முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » லுட்விக் வான் பீத்தோவன் (கி.பி.1770 - கி.பி.1827)
லுட்விக் வான் பீத்தோவன் (கி.பி.1770 - கி.பி.1827)
இசையமைப்பாளருள் மிகச் சிறந்தவரான லுட்விக் வான் பீத்தோவன் ஜெர்மனியிலுள்ள பான் நகரில் 1770இல் பிறந்தார். அவர் சிறுவயதிலேயே தம் திறமையை வெளிப்படுத்தினார். 1783 இல் அவருடைய முதல் நூல் வெளியிடப் பெற்றது. இளைஞராக இருந்தபோது, அவர் வியன்னா சென்றார். அங்கு மோஸார்ட்டுக்கு அறிமுகமானார். ஆயினும், அவர்களுடைய தொடர்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. 1792 இல் பீத்தோவன் வியன்னாவுக்குத் திரும்பவும் சென்றார். அங்கு கொஞ்ச காலம், அப்போது வியன்னாவின் புகழ்மிகு இசையமைப்பாளராக இருந்த ஹேடனிடம் பயின்றார். (1791 இல் மோஸார்ட் இறந்து விட்டார்). அந்நாளில் உலகின் இசைத் தலைநகராக விளங்கிய வியன்னாவில் பீத்தோவன் தம் வாழ்நாளில் எஞ்சிய காலத்தைக் கழித்தார்.
"பியானோ" எனும் இசைப் பெட்டியை இசைக்கும் திறமையை பீத்தோவன் பெற்றிருந்ததால், அவர் எல்லோரின் கவனத்தையும் கவர்ந்தார். இசைவாணராகவும், இசை ஆசிரியராகவும் அவர் திகழ்ந்தார். விரைவில் சிறந்த இசையமைப்பாளருமானார். அவருடைய இசை நூல்கள் நன்கு வரவேற்கப்பட்டன. அவர் தம் 25 ஆம் வயது முதல் அவற்றை எளிதில் பதிப்பகங்களுக்கு விற்க முடிந்தது.
பீத்தோவன் தம் 39 ஆம் வயதை நெருங்கும் போது தமக்குக் காது சரியாகக் கேட்கவில்லை என்பதை உணர்ந்தார். அந்த இளம் இசையமைப்பாளருக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. தற்கொலை செய்யலாமா என்றும் கூட அவர் சிந்தித்தார்.
1802 முதல் 1815 வரை அவரது இசை வாழ்வின் நடுப்பகுதியாகச் சிலவேளை கருதப்படுகிறது. அக்காலத்தில் அவருடைய காது வரவர மிகுதியாக மந்தமாகியது. அவர் பிறருடன் கலந்து உறவாட விரும்பவில்லை. அவர் காது கேட்காததால் சமுதாயத்தை விட்டு ஒதுங்கி வாழ்ந்ததைக் கண்ட மக்கள் அவர் மனித சமுதாயத்தை வெறுப்பவரென்று தவறாகக் கருதினர். அவர் பல இளம் நங்கையருடன் காதல் உறவுகளில் ஈடுபட்டபோதிலும் அவை எல்லாம் தோல்வியுற்றதாகவே தெரிகின்றது. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
பீத்தோவனின் இசைப் படைப்புகள் தொடர்ந்து பெருகி வந்தன. ஆயினும், காலப்போக்கில் அவர் அக்கால இசை ஆர்வலர்கள் விரும்பும் இசையைப் படைப்பதில் குறைவாகவே கவனம் செலுத்தினார். ஆயினும் அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார்.
பீத்தோவன் 50 வயதை நெருங்கும் போது அவருக்கு காது முற்றிலும் கேட்கவில்லை. அதன் விளைவாக அவர் பொது இடங்களில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. சமுதாயத்தினின்றும், ஒதுங்கி தனித்தே வாழ்ந்தார். அவருடைய படைப்புகளின் எண்ணிக்கையும் குறைந்தது. அவற்றைப் புரிந்து கொள்வதும் அரிதாக இருந்தது. அப்போது அவர் தமக்காகவும், வருங்கால இலட்சிய இசையார்வலர்களுக்காகவும் இசையமைத்து வந்தார். "இவை உமக்காக அல்ல; வருங்காலத்திற்காக" என்று ஓர் இசைத் திறானாய்வாளரிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
எக்காலத்திற்குமுரிய ஓர் இசைமேதை கேள்விச் செல்வத்தை முற்றிலும் இழந்துவிட்டது காலத்தின் கடுமையான கொடுமைகளுள் ஒன்றாகும். பீத்தோவன் காது கேளாவிடினும் இயல்பு மீறி மனவுறுதியுடன் தமது இசைத் திறமையைப் பேணி வந்திருந்தாரென்றால் அது நமக்கு ஊக்கமளிப்பதுடன் நம்பமுடியாத சாதனையாகவும் இருந்திருக்கும். ஆனால் உண்மை நிகழ்ச்சி கற்பனைக் கதையைவிட விசித்திரமானது. உண்மையில், அவர் முற்றியலும் செவிடான பிறகு, தாம் முன்னர் படைத்த இசையமைப்புகளைவிட மிகுதியாகப் படைத்தார். அவரது இறுதிக் காலப் படைப்புகளே அவருடைய தலைசிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன. 1827 இல் தமது 57 ஆம் வயதில் வியன்னாவில் இறந்தார்.
