முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » தாமஸ் மால்தஸ் (கி.பி.1766 - கி.பி.1834)
தாமஸ் மால்தஸ் (கி.பி.1766 - கி.பி.1834)
"சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் மக்க தொகைக் கொள்கை பற்றிய ஆய்வுரை" என்னம் தலைப்பில் ஒரு சிறிய ஆனால் மிகப் பெரிய செல்வாக்கப் பெற்ற நூலை எழுதியவர் தாமஸ் ராபர்ட் மால்தஸ் ஆவார். எங்கோ, ஒரு சிற்றூரில் யாரும் அறியாத ஒரு சமய குருவாக இருந்த இந்த ஆங்கிலேயர், 1798 ஆம் ஆண்டில் இந்த சிறு நூலை வெளியிட்டதும் உலகப் புகழ் பெற்றார்.
"உணவு உற்பத்திப் பெருக்கத்தை விஞ்சும் வகையில் மக்கள் தொகை பெருகி வருகிறது" என்னும் கருத்தை மால்தசின் அடிப்படை ஆய்வுரையாக அமைந்திருந்தது. அவர் தமது மூலக் கட்டுரையில் இந்தக் கருத்தைச் செறிவான வடிவத்தில் விளக்கியிருந்தார். "பெருக்கல் ஏற்றமாக மக்கள் தொகை பெருகிக் கொண்டு வருகிறது. (அதாவது 1,2,4,8,16.....என்ற பெருக்கல் மடங்குகளில் மக்கள் தொகை பெருகுகிறது). அதே சமயம், உணவு உற்பத்தி எண் கணிப்பு முறையில் ஒரே அளவில் (அதாவது 1,2,3,4,5.....என்ற எண் வளர்ச்சி முறையில்) மட்டும் பெருகி வருகிறது". இந்த நூலில் பிந்திய பதிப்புகளில் மால்தஸ், தமது கொள்கையைச் சற்று தெளிவாக விளக்கியுள்ளார். அதாவது, "உணவு உற்பத்தியின் வரம்பினை எட்டுகின்ற வரையில், மக்கள் தொகை வரையின்றி பெருகிக் கொண்டிருக்கும்". மால்தஸ், தமது கொள்கையின் இரு வடிவங்களிலிருந்தும், "மனித குலத்தின் பெரும்பான்மை மக்களுக்கு வறுமையிலும், பட்டினியிலும் வாழ வேண்டிய தலைவிதி ஏற்பட்டிருக்கிறது. நீண்ட காலப்போக்கில், தொழில் நுட்ப முன்னேற்றங்களினால் இதைத் தடுக்க முடியாது போய்விடும். ஏனெனில், உணவு உற்பத்திப் பெருக்கம், ஒரு வரையறைக்குட்பட்ட இன்றியமையாத தேவையாக இருக்கிறது. அதே சமயத்தில், மக்கள் தொகையின் ஆற்றல் மனிதனின் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு விளைவிப்பதற்கு இந்தப் பூமிக்கு உள்ள ஆற்றலை விட வரம்பின்றி மிக அதிகமாக உள்ளது" என்ற முடிவுக்கு வருகிறார்.
