முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » சைமன் பொலீவார் (கி.பி.1783 - கி.பி.1830)
சைமன் பொலீவார் (கி.பி.1783 - கி.பி.1830)
கொலம்பியா, வெனிசூலா, ஈக்வாடார், பெரு, பொலீவியா ஆகிய ஐந்து தென் அமெரிக்க நாடுகளையும் ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து விடுவித்ததில் பெரும் பங்கு கொண்டதற்காகத் "தென் அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன்" என்று போற்றப்படுபவர் சைமன் பொலீவார். இவரைப் போல் ஒரு கண்டம் முழுவதன் வரலாற்றிலும் தலையாய பங்கேற்ற அரசியல் தலைவர் வேறு எவரும் இருக்க முடியும்.
வெனிசூலா நாட்டிலுள்ள கார்காஸ் நகரில் 1783 ஆம் ஆண்டில் ஸ்பானிய மரபில் வந்த ஓர் உயர் குடியில் பொலீவார் பிறந்தார். இவர் தமது 9 ஆம் வயதிலேயே தாய் தந்தையரை இழந்தார். இவரது இளமைப் பருவத்தில் ஃபிரெஞ்சு மறுமலர்ச்சி இயக்கக் கொள்கைகளும், கோட்பாடுகளும் இவரைக் கவர்ந்தன. ஜான் லாக் ரூசோ, வால்ட்டேர், மாண்டேகு போன்ற தத்துவஞானிகள் நூல்களை இவர் கருத்தூன்றிப் படித்தார்.
இளைஞர் பொலீவார் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றார். ரோம் நகரில் 1805 ஆம் ஆண்டில் அவன்டைன் குன்றின் உச்சியில் நின்று, "ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து எனது தந்தையர் நாட்டை விடுவிக்கும் வரையில் நான் ஓய்ந்திருக்க மாட்டேன்" என்ற தமது புகழ்பெற்ற சூளுரையைப் பொலீவார் எடுத்துக் கொண்டார்.
நெப்போலியன் போனபார்ட் 1808 ஆம் ஆண்டில் ஸ்பெயின் மீது படையெடுத்தார். ஸ்பெயினை வென்ற பிறகு அவர் தம்முடைய சொந்தச் சகோதரனையே ஸ்பானிய அரசின் தலைவராக நியமித்தார். ஸ்பானிய அரச குடும்பத்தினரை அரசியல் அதிகாரத்திலிருந்து நெப்போலியன் நீக்கியதன் வாயிலாக, தென் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்குத் தங்களுடைய அரசியல் சுதந்திரத்திற்காகப் போராட்டம் தொடங்குவதற்குப் பொன்னான வாய்ப்புக் கிடைத்தது.
ஸ்பானிய ஆட்சிக்கு எதிரான புரட்சி வெனிசூழாவில் 1810 ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்தப் புரட்சியில் வெனிசூலாவின் ஸ்பானிய ஆளுநர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். 1811 ஆம் ஆண்டில் முறையான சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்டது. அதே ஆண்டில், புரட்சி இராணுவத்தில் பொலீவார் ஓர் அதிகாரியானார். ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலேயே ஸ்பானியப் படையினர் வெனிசூலாவை மீண்டும் கைப்பற்றிக் கொண்டனர். புரட்சித் தலைவர் ஃபிரான்சிஸ்கோ சிறையில் அடைக்கப்பட்டார். பொலீவார் நாட்டை விட்டு ஓடினார்.
தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பல போர்கள் நிகழ்ந்தன. அந்தப் போர்களில் புரட்சிப் படையினருக்குச் சில தற்காலிக வெற்றிகள் கிடைத்தன. அடுத்துப் பல படுதோல்விகளை அது தழுவியது. எனினும், பொலீவார் சற்றும் மனந்தளரவில்லை. சுதந்திரப் போரில் ஒரு திருப்புமுனை 1819 ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அப்போது பொலீவார் ஓர் சிறிய படை அணிக்குத் தலைமை தாங்கி ஆறுகளையும், சமவெளிகளையும், ஆண்டீஸ் மலையின் உயர்ந்த மலைக் கணவாய்களையும் கடந்து சென்று, கொலம்பியாவிலிருந்த ஸ்பானியப் படைகளைத் தாக்கினார். அங்கு 1819 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாளன்று நடந்த முக்கியமான "போயாக்கா சண்டை"யில் இவர் வெற்றி பெற்றார். இந்த வெற்றி உண்மையிலேயே முக்கியத் திருப்பு முனையாக அமைந்தது. இதன் பின், 1821 ஆம் ஆண்டில் வெனிசூலாவும், 1822 ஆம் ஆண்டில் ஈக்குவடாரும் ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுவிக்கப் பெற்றன.
