மச்ச புராணம் - பகுதி 9 - பதினெண் புராணங்கள்
கச்சன் திரும்பி வராததால் கவலையுற்ற தேவயானி தந்தையிடம் கூற, தன் தவ வலிமையால் நடந்ததை அறிந்து கொண்டார். சுக்கிராச்சாரியார் உடனே தன் மகளிடம் "மகளே! நாம் ஒரு சிக்கலில் இருக்கிறோம். கச்சன் என் வயிற்றினுள் இருக்கிறான். அவனை என் மந்திரத்தால் உயிருடன் எழுப்பினால், அவன் என்னைக் கிழித்துக் கொண்டு வெளியே வர வேண்டும். நான் இறந்துவிடுவேன். எங்கள் இருவரில் ஒருவர்தான் உயிரோடு இருக்க முடியும். யார் வேண்டும்” என்று கேட்க, தேவயானி "இருவருமே எனக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தவர்கள். ஆதலால் இருவருமே உயிருடன் இருக்க வேண்டும்" என்று கூற சுக்கிராச்சாரியார் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். அவர் கச்சன் பெயரைச் சொல்லி, வயிற்றுக்குள் இருந்த அவனுக்கு மிருத்யுசஞ்சீவினி மந்திரம் உபதேசம் செய்தார். அதன் பிறகு அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தான். வந்த அவன் அதே மந்திரம் சொல்லி அவரை எழுப்பினான்.
சிலகாலம் கழித்து அவன் தேவலோகம் செல்லப் புறப்பட்டான். அவனைத் தடுத்து நிறுத்திய தேவயானி, உன் மேல் அளவற்ற காதல் கொண்ட என்னை விட்டு விட்டு நீ எங்கே செல்கிறாய்? என்னை மணந்து கொள் என்று வேண்டினாள். கச்சன், நீயோ குருவின் மகள், குருவின் ஸ்தானத்தில் வைத்து என்னால் மதிக்கப்பட வேண்டியவள். மேலும் ஒரு காரணம் உள்ளது. நானே உன் தந்தையின் வயிற்றில் இருந்து வெளியே வந்ததால் உனக்குச் சகோதரன் முறையாகி விட்டேன். உன்னை மணந்து கொள்வது என்பது பெரும் தவறாகிவிடும் என்று கூறிவிட்டான்.
காதலில் தோல்வி அடைந்த தேவயானி, அவன் மேல் கடுங்கோபம் கொண்டு, "என்னை ஏமாற்றிவிட்டுப் போகும் உனக்கு என் தந்தையிடம் கற்றுக் கொண்ட எவையும் பயன்படாமல் போகக் கடவதாக” என்று சபித்தாள்.
வருத்தமடைந்த கச்சன், தேவையில்லாமல் என்னை நீ சபித்தாய். நானும் உன்னைச் சபிக்கிறேன். "எந்த பிராமணனும் உன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டான். எக்காலத்தும் நீ விரும்பிய பொருளை அடைய மாட்டாய்” என்று சாபமிட்டான்.
லோமஹர்ஷனரிடம் புராணம் கேட்டுக் கொண்டிருந்த முனிவர்கள், அவரிடம் “சுக்கிராச்சாரிக்கு மிருத்யுசஞ்சீவினி மந்திரம் தெரியும் என்று சொன்னீர்கள். ஆனால் அவர் எப்படி, எப்பொழுது அந்த மந்திரத்தைத் தெரிந்துகொண்டார் என்பதைக் கூறவில்லையே” என்று கேட்க, லோமஹர்ஷனர் சொல்ல ஆரம்பித்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 9 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கச்சன், ", தேவயானி, அவன், கொண்டு, என்னை, அவனை, மந்திரம், தந்தையிடம், அவர், வெளியே, சுக்கிராச்சாரியார், அந்த, அசுரர்கள்