முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » நெப்போலியன் போனபார்ட் (கி.பி.1769 - கி.பி.1821)
நெப்போலியன் போனபார்ட் (கி.பி.1769 - கி.பி.1821)
புகழ்மிகு ஃபிரெஞ்சு தளபதியும் பேரரசருமான முதலாம் நெப்போலியன் 1769 இல் கார்சிக்காவிலுள்ள அஜேசியோவில் பிறந்தார். அவரது இயற்பெயர் நெப்போலியன் போனபார்ட். அவர் பிறப்பதற்கு 15 மாதங்களுக்கு முன்புதான் கார்சிக்காவை ஃபிரான்ஸ் கைப் பற்றியது. நெப்போலியன் தமது இளமைப் பருவத்தில் கார்சிக்கா தேசியவாதியாக இருந்தார். அவர் ஃபிரெஞ்சு நாட்டவரை ஆதிக்க வெறியராகவே கருதினார். ஆயினும் அவர் ஃபிரான்சிலுள்ள படைத்துறைக் கழகங்களில் 1785 இல் தமது 16 ஆம் வயதில் தேர்ச்சிப் பெற்றார். பிறகு ஃபிரெஞ்சுப் படையில் ஒரு துணை அதிகாரியானார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஃபிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. சில ஆண்டுகளில் புதிய ஃபிரெஞ்சு அரசாங்கம் பல அயல்நாடுகளுடன் போர்புரிய நேரிட்டது. நெப்போலியனுக்குத் தமது திறமையைக் காட்டும் வாய்ப்பு 1793 இல் தூலோன் முற்றுகையின் போது ஏற்பட்டது. (அப்போது ஃபிரான்ஸ் அந்நகரை ஆங்கிலேயரிடமிருந்து திரும்பக் கைப்பற்றியது). அப்போது நெப்போலியன் பீரங்கிப் படை அதிகாரியாக இருந்தார். (அதற்குள்ளாக அவர் தமது கார்சிக்கா தேசியவாதக் கொள்கையைக் கைவிட்டுத் தம்மை ஒரு ஃபிரெஞ்சுக் குடிமகனாகவே கருதினார்). தூலோன் வெற்றி அவருக்குப் பதவி உயர்வை அளித்தது. 1796 இல் அவர் இத்தாலியில் ஃபிரெஞ்சுப் படையின் தளபதியானார். அங்கு 1796 - 97 இல் அவர் மாபெரும் வெற்றிகளைப் பெற்றார். பிறகு வீரராக அவர் பாரிஸ் திரும்பினார்.
1798 இல் நெப்போலியன் எகிப்தின் மீது படையெடுத்தார். அப்படையெடுப்பு படுதோல்வியாக முடிந்தது. நிலத்தில் நெப்போலியனின் படைகள் பொதுவாக வெற்றிப் பெற்றன. ஆனால் ஆங்கிலேய கப்பற்படை நெல்சன் பிரபுவின் தலைமையில் ஃபிரெஞ்சு கப்பற்படையை அழித்தது. 1799 இல் நெப்போலியன் தம் படையை எகிப்தில் விட்டு விட்டு ஃபிரான்ஸ் திரும்பினார்.
ஃபிரான்ஸ் திரும்பிய நெப்போலியன் ஃபிரெஞ்சு மக்கள் தம் இத்தாலியப் படையெழுச்சியின் வெற்றிகளை மட்டும் நினைத்ததையும், எகிப்திய படையெடுப்பின் படுதோல்வியை மறந்து விட்டதையும் கண்டார். இதைப் பயன்படுத்திக் கொண்டு அவர் அபேசியேயுடனும் பிறருடனும் சேர்ந்து அரசாங்கத்தைக் கவிழ்த்தார். அதன் விளைவாக கான்சல்களின் குழு ஆட்சி ஏற்பட்டது. நெப்போலியனின் படைத்துறை வல்லாட்சிக்கு ஒரு முகமூடியாகவே இருந்தது. அவரோ அரசாங்கத்தைக் கவிழ்த்த பிறரையும் விரைவில் விஞ்சினார்.
