மச்ச புராணம் - பகுதி 2 - பதினெண் புராணங்கள்
“மனுவே! நீ நினைத்தது சரிதான். விஷ்ணுவாகிய நான்தான் இந்தப் பெரிய மீன் வடிவம் கொண்டுள்ளேன். இன்னும் சிறிது காலத்தில் மாபெரும் வெள்ளம் வந்து பூமியை மூடப்போகிறது. அந்த வெள்ளத்தில் உன்னிடம் ஒரு படகு வந்து சேரும். அந்தப் படகு தேவர்களால் செய்யப் பெற்றது. அப்படகில் எல்லா ஜீவராசிகளையும் ஏற்றிக் கொண்டு நீயும் ஏறிக் கொள்வாயாக அனைவரும் ஏறியவுடன் நானே அங்கு வருவேன். என் முகத்தில் முளைத்துள்ள கொம்பில் படகைக் கட்டி விடுவாயாக இம்மாதிரி செய்வதால் உயிர் வர்க்கங்கள் பிழைத்துக் கொள்ளும். நீர் வடிந்த பின்பு உயிர் வர்க்கங்களை உரிய இடத்தில் சேர்ப்பித்து இந்தப் பூமியை நீ ஆள்வாயாக’ என்று கூறிவிட்டு மறைந்தார். நூறாண்டுகள் மழையே பெய்யாததால் மரம், செடி, கொடிகள் அனைத்தும் வெந்து கரியாயின. பல மக்கள் பஞ்சத்திற்கு பலியாயினர். சூரியன் பூமியை அக்னிக் குண்டமாக மாற்றினான். இவ்வாறு நடைபெற்ற பின் நூறாண்டுகள் முடியவே சம்வர்தா, சண்டா முதலிய சப்த மேகங்களும் ஒன்றாகக் கூடி, விடாமல் நூறு ஆண்டுகள் மழையாகப் பொழிந்தன. அதன் பயனாக பூமி முழுவதும் நீரில் மறைந்தது. விஷ்ணு சொன்ன படியே படகும் வந்தது. மனு, உயிர் வர்க்கங்களை ஏற்றிக் கொண்டு அங்கு தோன்றிய மீன் கொம்பில் படகைக் கட்டி விட்டான். மீன் பல இடங்களுக்கும் படகை இழுத்துச் சென்றது. அப்படிச் செல்கின்ற காலத்தில் மனு மீனிடம் பல கேள்விகளைக் கேட்டான். மீன் சொன்ன பதிலே மச்ச புராணமாகும்.
பிரபஞ்சத் தோற்றம்
ஆதியில் எங்கும் இருளே படர்ந்திருந்தது. ஒருநாள் அந்த இருளைக் கிழித்துக் கொண்டு பரப்பிரம்மம் வெளியே வந்தது. வெளியே வந்த அது தன்னைத் தானே மூன்று பங்காகப் பிரித்துக் கொண்டது. பிரம்மா, விஷ்ணு, சிவன் உண்டாயினர். முதலில் தோற்றுவிக்கப்பட்டது நீரே ஆகும். விஷ்ணு அதில் படுத்து உறங்கலானார். நீண்ட காலத்திற்குப் பிறகு நீரில் ஒரு பொன்முட்டை மிதக்கலாயிற்று. அது கோடி சூரியப் பிரகாசமாய் இருந்தது. அதன் உள்ளே ஒரு பகுதியில் பிரம்மன் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டார். மறுபாதியில் இந்தப் பிரபஞ்சம் முழுதும் கருவடிவில் இருந்தது. ஒராயிரம் ஆண்டுகள் முட்டைக்குள் இருந்த பிரம்மன் இறுதியில் அதை இரண்டாகப் பிரித்துக் கொண்டு வெளியே வரலானார். அவர் இருந்த பாதிபோக எதிர்ப்பாதி கருவடிவிலிருந்த பிரபஞ்சத்திற்கு முழு வடிவு கொடுத்தார். இந்தத் தோற்றத்திலேயே சூரியனும் தோற்றுவிக்கப்பட்டான். ஆதியில் தோன்றியவன் ஆதலால், ஆதித்யன் என்ற பெயரும் பெற்றான். மிக நீண்ட காலம் பிரம்மன் தவத்தில் ஈடுபட்டார். தவத்தில் இருக்கும் பொழுதுதான் அவர் வாயிலிருந்து வேதம், புராணங்கள், சாத்திரங்கள் வெளிப்பட்டன. பிரம்மனுடைய மனத்திலிருந்து மானசீக புத்திரர்களாகப் பத்துப்பேர் தோன்றினர். அவர்களே முதல் பத்து முனிவர்கள் ஆவர். மரீச்சி, அத்ரி, புலஸ்தியா, புலஹ ஆகிய பதின்மர் ஆவர். ஆனால் பிரபஞ்சம் வளர வேண்டுமானால் தாயும், தந்தையும் தேவை. எனவே பிரம்மன் தன் உடம்பில் இருந்தே ஸ்வயம்பு மனு என்ற ஆணையும், ஷத்த ருபா என்ற பெண்ணையும் உற்பத்தி செய்தார். இந்த ஷத்த ரூபாவை சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி, பிராமணி என்ற பெயர்களாலும் குறிப்பிடுவர்.
ஷத்த ரூபா, பிரம்மனிடத்தில் தோன்றியதாலும், எல்லையற்ற அழகுடையவளாய் இருந்ததாலும் பத்து முனிவர்களும் அவளைத் தங்கை என்றே கூறினர். ஆனால் அவள் அழகில் ஈடுபட்ட பிரம்மன் அவளை மணந்து கொள்ள விரும்பினார். இந்த நிலையில் ஷத்த ரூபா மிக்க மரியாதையுடன் பிரம்மனைச் சுற்றி வரலானாள். அவள் தன் பார்வையிலிருந்து விலகிச் சென்று
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 2 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பிரம்மன், கொண்டு, மீன், ஷத்த, விஷ்ணு, வெளியே, பூமியை, இந்தப், அந்த, உயிர்