ஆனால் மக்கள் தொகைப் பெருக்கத்தை வேறேதேனும் வழியில் கட்டுப்படுத்த முடியுமா? முடியும். போர், கொளை நோய், மற்ற தொற்று நோய்கள் போன்றவை மக்கள் தொகையை அடிக்கடிக் குறைக்கின்றன. ஆனால், இந்தக் கொடிய உற்பாதங்களின் விளைவுகள் அளவுக்கு மீறிய மக்கள் தொகைப் பெருக்கத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் விருப்பமின்றிக் கொடுக்கும் உயிர் பலிகளுக்குப் பின்பு கிடைக்கும் ஒரு தற்காலிகத் துயர் தணிப்பேயாகும். எனவே, மட்டுமீறிய மக்கள்தொகைப் பெருக்கத்தைத் தவிர்ப்பதற்கு "ஒழுக்கஞ்சார்ந்த கட்டுப்பாடு" மட்டுமே சிறந்த வழி என மால்தஸ் வலியுறுத்துகிறார். காலத் தாழ்வான திருமணம், திருமணத்திற்கு முந்திய கற்பு நெறி, திருமணத்திற்குப் பின்பு பாலுறவு கொள்வதில் தற்கட்டுப்பாடு ஆகியவற்றையே "ஒழுக்கஞ்சார்ந்த கட்டுப்பாடு" என்று மால்தஸ் குறிப்பாகத் தோன்றுகிறது. ஆனால், நடைமுறையில பெரும்பாலான மக்கள் இத்தகைய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க மாட்டார்கள் என்பதை மால்தஸ் நன்கு உணர்ந்திருந்தார். எனவே, நடைமுறையில், மட்டுமீறிய மக்கள் பெருக்கம் தவிர்க்க முடியாதது. அதனால், பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுவதும் பெரும்பாலும் தவிர்க்க இயலாதது என்ற முடிவுக்கு அவர் வருகிறார். இது தோல்வி மனப்பான்மையைக் காட்டும் ஒரு முடிவு ஆகும்.
கருத்தடை சாதனங்களின் வாயிலாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டுமூ என மால்தஸ் ஒரு போதும் கூறவில்லை. ஆயினும், அவருடைய அடிப்படைக் கொள்கையிலிருந்து இயல்பாக உருவாகும் ஒரு கொள்கை அதுவாகவே இருக்க முடியும். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குக் கருத்தடைச் சாதனங்களைப் பெருமளவில கையாள வேண்டும் என முதன் முதலில் பகிரங்கமாக வலியுறுத்தியவர், பிரிட்டனில் செல்வாக்கு மிக்க சீர்திருத்தவாதியாக விளங்கிய பிரான்சிஸ் பிளேஸ் (1771-1854) என்பவரே ஆவார். மால்தசின் கட்டுரையைப் படித்த பிளேஸ் அதனால் வெகுவாகக் கவரப்பட்டார். அவர் 1822 ஆம் ஆண்டில் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதை வலியுறுத்தி ஒரு நூலை எழுதினார். அவர் தொழிலாளர்களிடையே கருத்தடைக் கட்டுப்பாடு பற்றிய தகவல்களைப் பரப்பினார். அமெரிக்காவில், டாக்டர் சார்லஸ் நால்ட்டன் என்பவர் கருத்தடை முறை குறித்து 1822 ஆம் ஆண்டில் ஒரு நூலை வெளியிட்டார். 1860 களில் "மால்தசியக் கழகம்" அமைக்கப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டினை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவாளர்கள் தொகை பெருகலாயிற்று. கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதை அறநெறிக் காரணங்களுக்காக மால்தஸ் தாமே ஏற்கவில்லை என்பதால் கருத்தடைச் சாதனங்கள் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதை வலியுறுத்தியவர்கள் பொதுவாக, "புதிய மால்தசியக் கோட்பாட்டாளர்கள்" என அழைக்கப்பட்டனர்.
மால்தசின் கோட்பாடு, பொருளாதாரக் கோட்பாட்டின் மீதும் முக்கியமான விளைவை ஏற்படுத்தியது. மால்தசின் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்த பொருளாதார அறிஞர் பலர் "வழக்கமான சூழ்நிலைகளில், ஊதியங்கள் பிழைப்பு மட்டத்திற்கு மேலே கணிசமான உயர்வதை மக்கள் தொகை பெருக்கம் தடுத்துவிடும்" என்ற முடிவுக்கு வந்தனர். (மால்தசின் நெருங்கிய நண்பராக விளங்கிய புகழ்பெற்ற ஆங்கிலேயப் பொருளாதார அறிஞர் டேவிட் ரிக்கார்டோ இவ்வாறு கூறினார்: "உழைப்புக்கான இயல்பான விலை என்பது, தொழிலாளர்கள் நாம் உயிர் வாழவும், பெருக்கமோ குறைவோ இன்றித் தங்கள் வர்க்கத்தை நிலைபெறச் செய்யவும் இயல்விப்பதற்குத் தேவையான விலையேயாகும்". இந்தக் கோட்பாட்டினை "கூலி நிருணய இரும்பு விதி" என்று பொதுவாக அழைப்பர். இக் கோட்பாட்டைக் கார்ல் மார்க்சும் ஏற்றுக் கொண்டார். கார்ல் மார்க்சின் "உபரி மதிப்புக் கோட்பாட்டில்" இந்தக் கோட்பாடு ஓர் இன்றியமையாத அம்சமாக இருந்தது.