நெப்போலியன் வியத்தகு விரைவுடன் உயர் அதிகாரத்தைப் பெற்றார். ஆகஸ்ட் 1793 இல் தூலோன் முற்றுகைக்கு முன் அவர் யாருக்கும் தெரியாத, ஃபிரெஞ்சு குடிமகன் என்று கூட சொல்ல முடியாத, 24 வயதுள்ள ஒரு கீழ் அதிகாரியாகவே இருந்தார். 6 ஆண்டுக்குள்ளாக 30 வயதுள்ள அவர் ஃபிரான்சின் ஈடற்ற தலைவரானார். அப்பதவியில் 14 ஆண்டுகளாக இருந்தார்.
நெப்போலியன் ஆட்சியிலிருந்தபோது ஃபிரான்சின் ஆட்சித் துறையையும் சட்ட முறையையும் பெரிதும் திருத்தியமைத்தார். எடுத்துக்காட்டாக, அவர் நிதி அமைப்பையும், நீதித் துறையையும் சீர் திருத்தினார். ஃபிரான்சின் வங்கியையும், ஃபிரெஞ்சுப் பல்கலைக் கழகத்தையும் நிறுவினார். ஃபிரெஞ்சு ஆட்சித் துறையை ஒழுங்குப்படுத்தினார். இம் மாற்றங்கள், ஃபிரான்சின் முக்கிய நிலையான விளைவுகளை ஏற்படுத்திய போதிலும், உலகைப் பெரிதும் பாதிக்கவில்லை.
ஆயினும், நெப்போலியன் ஒரு சீர்திருத்தம் மட்டும் ஃபிரான்சின் எல்லைகளையும் கடந்து பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. அதுதான் நெப்போலியனின் சட்டத் தொகுப்பு எனப்படும் புகழ்மிகு ஃபிரெஞ்சு உரிமையியல் சட்டத் தொகுப்பு. பல வகைகளில் அச்சட்டத் தொகுப்பில் ஃபிரெஞ்சுப் புரட்சியின் குறிக்கோள்கள் பொதிந்திருந்தன. எடுத்துக்காட்டாக, அச்சட்டத் தொகுப்பின்படி பிறப்பின் அடிப்படையில் எவர்க்கும் சிறப்புரிமைகள் இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆயினும் இத்தொகுப்பு பழைய ஃபிரெஞ்சு சட்டங்களையும் வழக்கங்களையும் ஓரளவு சார்ந்திருந்ததால் ஃபிரெஞ்சு மக்களும் வழக்கறிஞர்களும் அதை ஏற்கவில்லை. பொதுவாக அது மிதமானதாகும். நன்கு தொகுக்கப் பெற்றதாகும். சுருக்கமாகவும், மிகத் தெளிவாகவும் எழுதப் பெற்றதாகவும் இருந்தது. ஆகவே, அச்சட்டத் தொகுப்பு ஃபிரான்சில் நிலைத்து நின்றது. மட்டுமல்லாமல், ஓரளவு மாற்றங்களுடன் பல நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (இன்றைய ஃபிரெஞ்சு உரிமையியல் சட்டத் தொகுப்பு நெப்போலியன் சட்டத் தொகுப்பைப் போன்றேயுள்ளது.)
நெப்போலியன் எப்போதுமே தாம் ஃபிரெஞ்சுப் புரட்சியின் பாதுகாவலரென்று வலியுறுத்தி வந்தார். ஆயினும் 1804 இல் அவர் தம்மைத் தாமே ஃபிரான்சின் பேரரசராக்கிக் கொண்டார். மேலும் சகோதரர் மூவரை ஐரோப்பிய அரசுகளின் அரியணையில் அமர்த்தினார். இச்செயல்களைக் கண்டு ஃபிரெஞ்சுக் குடியரசு வாதிகள் வெகுண்டனர். அவை ஃபிரெஞ்சுப் புரட்சியின் குறிக்கோள்களையே சிதைத்து விட்டதாக அவர்கள் கருதினர். ஆயினும் நெப்போலியனின் உண்மையான இடர்ப்பாடுகள் அயல்நாட்டுப் போர்களினாலேயே எழுந்தன.