இதற்கிடையில் அர்ஜென்டீனாவில் விடுதலைக்காகப் போராடி வந்த ஜோஸ்டி சான் சார்டின் என்ற விடுதலை வீரர் அர்ஜென்டீனாவையும் சிலியையும் ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, பெருவின் விடுதலைக்காகப் போராட்டம் தொடங்கியிருந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் இருவரும் 1822 ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் ஈக்குவடாரிலுள்ள குவாயாக்குவில் என்னுமிடத்தில் சந்தித்தனர். எனினும், ஸ்பானிய ஆட்சிக்கு எதிரான தமது முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும், ஒத்துழைப்பதற்கான ஒரு திட்டம் குறித்து அவர்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. ஓர் அதிகாரப் போராட்டத்தில் பொலீவாருடன் போட்டி போட மார்ட்டன் விரும்பவில்லை. அத்தகைய போட்டி ஸ்பானியருக்கே உதவியாக இருக்கும் என்று மார்ட்டின் கருதினார். அதனால் மார்ட்டின் இராணுவத் தலைமைப் பதவியிலிருந்து விலகி, தென் அமெரிக்காவிலிருந்து முழுவதுமாக வெளியேறிவிட முடிவு செய்தார். பொலீவாரின் படைகள் 1828 ஆம் ஆண்டில் இன்றைய பெரு நாட்டை முற்றிலுமாக விடுவித்தன. 1825 ஆம் ஆண்டில் மேல் பெருவிலிருந்து (இன்றைய பொலீவியா) ஸ்பானிய படைகள் முறியடிக்கப்பட்டன.
இதற்குப் பிந்திய ஆண்டுகளில் பொலிவாரின் முயற்சிகள் அத்துணை வெற்றிகரமாக அமையவில்லை. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாதிரியைப் பின்பற்றிப் புதிய தென் அமெரிக்க நாடுகளின் கூட்டாட்சியொன்றை அமைக்க அவர் விரும்பினார். உண்மையில், வெனிசூலா, கொலம்பியா, ஈக்குவடார் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து "அகன்ற கொலம்பியா குடியரசு" என்ற பெயரில் பொலீவாரைக் குடியரசு தலைவராகக் கொண்ட ஒரு கூட்டாட்சியை ஏற்கெனவே அமைத்திருந்தன. ஆனால், பிரிவினை உணர்வு, வட அமெரிக்கக் குடியேற்றங்களை விடத் தென் அமெரிக்க நாடுகளில் மாநாடு ஒன்றை 1826 ஆம் ஆண்டில் பொலீவியா கூட்டிய போது, அதில் நான்கு நாடுகள் மட்டுமே பங்கு கொண்டன. அகன்ற கொலம்பியாக் குடியரசில் மேலும் கூடுதலான நாடுகள் இணைவதற்குப் பதிலாக அந்தக் குடியரசே விரைவில் உடையலாயிற்று. உள்நாட்டு போரும் மூண்டது. பொலீவாரைக் கொன்று விடுவதற்கு 1828 ஆம் ஆண்டில் ஒரு முயற்சி கூட நடந்தது. 1830 ஆம் ஆண்டில் வெனிசூலாவும், ஈக்குவடாரும் இந்தக் குடியரசிலிருந்து பிரிந்து சென்றன. அமைதி ஏற்படுவதற்குத் தாமே முட்டுக்கட்டையாக இருப்பதை உணர்ந்த பொலீவார் 1830 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தம் பதவியிலிருந்து விலகினார். தமது சொந்த நாடாகிய வெனிசூலாவிலிருந்தும் வெளியேறினார். மனச் சோர்வடைந்து வறுமையில் உழன்று அயல் நாட்டிலேயே 1830 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொலீவார் காலமானார்.
