கருட புராணம் - பகுதி 9 - பதினெண் புராணங்கள்
ஒருமுறை கருடன் உலகத்தைச் சுற்றிப் பார்த்துவர எண்ணி மூன்று உலகங்களையும் பார்த்துவிட்டு மீண்டான். அவன் மனத்தில் மகிழ்ச்சி இல்லை. மனம் கனமாக இருந்தது. சென்றவிடங்களில் எல்லாம் துக்கமும், துயரமும் தாண்டவ மாடக் கண்ட கருடன் மனஅமைதி இல்லாமல், விஷ்ணு லோகம் போய்ச் சேர்ந்தான். அவன் இதுவரை பார்த்த காட்சிகளுக்கு நேர்விரோதமாக விஷ்ணு லோகத்தில் அனைவரும் ஆனந்தத்துடன் இருந்தனர். மிக அழகான உடை உடுத்தி மகிழ்ச்சி தாண்டவமாடும் முகங்களுடன் காணப்பட்டனர். இலட்சுமி எல்லா இடங்களிலும் இருந்ததால் எங்கும் ஐஸ்வர்யம் நிரம்பி இருந்தது. ஒர் அழகிய பொன்னால் ஆகிய சிம்மாசனத்தில் விஷ்ணு மந்தகாசப் புன்னகையுடன் அமர்ந்திருந்தார். எங்கும் இன்பமயம். கருடனுடைய மனத்தில் ஒரு நெருடல். மூன்று உலகங்களையும் நிறைத்துக் கொண்டு நிற்கும் துயரம் துன்பம் எங்கே? இந்த விஷ்ணுலோகத்தில் காணப்படும் அமைதியும் இன்பமும் எங்கே? ஏன் இப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்த கருடன் விஷ்ணு எதிரே போய் நின்றான். கலக்கமுற்ற முகத்துடன் நிற்கும் கருடனைப் பார்த்து, விஷ்ணு, “கருடா! எப்படி இருக்கிறாய்? எல்லாம் நலம்தானா? உலகம் சுற்றிப் பார்க்கப் போனாயே, எங்கெங்கு சென்றிருந்தாய்?” என்று கேட்டார்.
கருடன்
யமலோகத்தைத் தவிர மற்ற எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டேன். என் மனத்தில் சில கேள்விகள் உள்ளன. அவற்றிற்குத் தங்களிடம் இருந்து விடை தெரிந்துகொள்ள வேண்டுகிறேன். ஏன் உயிர்கள் உலகில் பிறக்கின்றன? ஏன் இறக்கின்றன? உடம்போடு ஒட்டிய பொறிபுலன்கள் ஒருவர் இறந்த பிறகு என்ன ஆகின்றன? இறந்த பிறகு மனிதர்கள் எங்கே போகிறார்கள்? சிரார்த்த சடங்கு ஏன் செய்யப் படுகிறது? ஒருவன் உயிரோடு இருக்கும் பொழுது செய்த பாவ, புண்ணியங்கள் அவன் உடம்பு அழிந்த பிறகு என்ன ஆகின்றன? இறப்பு என்பது என்ன?
மேலே கண்டவற்றுள் சில கேள்விகளுக்கு விஷ்ணு விடை கூறினார். இறந்தவர்கள் எங்கே போகிறார்கள் என்ற வினாவிற்குப் பல்வேறு நரகங்களைப் பற்றி மிக விரிவாக எடுத்துக் கூறிய விஷ்ணு, அடுத்து விருஷ்டோசர்கா என்ற சடங்கைப் பற்றிக் கூறினார். அதை விளக்குவதற்குப் பின்வரும் கதையினைக் கூறினார்.
முன்னொரு காலத்தில் விரவாஹனா என்ற மன்னன் நடுநிலை தவறாமல் நேர்மையுடன் ஆட்சி செய்து வந்தான். ஒருமுறை காட்டிற்குச் சென்ற பொழுது வசிட்டரின் ஆசிரமம் எதிரே தென்பட்டது. உள்ளே சென்று, முனிவரை வணங்கிய மன்னன், முனிவரே! நன்முறையில் ஆட்சி செய்தாலும் யமபயம் என்னை வாட்டுகிறது. யமனுடைய பிடியில் அகப்படாமல் இருப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிவித்தருளுங்கள் என்று கேட்டான். “தர்மவழி பலவகைப்படும் என்று தர்ம சாத்திரங்கள் சொல்கின்றன. தர்மம் செய்வதில் ஒரு காளைமாட்டை தானம் செய்வது மிகச் சிறந்த புண்ணியமாகும்” என்று வசிட்டர் கூறிவிட்டு, "தர்மவத்சாவின் கதை தெரியுமா?” என்று கேட்டு, வசிட்டர் கூற ஆரம்பித்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருட புராணம் - பகுதி 9 - Garuda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விஷ்ணு, கருடன், என்ன, எங்கே, கூறினார், மனத்தில், பிறகு, அவன், சுற்றிப்