பீத்தோவனின் திரளான படைப்புகளுள் 9 இணைப்பிசைகளையும் 32 பியானோ இசைப்பாக்களையும் தனி இசைக் கருவிக்குப் பயன்படும் பாடல்களையும் உருவாக்கினார். பியானோ, வயலினுக்கான 10 இசைப் பாக்களையும் அரிய பதங்கள், வாய்ப்பாட்டு, அரங்கு இசை போன்ற சிலவற்றையும் படைத்தார். அவருடைய படைப்புகளுள் எண்ணிக்கையைவிட தாமே முக்கியமானது. அவற்றில் உணர்ச்சி ஆழமும் இசை வடிவ அமைப்பும் எழில்பட இணைந்துள்ளன. கருவிகளில் எழுப்பப்படும் இசை சிறப்பில் குறைந்ததன்று என்பதை பீத்தோவன் எண்பித்தார். அவர் அமைத்த இடைப்படைப்புகள் அந்த இசையை இசைக் கலையின் கொடுமுடிக்கு உயர்த்தின.
பீத்தோவன் தனித்தன்மை வாய்ந்த ஓர் இசையமைப்பாளர். அவர் இசையில் செய்த மாற்றங்களின் விளைவுகளை இன்றும் காணமுடிகின்றது. இசைக்குழுவின் அளவையும் அவர் விரிவாக்கினார். அவர் இணைப்பிசையை விரிவாக்கி அதன் இசை எல்லையையும் பரப்பினார். பியானோவின் பரந்த பயன்களை எடுத்துக்காட்டி அதை மிக உயர்ந்த இசைக் கருவியென எண்பித்தார். பண்டைய இசைக் கலையானது புத்தெழுச்சிக்கலை இசைக்கலையாக மாறிய நிலைக்குச் சான்றாக பீத்தோவன் திகழ்கின்றார். புத்தெழுச்சிக் கால இயல்புகளுக்கு அவருடைய படைப்புகள் ஊக்கமளித்தன.
பல்வேறு இசை இயல்பினையுடைய ப்ராஹ்ம்ஸ், வாக்னர், ஷ•பர்ட், ஷாய்க்கோவ்ஸ்கி போன்ற பிற்கால இசையமைப்பாளரிடம் பீத்தோவனின் இசைப் பண்புகளைக் காணலாம். பெர்லியோஸ், கஸ்டாவ் மாஹ்லர், ரிச்சர்டு ஸ்ட்ராஸ் போன்ற பலருக்கும் அவரே முன்னோடியாக இருந்தார்.
இப்பட்டியலிலுள்ள பிற இசைவாணர்களை பீத்தோவன் மிஞ்சி விடுகிறார் என்பதில் ஐயமில்லை. ஜோஹோன் செபஸ்டின் பாக் இவரைப்போல புகழ் பெற்றிருந்தாலும், பாக்கின் இசைப்படைப்புகளைவிட இவருடைய இசைப் படைப்புகளையே மக்கள் பரவலாகவும் அடிக்கடியும் கேட்டு வருகின்றனர். மேலும், பாக்கின் படைப்புகளைவிட பீத்தோவன் படைப்புகளே பிற்கால இசையைப் பெரிதும் பாதித்தன.
பொதுவாக இசையைவிட அரசியல் அறநெறிக் கருத்துகளை எளிதில் தெளிவாகச் சொற்களில் வெளிப் படுத்த முடியும். ஆகவே இசையைவிட இலக்கியமே மிகுந்த செல்வாக்கைப் பெறும் கலைத் துறையாகும். இதனால் தான், பீத்தோவன் இசை வரலாற்றில் உயர்ந்த மனிதராக விளங்கிய போதிலும், இங்கு ஷேக்ஸ்பியரைவிட தாழ்ந்த இடமே அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. பீத்தோவனையும் மைக்கேல் ஆஞ்செலோவையும் ஒப்பிடும் போது, ஓவியத்தையும், சிற்பத்தையும் பார்ப்பதற்கு மக்கள் செலவிடும் நேரத்தைவிட இசையைக் கேட்பதற்கே அதிக நேரம் செலவிடுகின்றனர் என்றே இங்குக் கருதுகிறேன். ஆகவே, ஓவியர்களும், சிற்பிகளும் தம் துறையில் உயர்ந்து விளங்கிய போதிலும் இசையமைப்பாளரின் செல்வாக்கே அவர்களின் செல்வாக்கைவிட மிக உயர்ந்ததெனக் கருதுகிறேன். எனவே பீத்தோவனை ஷேக்ஸ்பியருக்கும் மைக்கேல் ஆஞ்செலோவுக்குமிடையே வைத்தல் பொருந்துமென நினைக்கிறேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 73 | 74 | 75 | 76 | 77 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
லுட்விக் வான் பீத்தோவன் (கி.பி.1770 - கி.பி.1827), அவர், பீத்தோவன், அவருடைய, இசைப், காது, இசைக், மக்கள், பீத்தோவனின், விளங்கிய, ஆயினும், இசைத், போது, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்