நெப்போலியன் 1802 இல் ஏமியன்சில் இங்கிலாந்துடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அது பத்தாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்துவந்த போர்களுக்குப் பிறகு ஃபிரான்சுக்கு ஓய்வளித்தது. ஆயினும் அடுத்த ஆண்டே அவ்வுடன்படிக்கை முறிந்தது. இங்கிலாந்துடனும் அதன் நட்பு நாடுகளுடனும் நீண்டகாலப் போர் தொடங்கியது. நெப்போலியனின் படைகள் நிலத்தில் வெற்றிகளைக் குவித்தப் போதிலும், இங்கிலாந்தை தோற்கடிப்பதற்கு அதன் கப்பற்படையை முறியடிக்க வேண்டியிருந்தது. ஆனால் 1805 இல் ட்ராஃபால்கர் போரில் ஆங்கிலேய கப்பற்படை மாபெரும் வெற்றி பெற்றது. ஆகவே, இங்கிலாந்தின் கடன் வலிமை குலையவில்லை. ட்ராஃபால்கர் போருக்கு ஆறு வாரங்கள் கழித்து நெப்போலியன் (ஆஸ்டர்லிட்ஸில் ஆஸ்திரிய ரஷ்யப் படைகளை முறியடித்து) மாபெரும் வெற்றி பெற்ற போதிலும், கடற்போரில் அவர் அடைந்த தோல்விக்கு அதனால் ஈடுசெய்ய இயலவில்லை.
1808 இல் நெப்போலியன் ஃபிரான்சை ஒரு நீண்ட, பயனற்ற போரில் மூடத்தனமாக ஈடுபடுத்தினார். அப்போரில் ஃபிரெஞ்சுப் படைகள் ஐபீரியத் தீபகற்பத்தில் நீண்டகாலமாக அழுந்திக் கிடந்தன. ஆயினும், நெப்போலியனின் மாபெருந் தவறு அவரது ரஷ்யப் படையெடுப்பை, 1807 இல் நெப்போலியன் ரஷ்ய மன்னரைச் சந்தித்தார். டில்சிட் உடன்படிக்கையின்படி இருவரும் அணையா நட்புறவு கொள்ள இசைந்தனர். ஆனால் அந்நட்புறவு நாளடைவில் நலிவுற்றது. ஜூன் 1812 இல் நெப்போலியன் தமது பெரும்படையுடன் ரஷ்யாவினுள் நுழைந்தார்.
அதன் விளைவு அனைவர்க்கும் தெரிந்தவையே, ரஷ்யப் படைகள் நெப்போலியனுடன் நேரில் பொருதுவதைத் தவிர்த்தன. ஆகவே நெப்போலியன் விரைவாக முன்னேற முடிந்தது. செப்டம்பரில் அவர் மாஸ்கோவைக் கைப்பற்றினார். ஆயினும் ரஷ்யர் நகரைக் கொளுத்தி விட்டனர். அதன் பெரும் பகுதி அழிந்து விட்டது. 5 வாரங்கள் மாஸ்கோவில் தங்கிவிட்டு ரஷ்யர்கள் பணிந்து அமைதி வேண்டுவார்களென்று வீணாக நம்பி, இறுதியில் நெப்போலியன் பின்வாங்கத் தீர்மானித்தார். ஆனால், அதற்குள்ளாகக் காலம் கடந்து விட்டது. ரஷ்யப் படைகளின் தாக்குதல்களும், ரஷ்யாவின் குளிர்காலத்தின் கடுமையும், ஃபிரெஞ்சு படைகளின் உணவுப் பொருள் பற்றாக்குறையும் ஒன்று சேர்ந்து பின்வாங்கிய ஃபிரெஞ்சு படைகள் நிலை குலைந்து ஓடச் செய்தன. நெப்போலியன் பெரும்படையில் பத்தில் ஒரு பகுதியினரே ரஷ்யாவிலிருந்து உயிருடன் வெளியேறினர்.