பொலீவார் அதிகார ஆசை கொண்டவராக இருந்தார் என்பது தெளிவு. அவர் காலத்துச் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும் போது, அவர் சில சமயம் சர்வாதிகாரிக்குரிய அதிகாரங்களைப் பெற்றிருந்தார். எனினும், பொது நலனையும், மக்களாட்சி நெறியையும் போற்றித் தமது சொந்த நலனை ஒதுக்கிவிடுவதற்கு தயாராக இருந்தார். அவர் பல சமயங்களில் தமது சர்வாதிகார அதிகாரங்களைத் துறக்கவும் செய்தார். ஒரு சமயம் அவருக்கு அரச பதவி வழங்கவும் முன் வந்தனர். ஆனால், அரச பதவியை அவர் மறுத்து விட்டார். அவருக்கு ஏற்கெனவே "விடுதலை வீரர்" (The Liberator) என்ற பட்டம் அளிக்கப்பட்டிருந்தது. அரசு விருது எதனையும் விட இந்த விருதினையே அவர் பெருமதிப்புடையதாகக் கருதினார்.
ஸ்பானிய அமெரிக்காவைக் குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து விடுவித்த தலையாய தலைவர் பொலீவார் என்பதில் ஐயம் ஏதுமில்லை. விடுதலை இயக்கத்திற்கு அவர் கோட்பாட்டுத் தலைமையை வழங்கினார். கட்டுரை எழுதுதல், செய்தியிதழ்களை வெளியிடுதல், சொற்பொழிவாற்றுதல், கடிதங்கள் எழுதுதல் ஆகியவற்றின் மூலம் அவர் விடுதலை இயக்கத்திற்கு வழிகாட்டினார். விடுதலை போராட்டத்திற்கான நிதியைத் திரட்டுவதற்கு அவர் அயராமல் பாடுபட்டார். அனைத்திற்கும் மேலாக புரட்சிப் படைகளின் முதன்மையான இராணுவத் தலைவராக அவர் விளங்கினார்.
ஆயினும், பொலீவாரை ஒரு தலைசிறந்த தளபதியாகக் கருதுவது தவறாகும். அவர் தோற்கடித்த படைகள் பெரியவையோ, சிறந்த தலைமையைக் கொண்டவையோ அல்ல. இராணுவ தந்திரங்களிலோ, போர் முறைகளிலோ பொலீவார் குறிப்பாகத் திறமை வாய்ந்தவர் அன்று. (அவர் இராணுவப் பயிற்சி எதுவும் பெற்றதில்லை) ஆனால், அவர்களிடமிருந்து குறைபாடுகளை அனைத்தையும் ஈடுசெய்யும் வகையில் இன்னல்களை எதிர்த்துத் தீவிரமாகப் போராடும் தளர்வுறாத மன உரத்தை அவர் பெற்றிருந்தார். ஸ்பானியப் படைகளிடம் அவர் கண்ட ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் மற்றவர்கள் போராட்டத்தை நிறுத்தி விடலாம் எனக் கூறியபோது, பொலீவார் சிறிதும் துவண்டு விடாமல், மன உறுதியுடன் இராணுவத்தை மீண்டும் ஒன்று திரட்டி, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்.
ஜூலியஸ் சீசர், சார்லிமான் போன்ற புகழ்பெற்ற தலைவர்களை விடவும் கணிசமான அளவுக்கு அதிகமான செல்வாக்கினைப் பெற்றவர் பொலீவார் என நான் கருதுகிறேன். காரணம், பொலீவாரின் போராட்டத்தினால், ஏற்பட்ட மாறுதல்கள் அதிக நிலைபேறுடையவை, அத்துடன் பொலீவாரின் நடவடிக்கைகளால் நிலைமாற்றம் பெற்ற மண்டலங்களின் பரப்பளவு மிகப் பெரிது. ஆயினும், மகா அலெக்சாந்தர், அடால்ஃப் இட்லர், நெப்போலியன் ஆகியோருக்கு மிகத் தாழ்ந்த நிலையில் பொலீவாருக்கு இடமளிக்கப் பட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம், அந்த மூவரும் இல்லாது போயிருப்பின் அவர்கள் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருக்காது. ஆனால் பொலீவார் இல்லாது போயிருப்பின் தென் அமெரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றிருக்க முடியாது எனக் கூறுவதற்கில்லை.
