பிரம்ம புராணம் - பகுதி 11 - பதினெண் புராணங்கள்
நாகலோகவாசியான அனந்தனுக்கு மணிநாகன் என்ற ஒரு புத்திரன் பிறந்தான். கருடனைக் கண்டால், பாம்புகளுக்கு நடுக்கம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதை அறிந்த மணிநாகன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்தான். தவத்தை மெச்சிய சிவபெருமான் கருடனால் ஒன்றும் செய்ய முடியாத ஆற்றலை மணிநாகத்திற்குத் தந்தார். வரபலத்தின் தைரியத்தால் கருடனைக் கண்டு அஞ்சாமல் மணிநாகம் சுற்றித் திரிந்தான். அவனை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்த கருடன், அவனைத் துக்கிக்கொண்டு சென்று தன் வீட்டில் சிறை வைத்தான். பல நாட்கள் மணிநாகனைக் காணாமையால் நந்திதேவன் சிவனிடம் சென்று முறை யிட்டான். சிவன், “நீ மகாவிஷ்ணுவிடம் சென்று மணிநாகனை விடுதலை செய்து கொண்டுவா!” என்று ஆணையிட்டார். நந்திதேவன் மகாவிஷ்ணுவிடம் சென்று தன் வேண்டுகோளைச் சொன்னான். விஷ்ணு கருடனை அழைத்து மணி நாகனை விட்டுவிடு என்று கூறினார். அதனைச் செய்ய விரும்பாத கருடன், 'ஐயனே! சிவன் முதலானவர்களெல்லாம் தமக்கு உதவி செய்பவர்களுக்கும், வாகனங்களுக்கும் எவ்வளவோ நன்மைகள் செய்கிறார்கள்; பாராட்டுகிறார்கள். உங்களுடைய வாகனம் நான். நீங்கள் அசுரர்களுடன் போரிட வேண்டுமானால் என்மேல் ஏறிக் கொண்டுதான் போர் செய்கிறீர்கள். நான் இல்லையானால் உங்களால் போர் செய்யவே முடியாது” என்று கூறினான். உடனே விஷ்ணு, "நீ சொல்வது உண்மைதான். என்னுடைய பாரத்தைச் சுமக்கின்ற நீ பெரியவன்தான். இதோ பார். என்னுடைய சுண்டு விரலை உன் தலையில் வைக்கிறேன். அதை எவ்வளவு எளிதாகச் சுமக்கிறாய் என்று பார்க்கலாம்” என்று கூறி விஷ்ணு தன் சுண்டு விரலைக் கருடன் தலையில் வைத்தவுடன் கருடன் தலை நசுங்கியதுடன் உடலும் நசுங்கி விட்டது. கருடன் உடனே தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். விஷ்ணு விரலை எடுத்தவுடன் கருடன் தலைப்பாரம் குறைந்ததே தவிர நசுங்கிய தலையும், உடலும் பழைய நிலைக்கு வரவே இல்லை. அவன் வருந்திய பொழுது, “நீ சிவனிடம் சென்று முறையிடு. உன் குறையைத் தீர்ப்பார்” என்று கூறினார். கருடன் சிவனிடம் சென்ற பொழுது அவர் கருடனை கெளதமி கங்கையில் 15 நாள் மூழ்கி எழுமாறு கூறினார். அதனால் அவன் பழைய உடல் வந்தது. மணிநாகமும் விடுதலை பெற்றான். அப்பகுதி இதனால் கருடதீர்த்தம் என்று பெயர் பெற்றது.
விசுவாமித்திர தீர்த்தம்
ஒரு காலத்தில் நாடு முழுவதும் பயங்கரமான பஞ்சத்தின் பிடியில் சிக்கியது. விசுவாமித்திர முனிவர், அவர் குடும்பத்தார், சீடர்கள் அனைவரும் எத்தகைய உணவும் கிடைக்காமையால் வாடி வதங்கினர். விஸ்வாமித்திரர் தன் சீடர்களைப் பார்த்து எங்காவது தேடிச் சென்று ஏதாவது கிடைத்ததைக் கொண்டு வருக என்று கூறினார். தேடிச் சென்றவர்கள் வேறு ஒன்றும் கிடைக்காமையால் இறந்து கிடந்த நாய் ஒன்றின் உடலைக் கொண்டு வந்தார்கள். முனிவர் அவர்களை நோக்கி, "இதன் புலாலை நன்கு கழுவி சுத்தம் செய்து தெய்வங்கட்கும், பிதுரர்கட்கும் முதலில் படையுங்கள். பிறகு இதனை நாம் உண்ணலாம்” என்று கூறினார். நாயின் புலாலைப் படைப்பது என்பது கேள்விப்படாத விஷயம். இதை அறிந்த இந்திரன் வல்லுறு வடிவம் கொண்டு வந்து நாய் உடல் இருந்த கிண்ணத்தைத் தூக்கிச் சென்று விட்டான். இதை அறிந்த விஸ்வாமித்திரர் இந்திரனை சபிக்க முற்பட்டார். முனிவர் சாபத்திற்கு அஞ்சிய இந்திரன் அந்தக் கிண்ணம் நிறைய அமிர்தத்தைக் கொண்டுவந்து, "முனிவரே! இதைச் சாப்பிடுங்கள்” என்று கூறினான். அதை மறுத்த விஸ்வா மித்திரர், "இந்திரா! உலகம் முழுதும் பட்டினியால் சாகும் பொழுது நான் மட்டும் அமிர்தத்தை உண்ண விரும்பவில்லை. மேலும் புலால் உண்பதில் நாயின் புலால் ஆகாது என ஏன் நினைக்க வேண்டும்? உன் அமிர்தம் எனக்கு வேண்டாம். நாய் உடம்பு உள்ள கிண்ணத்தையே கொண்டு வா” என்றார். முனிவரின் முடிவை மாற்ற முடியாது என்பதை அறிந்த இந்திரன் மேகங்களை எல்லாம் ஏவி மழை பொழியும் படி செய்தான். அதன் பிறகே விஸ்வாமித்திரர் அமிர்தத்தை வாங்கி உண்டார். இது நடந்த இடம் "விஸ்வாமித்திர தீர்த்தம்” என்று அழைக்கப் பெற்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம புராணம் - பகுதி 11 - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கருடன், சென்று, அறிந்த, ", கூறினார், கொண்டு, விஷ்ணு, விஸ்வாமித்திரர், இந்திரன், முனிவர், நாய், பொழுது, செய்ய, நான், ஒன்றும், சிவனிடம்