கூர்ம புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
முன்னொரு காலத்தில் உலகில் எங்கும் கடும் பஞ்சம் நிலவியது. பல ஆண்டுகளாக மழையே இல்லாததால் யாருக்கும் உணவு கிடைக்கவில்லை. காட்டில் உள்ள முனிவர் களுக்கும் உணவு கிடைக்கவில்லை. அந்த நிலையில், காட்டில் மற்றொரு பகுதியில் கெளதம முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். மிகப் பெரிய ஆன்மீக பலம் பொருந்திய அவர் ஆசிரமத்தைச் சுற்றி மழை பொழிந்து வந்தது. அங்கு உணவிற்குப் பஞ்சமே இல்லை. பஞ்சத்தில் அடிபட்ட முனிவர் அனைவரும் இறுதியாக கெளதம முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றனர். அவர்களை வரவேற்ற கெளதமர் அவர்களுக்கு வேண்டுமான உணவளித்துத் தம்மிடமே தங்கச் செய்தார். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து எங்கும் மழை பெய்து பஞ்சம் நீங்கியது. முனிவர்கள் தங்கள் சொந்த இடத்திற்குப் போக விரும்பினர். ஆனால் கெளதமர் அவர்களை விடவில்லை. அதனால் கோபம் அடைந்த முனிவர்கள் கெளதமரின் பேரில் பழிபோட நினைத்தனர். மாயை ஆன கறுப்புப் பசுவை கன்றுக்குட்டி ஒன்றை அவர்கள் உண்டாக்கி கெளதமரின் தோட்டத்தில் மேயவிட்டனர். முனிவர்களின் வஞ்சகத்தை அறியாத கெளதமர் அந்தப் பசுவின் கன்றை மாட்டுக் கொட்டிலில் விடுவதற்காக அதைத் தூக்குவதற்குத் தொட்டவுடன் அந்தக் கன்றுகுட்டி இறந்து விட்டது. அதைப் பார்த்த முனிவர்கள் “ஒ, கெளதமரே நீர் பசுக்கொலை செய்துவிட்டீர். உம்மிடம் நாங்கள் இருக்க மாட்டோம்” என்று சொல்லிப் புறப்பட முயன்றனர். இதற்குள் நன்றி கெட்ட முனிவர்கள் செய்த செயலை அறிந்து கொண்ட கெளதமர் “நீங்கள் செய்த தீய செயலுக்காக உங்களைச் சபிக்கிறேன். பலமுறை நீங்கள் ஒவ்வொருவரும் மனிதராகப் பிறந்து, நரகத்தில் கிடந்து உழல்வீர்களாக” என்று சபித்தார்.
மனிதர்களெல்லாம் விஷ்ணுவினிடமும் சிவனிடமும் சென்று தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினார்கள். விஷ்ணு அவர்களை மன்னிக்க முடியாது என்று கூறிவிட்டார். இதுவரை நேர்மையான பாதையில் சென்ற அவர்களை நரகத்திற்கு அனுப்பவும் முடியாது. ஆகவே சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். முதலாவது இவர்களை நேர்மையான வழியினின்று மாற்ற வேண்டும். பிறகு கெளதமனின் சாபப்படி இவர்கள் நரகம் போகச் சரியாக இருக்கும் என்று கருதினர்.
இந்த யோசனையின் படியே சிவன் ஒரு போலி குருவாக வந்து இந்த முனிவர்களின் மனத்தை மாற்றினார். முனிவர்கள் தவறான வாழ்க்கை வாழத் தொடங்கியதால் அவர்கள் நரகம் செல்வது எளிதாயிற்று. கெளதமரின் சாபமும் பலித்தது.
(இதனை அடுத்து அந்தகன் கதையும், வலிச்சக்கரவர்த்தி கதையும் பேசப்படுகிறது. இக்கதைகள் முன்னரே பல புராணங்களில் கூறப்பட்டுள்ளதால் அவற்றை இங்கே கொடுக்கவில்லை,)
வனா
வலிச்சக்கரவர்த்திக்கு நூறு பிள்ளைகள் இருந்தனர். அவர்களுள் மூத்தவனான இவன் சிவபக்தன். மிகுந்த வலிமை படைத்தவனாகிய வனா இந்திரனை வெற்றி கொண்டு, மூவுலகையும் ஆண்டு வந்தான்.
இந்திரனும், மற்ற தேவர்களும் சென்று சிவனிடம் முறையிட்டனர். சிவனை நோக்கி, ‘ஐயனே! உம்முடைய பக்தனாகிய வனா எங்களுக்கு மிகுந்த சிரமத்தைத் தருகிறான். ஆகவே அவனிடமிருந்து எங்களைக் காக்க வேண்டும் என்று கூற, சிவனும் சம்மதித்தார். சிவபெருமான் ஒரே ஒரு அம்பினை எய்து, வனாவின் நகரம் முழுவதையும் எரித்தார். தன்னுடைய நகர் முழுவதும் எரிந்ததைக் கண்ட வனா சிவலிங்கத்தை வழிபட ஆரம்பித்தான். அவனுடைய அன்பினை மெச்சிய சிவபெருமான் தன்னுடைய கணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூர்ம புராணம் - பகுதி 8 - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, முனிவர்கள், கெளதமர், அவர்களை, முனிவர், கெளதமரின், கெளதம