மச்ச புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்
ஷத்த ரூபாவை மணந்து கொண்ட பிரம்மன், நூறாண்டுகள் கணவனும், மனைவியுமாக வாழ்ந்து சுவயம்பு மனுவைப் பெற்றனர். மச்சபுராணம் வைவஸ்வத மனு வுக்கு மச்சத்தால் சொல்லப்பட்டது என்பதை நினைவுகூர வேண்டும். இப்பொழுது வைவஸ்த மனு ஒரு வினாவை எழுப்பினான். "ஒ விஷ்ணுவே! இது எனக்கு ஓரளவு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. ஷத்த ரூபா என்பவள் பிரம்மனின் மகள்தானே! அப்படியிருக்க அவளையே மணந்து கொண்டது சரியா? என்று கேட்க விஷ்ணு “சரியில்லைதான். ஆனால் பிரபஞ்சத்தில் மக்கள் தொகை பெருக வேண்டுமே. அதற்காகத்தான் பிரம்மன் இக்காரியம் செய்தார். தெய்வங்கள் செய்யும் செயலை மனிதர்களின் ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது சரியாகாது” என்று விஷ்ணு பதிலளித்தார்.
இதன் பிறகு பிரம்மன் மனோ சக்தியால் சனகர் முதலிய நால்வரையும், சிவனையும் படைத்தார். சிவனை அழைத்துத் தன் படைப்புத் தொழிலில் உதவுமாறு கேட்டுக் கொண்டார். சிவன் தன்னைப் போலவே சாவாமூவா மக்களைப் படைக்க பிரம்மன் சிவனைப் பார்த்து, இப்படியே படைத்தால் யமனுக்கு வேலை இல்லாமல் போய்விடும். எனவே பிறந்து இறந்து மறுபடியும் பிறக்கின்ற மக்களைப் படைக்க வேண்டும் என்று கூறினார். தாம் அவ்வாறு செய்ய முடியாது என்று சிவன் கூறியவுடன், தாங்கள் படைப்புத் தொழில் செய்ய வேண்டா. நானே அதனைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று பிரம்மா கூறிவிட்டார். உடனே ஸ்வயம்புமனு பன்னெடுங்காலம் தவம் செய்து அதன் பயனாய் ஆனந்தி என்ற பெண்ணை உண்டாக்கி அவளை மணந்து கொண்டார். இவர்கள் இருவரும், பிரியவரதா, உத்தானபாதா என்ற இரு மகன்களைப் பெற்றனர். உத்தானபாதன் பரம்பரையில் வந்த பிராச்சீனவர்ஹி, கடலரசன் மகள் சாவர்ணாவை மணந்து கொண்டான். அவர்களுக்குத் தோன்றிய பத்துப் பிள்ளைகளே பிரசேதர்கள் எனப்பட்டனர். இந்தப் பதின்மரும் மரீஷா என்ற பெண்ணையே மணந்தனர். பிரசேதாவுக்கும், மரீஷாவிற்கும் தோன்றிய மகன் தட்சன் ஆவான்.
தட்சன் பரம்பரை
தட்சன் பஞ்சஜனி என்பவளை மணந்து ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் வளர்ந்து இளமைப் பருவம் எய்தியவுடன் நாரதர் அங்கு வந்து சேர்ந்தார். அவர்களைப் பார்த்து 'உங்கள் தந்தைக்குப் பிறகு அரசாள வேண்டியவர்கள் அல்லவா நீங்கள்? உலகம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் எப்படி செம்மையாக ஆட்சி செய்ய முடியும்? ஆகவே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்து வாருங்கள் என்று அனுப்பினார். யாத்திரை சென்ற ஆயிரம் பேரும் திரும்பி வரவே இல்லை. இதனை அறிந்த தட்சன் மனம் வருந்தி, மறுபடியும் ஒர் ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றான். இவர்களும் வளர்ந்து பருவம் அடைந்தவுடன், நாரதன் அதே வேலையைச் செய்ய இவர்களும் உலகைச் சுற்றி வருகிறேன் என்று சொல்லி காணாமல் போய்விட்டனர். இதனை அடுத்து தட்சன் அறுபது பெண்களைப் பெற்று பத்துப்பேரை தர்ம தேவதைக்கும், இருபத்தி ஏழு பேரை சந்திரனுக்கும், பதின்மூன்று பேரை காசிப முனிவருக்கும், எஞ்சியுள்ளவர்களை மற்ற முனிவர்களுக்கும் திருமணம் செய்து கொடுத்தான்.
காசியபனை மணந்த பதின்மூவருள் அதிதியும், திதியும் முக்கியமானவர்கள். அதிதி வயிற்றில் பிறந்த அனைவரும் ஆதித்தர் எனப்படும் தேவர்கள் ஆவர். திதி வயிற்றில் பிறந்தவர்கள் தைத்தியர்கள் ஆவர். காசிபனின் மனைவியருள் ஒருத்தியான தனு மூலம் நூறு தானவர்கள் தோன்றினர். இவர்களில் விப்ரசித்தி முக்கியமானவன் ஆவான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 3 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தட்சன், பிரம்மன், மணந்து, கொண்டார், செய்ய, ஆயிரம், பார்த்து