உயிரியல் ஆராய்ச்சிகளிலுங்கூட மால்தசின் கொள்கைகள் பாதிப்பை உண்டாக்கின. சார்லஸ் டார்வின், தாம், "மக்கள் தொகைக் கொள்கை பற்றிய ஆய்வுரை" நூலைப் படித்ததாகவும், "இயற்கை தேர்வு முறையிலான பரிணாமம்" என்ற தமது கோட்பாட்டின் ஒரு முக்கியமான இணைப்பை அதிலிருந்து தாம் பெற்றதாகவும் கூறியுள்ளார்.
மால்தஸ், இங்கிலாந்தில், சர்ரே என்னும் ஊரில் 1766 ஆம் ஆண்டில் பிறந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இயேசு கல்லூரியில் கல்வி பயின்றார். அங்கு ஒரு திறமை மிக்க மாணவராகத் திகழ்ந்தார். 1788 ஆம் ஆண்டில் ஆங்கில நாட்டுத் திருச்சபையின் ஒரு சமய குருவாக அமர்த்தப்பட்டார். 1791 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1793 ஆம் ஆண்டில் இயேசு கல்லூரியில் புத்தாய்வு மாணவராகச் சேர்ந்தார்.
இவருடைய புகழ் பெற்ற நூலின் முதற்பதிப்பு ஆசிரியர் பெயரின்றியே வெளியிடப்பட்டது. எனினும், அது மிகப் பெருமளவுக்குப் படிக்கப்பட்டு மால்தசுக்குப் புகழ் தேடித் தந்தது. இந்நூலின் ஒரு நீண்ட பதிப்பு 5 ஆண்டுகளுக்குப் பிறகு, 1803 ஆம் ஆண்டில் வெளியாகியது. அதன்பின்பு, இந்நூல் விரிவாக்கம் செய்யப்பட்டும், திருத்தம் செய்யப்பட்டும் பல பதிப்புகளாக வெளி வந்தது. இதன் ஆறாம் பதிப்பு 1826 ஆம் ஆண்டில் வெளியாகியது.
மால்தஸ், 1804 ஆம் ஆண்டில் தமது 38 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார். 1805 ஆம் ஆண்டில், ஹெய்லிபிரியிலிருந்த கிழக்கிந்திய நிறுவனத்தில் கல்லூரியில் வரலாறு மற்றும் அரசியல் பொருளாதாரப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். வாழ்நாள் முழுவதும் அந்தப் பதவியிலேயே நீடித்தார். பொருளாதாரம் பற்றி வேறு பல நூல்களையும் மால்தஸ் எழுதினார். அவற்றுள் மிக முக்கியமானது, "அரசியல் பொருளாதரத் தத்துவங்கள்" என்பதாகும் (1820). இந்நூல், பிற்காலப் பொருளாதார அறிஞர்கள் பலர் மீது பெருஞ்செல்வாக்கப் பெற்றது. அவர்களில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பொருளாதார அறிஞரான ஜான் மெய்னார்டு கெயின்ஸ் ஆவார். மால்தஸ, தம் ஆயுளின் பிந்திய ஆண்டுகளில், பல விருதுகளைப் பெற்றார். இங்கிலாந்தில் பாத் அருகில் 1834 ஆம் ஆண்டில் தம் 68 ஆம் வயதில் மால்தஸ் காலமானார்.
