மச்ச புராணம் - பகுதி 5 - பதினெண் புராணங்கள்
சாயாவிற்கும், சம்ஜனாவின் மகன் யமனுக்கும் சண்டை வர, யமன் அவளை உதைக்க காலைத் தூக்கினான். உடனே சாயா, ‘என்னை உதைக்கத் துக்கிய காலில் புழு மண்டுவதாக என்று சாபமிட்டாள். உடனே சூரியனிடம் சென்று யமன் பேசினான். தந்தையே, ஏதோ முன்கோபத்தால் நான் என் தாயை உதைப்பேன்’ என்று காலைத் துக்கினேன். உடனே என் தாய் உன் கால் புழுத்து ஒழிவதாக என்று சாபமிட்டாள். இது விந்தையிலும் விந்தை. எந்தத் தாயும் தன் மகனுக்கு இவ்வாறு சாபமிடமாட்டாள். ஆகவே இவள் என் தாய் அல்ல என்று கூறியவுடன் சூரியன் சாயாவைக் கேட்க அவளும் உண்மையை ஒப்புக் கொண்டாள். உடனே சூரியன் தன் மாமனார் ஆகிய விஸ்வகர்மாவிடம் சென்று கேட்க, விஸ்வகர்மா உன்னிடம் இருந்து வந்த அன்றைக்கே சம்ஜனா பெண் குதிரை வடிவில் காட்டில் வாழ்கிறாள் என்றான். சூரியனைப் பார்த்து விஸ்வகர்மா “எல்லை மீறிய தேஜஸ் உன்னிடம் இருப்பதால்தான் யாரும் உன்னை நெருங்க முடிவதில்லை. அந்தத் தேஜஸில் ஒரு பகுதியை வெட்டி எடுத்து விடுகிறேன். அதன் பிறகு அனைவரும் உன்னுடன் சகஜமாகப் பழகுவார்கள்” என்று கூறிவிட்டு, சூரியனின் தேஜஸில் ஒரு பகுதியை வெட்டிவிட்டான். வெட்டப்பட்ட இப்பகுதியிலிருந்த தேஜஸை மூலப்பொருளாக வைத்து சுதர்சன சக்கரம், சிவனுக்குரிய திரிசூலம், இந்திரனின் வஜ்ராயுதம் என்பவற்றை விஸ்வகர்மா உண்டாக்கினார்.
தன் தேஜஸைக் குறைத்துக் கொண்ட சூரியன் சம்ஜனாவைத் தேடிச் சென்றான். அவள் பெண் குதிரை வடிவுடன் இருந்ததால், தான் ஒரு ஆண்குதிரை வடிவெடுத்து அவளுடன் வாழ்ந்தான். இவர்களுக்கு அஸ்வினிகள் என்ற பெயரில் இருவர் தோன்றினர். இதன் பிறகு சம்ஜனாவும், சூரியனும் தம் பழைய வடிவை ஏற்றுக் கொண்டனர். சனியின் உடன் பிறந்த சாவர்ணி மனு சுமேரு மலைக்குச் சென்று தவம் செய்தான். பின் ஒரு மனுவாகப் பிறக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றான். சனி நவகோள்களில் ஒருவனாகிறான். யமுனா, தப்தி இருவரும் இரண்டு ஆறுகளாக ஆயினர். யமன் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து, மரண தேவனாக ஆகும் வரம் பெற்றான்.
தட்சனும், சதியும்
இக்கதை ஏற்கெனவே மற்ற புராணங்களில் கொடுக்கப் பட்டிருந்தாலும், அங்கு காணப்படாத பகுதி இங்கு தரப் பட்டுள்ளது. யாக சாலைக்குள் நுழைந்து தட்சனைப் பார்த்து, என் கணவர் சிவனை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டாள். அது கேட்ட தட்சன், “உன் கணவன் எவ்விதத் தகுதியும் இல்லாதவன். ரிஷிகளும், முனிவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களுக்குச் சமமாக எவ்விதத் தகுதியும் இல்லாத உன் கணவனை அழைப்பது பொருந்தாத செயலாகும்.” இதைக் கேட்ட சதி, “சிவனுடைய பெருமை அறியாத உனக்கு மகளாகப் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன். இந்த உடம்பு நீ கொடுத்தது. ஆதலால் இந்த உடம்புடன் உயிர்வாழ விரும்ப வில்லை. இந்த உடம்பை உன் எதிரிலேயே போக்கிக் கொள்ளப் போகிறேன். போவதற்கு முன்னர் நான் இடும் சாபத்தைப் பெற்றுக்கொள். தேவலோகத்தில் இருக்கின்ற நீ இறந்து பூலோகத்தில் பிரச்சேனர்கள் மகனாகப் பிறக்கக் கடவாயாக" இதைக் கேட்ட தட்சன், நடுங்கிப் போய்விட்டான். "மகளே! நீ எல்லா உலகங்களுக்கும் தாய் என்பதை மறந்துவிட்டேன். உன் கொடுமையான சாபத்தில் இருந்து எனக்கு விடுதலை தர வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். அதற்கிணங்கிய சதி, பூமியில் பிறந்தாலும் என்னிடமும் சிவனிடமும் பக்தி கொண்டவனாகப் பிறப்பாயாக. என்னுடைய பெயரில் வழங்கும் நூற்று எட்டுத் தீர்த்தங்களில் நீ நீராடுவாயாக. இவற்றையெல்லாம் செய்து முடித்த பின்பு உன் சாபம் நீங்கும் என்று கூறி தன் உடம்பைப் போக்கிக் கொண்டாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 5 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சூரியன், உடனே, விஸ்வகர்மா, கேட்ட, தாய், சென்று, பெற்றான், யமன்