பொலீவாரை ஜார்ஜ் வாஷிங்டனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். வாஷிங்டனைப் போலவே பொலீவாரும் ஒரு சிறிய நன்கு பயிற்சி பெற்றிருந்த படைக்குத் தலைமையேற்றார். இருவருக்கும் பணம் பற்றாக் குறையாக இருந்தது. இருவரும் தங்களுடைய உணர்ச்சியூட்டும் தலைமையினால் இராணுவத்தை ஒருங்கிணைத்துப் போராடி வெற்றி கண்டார்கள்.
ஆனால், வாஷிங்டனைப் போலன்றி, பொலீவார் தமது ஆயுட் காலத்தின் போதே தமக்குச் சொந்தமாக இருந்த அடிமைகள் அனைவரையும் விடுதலை செய்துவிட்டார். அது மட்டுமன்றி, பிரகடனம் வாயிலாகவும், அரசமைப்பு வகைமுறை மூலமாகவும் தாம் விடுவித்த நாடுகளில் அடிமை முறையை ஒழிக்க பொலீவார் தீவிரமாக முயன்றார். அவருடைய அந்த முயற்சி முழுமையாக வெற்றிப் பெறவில்லை. அவர் இறந்தபோது அந்த மண்டலத்தில் அடிமை முறை நீடித்து நிலவியது.
பொலீவார் கலப்புப் பண்புகள் கொண்டவராக, அதே சமய கவனத்தைக் கவரும் ஆளுமை வாய்ந்தவராக விளங்கினார். அவர் துடிப்புமிக்கவராகவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவும் வீரதீரச் செயல்களால் எழுச்சியூட்டுபவராகவும் திகழ்ந்தார். அவர் அழகிய தோற்ற முடையவராக இருந்தார். பல காதல் விவகாரங்களில் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு தொலை நோக்கக் குறிக்கோள்வாதியாக விளங்கினார். ஆனால், வாஷிங்டனை விடக் குறைந்த அளவு நிருவாகத் திறமையை கொண்டிருந்தார். முகப்புகழ்ச்சியைப் பொலீவார் பெரிதும் விரும்பினார். அவர் வாஷிங்டனைவிட அதிகப் புகழார்வம் கொண்டவராக இருந்தார். இது அவர் விடுவித்த மண்டலங்களுக்கு பாதகமாக முடிந்தது. அதே சமயம், நிதி ஆதாயத்தில் பொலீவார் சிறிதும் அக்கறை காட்டவில்லை. அவர் அரசியலில் பணக்காரராக நுழைந்தார். அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற போது ஏழ்மையில் உழன்றார்.
குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து பொலீவார், விடுவித்த நிலப்பரப்பு, அமெரிக்க ஐக்கிய நாடுகளை விட மிக அதிகம். எனினும், அவர் வாஷிங்டனை விட மிகக் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவராகவே கருதப்படுகிறார். இதற்கு முக்கிய காரணம், பொலீவார் விடுவித்த நாடுகளை விட வரலாற்றில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மிக முக்கியமான பங்கினை வகித்துள்ளது என்பதேயாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 74 | 75 | 76 | 77 | 78 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சைமன் பொலீவார் (கி.பி.1783 - கி.பி.1830), பொலீவார், அவர், ஆண்டில், ஸ்பானிய, அமெரிக்க, தென், தமது, ஆதிக்கத்திலிருந்து, விடுதலை, நாடுகள், விடுவித்த, ", எனினும், இருந்தார், ஆண்டு, ஐக்கிய, படைகள், அந்த, போது, பொலீவாரின், சமயம், காரணம், கொண்டவராக, விளங்கினார், குடியேற்ற, வந்த, தலைவர், அரசியல், வெனிசூலா, இவர், நாட்டை, ஸ்பானியப், பொலீவியா, கொலம்பியா, நெப்போலியன், வெற்றி, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்