ஆஸ்திரியா, பிரஷ்யா போன்ற பிற ஐரோப்பிய நாடுகள் ஃபிரெஞ்சு ஆதிக்கத்தைத் தகர்த்தெறிய அதுவே தருணமென்பதை உணர்ந்தன. அவை ஒன்று சேர்ந்து நெப்போலியனை எதிர்த்தன. அக்டோபர் 1813 இல் லீப்சிக் போரில் நெப்போலியன் மற்றொரு மாபெரும் தோல்வியைத் தழுவினார். அடுத்த ஆண்டு அவர் அரியணை துறந்தார். இத்தாலியக் கரைக்கப்பாலுள்ள சிறிய எல்பா தீவுக்கு அவர் கடத்தப்பட்டார்.
1815 இல் நெப்போலியன் எல்பாவிலிருந்து தப்பி, ஃபிரான்ஸ் திரும்பினார். அங்கு மக்கள் அவரை வரவேற்று மீண்டும் ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், பிற ஐரோப்பிய அரசுகள் உடனே அவர் மீது போர் தொடுத்தன. மீண்டும் ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குப் பிறகு வாட்டர்லூ போரில் இறுதியாக முறியடிக்கப்பட்டார். வாட்டர்லூ போருக்குப் பிறகு ஆங்கிலேயர் அவரை தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள செயின்ட் ஹெலினா எனும் சிறிய தீவில் சிறைப்படுத்தினர். 1812 இல் அவர் அங்கே புற்று நோயினால் இறந்தார்.
நெப்போலியன் படைத்துறை வாழ்க்கை வியத்தகு புதிராக இருக்கின்றது. படைத்திறன் சூழ்ச்சியில் அவரது அறிவு மிளிர்கின்றது. அதை மட்டும் வைத்து அவரை மதிப்பிடுவோமானால் அவரை எக்காலத்துக்குமுரிய மிக உயர்ந்த படைத்தளபதியாகக் கருதலாம். ஆனால் போர்த்திற நடவடிக்கைகளில் அவர் நம்ப முடியாத பெருந்தவறுகளைச் செய்தார். எகிப்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் மீது அவர் படையெடுத்ததை எடுத்துக்காட்டாகக் கூறலாம். அவருடைய போர் நடவடிக்கைத் தவறுகள் எவ்வளவு அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றனவென்றால், நெப்போலியனுக்குப் படைத்துறைத் தலைவர்களுள் முதலிடம் தர இயலாது. இந்த இரண்டாம் கருத்து தவறானதா? இல்லை அழிவு தரும் தவறுகளைத் தவிர்க்கும் திறமை ஒரு படைத் தளபதியில் சிறப்புக்கு அளவுகோல், மகா அலெக்சாந்தர் ஜெங்கிஸ்கான், தாமர்லேன் போன்ற பெரும் தளபதிகளைப் பற்றி இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அவர்களுடைய படைகள் ஒருபோதும் தோல்வியடையவில்லை. நெப்போலியன் இறுதியில் தோற்கடிக்கப்பட்டதால், அவருடைய அயல்நாட்டு வெற்றிகள் எல்லாம் நிலைபெயவில்லை. 1789 இல் ஃபிரெஞ்சுப் புரட்சி தொடங்கும் வேளையில் ஃபிரான்ஸ் பெற்றிருந்த நிலப்பரப்பைவிட, 1815 இல் நெப்போலியன் இறுதியாகத் தோல்வியுற்றபோது குறைவான நிலப்பரப்பைப் பெற்றிருந்தது.