மால்தஸ் இறந்த பிறகு நெடுங்காலம் வரையிலும் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவது அதிகமாகப் பரவவில்லை. இதனால், மால்தஸ் உண்மையிலேயே செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்று சிலர் கூறுவர். இது தவறான கருத்து என நான் கருதுகிறேன். முதலாவதாக, 19 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்கள் என கருதப்படும் சார்லஸ் டார்வின், கார்ல் மார்க்ஸ் ஆகிய இருவர் மீதும் மால்தசின் கொள்கைகள் வலுவான செல்வாக்கைப் பெற்றிருந்தன. இரண்டாவதாக, புதிய மால்தசியக் கோட்பாட்டாளர்களின் கொள்கைகள் பெரும்பான்மை மக்களால் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லையென்றாலும், அவர்களுடைய கொள்கைகள் ஒருபோதும் மறைந்து போய்விடவில்லை. இன்றையக் குடும்ப கட்டுப்பாடு இயக்கம் மால்தசின் வாழ்நாளில் தொடங்கப் பெற்ற இயக்கத்தின் நேரடித தொடர்ச்சியாகும்.
ஒரு நாடு நல்லாட்சியைப் பெற்றிருப்பினும், மட்டுமீறிய மக்கள் தொகைப் பெருக்கத்தினால், அவதியுற வாய்ப்பு உண்டாகும் என்பதை முதலில் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் தாமஸ் மால்தஸ்தான் என்று கூற முடியாது. அவருக்கு முன்னரே வேறு பல தத்துவஞானிகள் இக்கருத்தை வலியுறுத்திச் சென்றிருந்தனர். பிளேட்டோவும், அரிஸ்டாட்டிலும் இதைக் கூறியுள்ளதாக மால்தசே குறிப்பிட்டுள்ளார். "ஒவ்வொரு மனிதனுக்கும், தான் விரும்புகிற அளவுக்குக் குழந்தைகளைப் பெறுவதற்குச் சுதந்திரம் அளிக்கப்படுமானால், அதனால் ஏற்படக்கூடிய இன்றியமையாத விளைவு வறுமை தான்" என்று அரிஸ்டாட்டில் எழுதியிருப்பதாக மேற்கோள் காட்டுகின்றனார்.
ஆனால், மால்தசின் அடிப்படைக் கொள்கை முற்றிலும் அவருடைய சொந்தக் கொள்கை இல்லையென்றும், அவருடைய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடலாகாது. பிளேட்டோவும், அரிஸ்டாட்டிலும் போகிற போக்கில் மேற்போக்காகவே இந்தக் கொள்கையைக் குறிப்பிட்டுச் சென்றிருக்கின்றனர். அவர்களுடைய சுருக்கமான குறிப்புகள் பெரும்பாலும் கண்டு கொள்ளப்படவில்லை. இந்தக் கொள்கையை விரிவாகக் கூறியவர் மால்தசே ஆவார். அவர் தான் இது குறித்து ஏராளமாக எழுதினார். அனைத்திற்கும் மேலாக மக்கள் தொகைப் பெருக்கம் பற்றிய சிக்கலின் அபாயகரமான விளைவை வலியுறுத்தி, அதனை அறிஞர்கள் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்த முதல் மனிதர் மால்தசே ஆவார் என்பதை மறந்துவிடலாகாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 70 | 71 | 72 | 73 | 74 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாமஸ் மால்தஸ் (கி.பி.1766 - கி.பி.1834), மக்கள், ", மால்தஸ், ஆண்டில், மால்தசின், இந்தக், தொகை, தமது, அவர், உணவு, கருத்தடைச், கொள்கை, தொகைப், ஆவார், கொள்கைகள், சாதனங்களைப், பொருளாதார, பெருக்கம், பற்றிய, நூலை, சார்லஸ், எழுதினார், மிக்க, மால்தசியக், கார்ல், மால்தசே, கல்லூரியில், பெற்ற, புகழ், முடிவுக்கு, உயிர், இன்றியமையாத, கொண்டு, பெற்றார், மட்டுமீறிய, அவருடைய, அதனால், என்பதை, அதாவது, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்