கருட புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
இப்பொழுது நான் முழு தைரியத்துடன் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்வேன். பேய்கள், பூதங்கள், ராட்சசர்கள் ஆகியோர் என்னை ஒன்றும் செய்ய முடியாது. தெய்வங்கள் என்னை ஓயாது காக்கின்றன. எனவே எனக்கு அச்சம் என்பதில்லை. கவசத்துக்குள் வைக்கப்படும் மந்திரங்கள் ரகசியமாக இருக்க வேண்டும்.
மெய்ஞ்ஞானம்
துயரம் என்பது அகங்கார மமகாரங்களினால் உண்டாகிறது. நான் என்ற அகங்காரமும், எனது என்ற மமகாரமும் இருக்கும் வரை, மெய்ஞ்ஞானத்தை அடைதல் இயலாத காரியம். அஞ்ஞானம் என்பதை, ஒரு மரமாக உருவகம் செய்தால், அதனுடைய வேரும், அடிமரமும் அகங்காரமாகும். வீடு, மனை என்பன அஞ்ஞான மரத்தின் பெருங் கிளைகளாகவும், மனைவி, மக்கள், சுற்றம் என்பவர்கள் சிறு கிளைகளாகவும், பொருட்செல்வம் இலைகளாகவும் கருதபபடலாம்.
பாப, புண்ணியங்கள் அம்மரத்தின் பூக்கள். இன்ப, துன்பங்கள் மரத்தின் பழங்களாகும். மக்கள் உலக விவகாரங்களில் ஈடுபட்டு, அலுத்துப் போய் இம்மரத்தின் அடியில் ஒதுங்குகின்றனர். இந்த மரத்தின் அடியில் தங்கிப் பெறும் மகிழ்ச்சி, துன்பம் எதுவாயினும் அவை நிலையானவை அல்ல. உண்மையான மகிழ்ச்சி, நிலையான இன்பம் எப்போது வருமென்றால், இந்த மரமும், அது தரும் நிழலும், அது தரும் பழங்களும் வெறும் மாயையே என்பதை உணரும் பொழுது தான் கிடைக்கும்.
கற்றறிந்தவர்கள் உண்மையான அறிவைக் கொண்டு, அல்லது மெய்ஞ்ஞானத்தின் உதவியால் இந்த அஞ்ஞானத்தை வெட்டி வீழ்த்துகின்றனர். இம்மரத்தை வெட்டி வீழ்த்தியவர்களே, மெய்ஞ்ஞானிகள் எனப்படுவர். அவர்கள் பரப் பிரம்மத்திடம் ஐக்கியமானவர்கள். அவர்களே உண்மையான இன்பத்தைக் கண்டவர்கள் ஆவர். அஞ்ஞானத்தில் மூழ்கியவர்கள் இந்த பூத உடம்பும், ஆன்மாவும், வெவ்வேறானவை என்று தெரியாமல் இரண்டையும் ஒன்றாக்கிக் குழம்புகின்றனர். ஞானம் என்பது என்ன? தங்குவதற்கு ஒரு வீடு, உடல் நிலை பெற உணவு, அஞ்ஞானத்தைப் போக்கும் மெய்ஞ்ஞானம் இவை தவிர எஞ்சிய அனைத்தும் பயனற்றவை.
மெய்ஞ்ஞானத்தை நாடுபவன் பின்வருமாறு பிரார்த்தனை செய்கிறான்: "நான் இந்த பூதவுடம்பல்லன், ஒளி பொருந்திய பிரம்மமே ஆவேன் நான் என்னைப் பொறுத்தவரை பிறப்பு, இறப்பு ஒன்றுமில்லை. இந்த உலகத்திற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஒளி பொருந்திய பரப்பிரம்மமாகிய யான், பஞ்ச பூதங்களில் இருந்து வேறுபட்டு நிற்பவன். ஒளி பொருந்திய பிரம்மமாகிய நான் தங்குவதற்குத் தனியாக ஓர் இடம் இல்லை. எங்கும் நிறைந்திருக்கும் இயல்பினன் யான். ஒளி பொருந்திய பிரம்மமாகிய என்னைத் தொடவோ, முகரவோ இயலாது. நான் கேட்பதும் இல்லை, பேசுவதும் இல்லை. எனக்கு எந்தப் பொறிபுலன்களும் இல்லை. மூச்சு விடும் உயிரல்லன் யான். அஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருட புராணம் - பகுதி 7 - Garuda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, நான், இல்லை, பொருந்திய, யான், உண்மையான, மரத்தின்