நெப்போலியன் ஒரு தன்னல வெறியர். அவரைப் பலர் ஹ’ட்லருக்கு ஒப்பிடுவர். ஆனால், அவ்விருவருக்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. ஹ’ட்லர் ஒரு கொடிய கொள்கையினால் உந்தப் பெற்றவர். ஆனால், நெப்போலியன் ஒரு பேராவலுள்ள சந்தர்ப்பவாதி. பயங்கரப் படுகொலைகள் செய்வதில் அவருக்குத் தனி ஈடுபாடு கிடையாது. நெப்போலியன் ஆட்சியில் ஹ’ட்லரின் கொடிய சிறைமுகாம்கள் போன்றவை இல்லை.
நெபோலியனின் பெரும் புகழின் காரணமாக அவருடைய செல்வாக்கை அளவுக்கு அதிகமாக மதிப்பிடக் கூடும். அவரது ஆட்சியின் குறுகிய கால விளைவுகள் உண்மையிலேயே மிகுதியானவை. ஒருவேளை அவை அலெக்சாந்தர் படையெடுப்பின் விளைவுகளைவிட அதிகமாக இருக்கலாம். ஆனால், அவை ஹ’ட்லர் ஆட்சியின் விளைவுகளைவிடக் குறைவு. (நெப்போலியனின் போர்களின் போது 5,00,000 ஃபிரெஞ்சுப் போர் வீரர்கள் மடிந்தனர் என்றும், 2 ஆம் உலகப் போரின் போது 80,00,000 ஜெர்மானியர்கள் மடிந்தனர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது) எவ்வகையில் பார்த்தாலும் ஹ’ட்லரைவிட நெப்போலியன் தம் காலத்தில் வாழ்ந்தோரின் உயிர்களைக் குறைவாகவே குலைத்தார்.
நீண்டகால விளைவுகளைப் பார்க்கும்போது நெப்போலியன் அலெக்சாந்தரைவிட குறைந்த முக்கியத்துவம் பெற்றுள்ளபோதிலும், ஹ’ட்லரைவிட அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். நெப்போலியன் ஃபிரான்சின் விரிவான ஆட்சித்துறை மாற்றங்களைச் செய்தார். ஆயினும் ஃபிரெஞ்சு மக்கள் உலக மக்கள் தொகையில் எழுபதில் ஒரு பகுதிதான். அந்த ஆட்சித் துறை மாற்றங்களை நாம் சரியான நோக்கில் பார்க்க வேண்டும். கடந்த இரு நூற்றாண்டுகளில் நிகழ்ந்துள்ள தொழில்நுட்ப மாற்றங்களைவிட அவை ஃபிரெஞ்சு மக்களின் வாழ்க்கையைக் குறைவாகவே பாதித்துள்ளன.
ஃபிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களை உறுதிப்படுத்தி ஃபிரெஞ்சு நடுத்தர வகுப்பினர் பெற்ற நலன்களை நிலைப்படுத்துவதற்கு நெப்போலியனின் காலம் தக்க காலமாக இருந்ததெனக் கருதப்படுகின்றன. 1815இல் ஃபிரெஞ்சு குடியரசு இறுதியாகத் திரும்பவும் நிலை நிறுத்தப்பட்டபோது, இம்மாற்றங்கள் எவ்வளவு நிலை பெற்றுவிட்டனவென்றால், பழைய ஆட்சியின் சமூக நிலைக்குத் திரும்பிச் செல்வது நிலைக்குத் திரும்பிச் செல்வது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதிருந்தது. மிக முக்கியமான மாற்றங்கள் நெப்போலியன் ஆட்சி ஏற்பட்டபோது, புரட்சிக்கு முந்திய நிலைக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ஆயினும் நெப்போலியன் முடியாட்சி ஆர்வமுள்ளவராக இருந்தபோதிலும், ஃபிரெஞ்சுப் புரட்சியின் குறிக்கோள்களை ஐரோப்பா முழுவதும் பரப்புவதில் முக்கிய பங்கேற்றார் என்பதில் ஐயமில்லை.
