைப் பார்த்து மகிழ்ந்த அவன், இது கமோதாவின் அழுகையில் பிறந்ததா, சிரிப்பில் பிறந்ததா என்று அறிந்து கொள்ளும் அறிவை இழந்து தொடக் கூடாத இந்தப் பூக்களை எடுத்துச் சிவனுக்கு அர்ச்சிக்கத் துவங்கினான். சிவனுக்கு ஆகாத இந்தப் பூக்களை அர்ச்சித்த வுடன் பார்வதி தோன்றித் தன் சூலாயுதத்தால் விகுண்டனைக் கொன்று விட்டாள்.
தந்தை குஞ்சலாவின் கதை
ஆலமரத்தினடியில் அமர்ந்திருந்த சாயவனன், இக் கிளிகளுக்குள் நடந்த உரையாடலைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போய் தந்தைக் கிளியாகிய குஞ்சலாவைப் பார்த்து, நீ யார்? எப்படி இவ்வளவு விஷயங்களை அறிந்திருக்கிறாய் என்று கேட்டவுடன் குஞ்சலா தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்ம புராணம் - பகுதி 12 - Padma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விகுண்டன், நகுஷன், சிவனுக்கு, பூக்கள், கங்கையில், பூக்களை, கமோதா, அவள், சென்று, இவள்