லத்தீன் அமெரிக்காவிலும் நெப்போலியன் ஆட்சியினால் ஏற்பட்ட பெரும் ஆனால் மறைமுக விளைவைக் காணலாம். அவர் ஸ்பெயின் மீது படையெடுத்ததினால் பல ஆண்டுகளாக ஸ்பெயின் அரசாங்கம் வலிமையிழந்தது. ஆகவே அது தனது லத்தீன் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை. உண்மையாகவே அங்கு தன்னாட்சி நிலவிய அக்காலத்தில் தான் லத்தீன் அமெரிக்க விடுதலை இயக்கங்கள் தொடங்கின.
நெப்போலியனின் செயல்களுள் நிலையானதும் முக்கியமானதுமான விளைவு அவருடைய முக்கிய திட்டங்களுள் இடம் பெறாத ஒன்றாகும். 1803 இல் நெப்போலியன் அமெரிக்காவுக்கு ஒரு பரந்த நிலப்பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றுவதிலிருந்து தடுப்பதரிது என்று அவர் உணர்ந்தார். மேலும் அவருக்குப் பணமும் தேவையாக இருந்தது. உலக வரலாற்றிலேயே மிக அமைதியான முறையில் மாற்றப்பட்ட நிலப்பகுதியான லூயிசியானவை அமெரிக்கா வாங்கியதால் அமெரிக்கக் கண்டமளாவிய ஒரு நாடாக மாறியது. லூயிசியானாவை வாங்காவிட்டால் அமெரிக்க எப்படி இருந்திருக்குமெனச் சொல்வது அரிது. இன்றிருப் பதைவிட மிகவும் வேறுபட்டதாக இருக்குமென்பது உறுதி. லூயிசியானவை வாங்கியிராவிட்டால், அமெரிக்க ஒரு வல்லரசாகியிருக்குமா என்பது ஐயத்துக்குரியது.
லூயிசியானாவை வாங்கியதற்கு நெப்போலியன் மட்டும் காரணமென்று சொல்லமுடியாது. அமெரிக்க அரசாங்கமும் அதில் பங்கு பெற்றது. அப்பகுதியை விற்பதற்கு ஃபிரான்ஸ் கூறிய நிபந்தனை எத்தகையதாக இருந்ததென்றால், எந்த அமெரிக்க அரசாங்கமும் அதை ஏற்றிருக்கும் எனக் கூறலாம். ஆனால் லூயிசியானவை விற்கவேண்டுமென்ற ஃபிரெஞ்சு அரசாங்கம் தீர்மானம் நெப்போலியன் போனபார்ட் எனும் தனி மனிதரின் விரும்பார்வமுள்ள முடிவாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 72 | 73 | 74 | 75 | 76 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெப்போலியன் போனபார்ட் (கி.பி.1769 - கி.பி.1821), நெப்போலியன், அவர், ஃபிரெஞ்சு, ஃபிரெஞ்சுப், ஆயினும், நெப்போலியனின், ஃபிரான்ஸ், ஃபிரான்சின், பெரும், பிறகு, படைகள், தமது, அமெரிக்க, புரட்சியின், நிலை, சட்டத், போர், தொகுப்பு, மட்டும், போரில், ரஷ்யப், அவரை, அவருடைய, மக்கள், இருந்தார், மாபெரும், மீது, ஆகவே, அவரது, ஐரோப்பிய, லூயிசியானவை, ஆட்சியின், விட்டது, நிலைக்குத், லத்தீன், முடியாத, போது, வெற்றி, தூலோன், அரசாங்கம், பெற்றார், அங்கு, திரும்பினார், போதிலும், அச்சட்டத், முக்கிய, ஆட்சித், சேர்ந்து, இல்லை, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்