முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஆலிவர் கிராம்வெல் (கி.பி.1599 - கி.பி.1658)
ஆலிவர் கிராம்வெல் (கி.பி.1599 - கி.பி.1658)
பெருந்திறமை வாய்ந்த, எழுச்சியூட்டும் இராணுவத் தலைவராக விளங்கிய ஆலிவர் கிராம்வெல், இங்கிலாந்து உள்நாட்டுப் போரின் போது, நாடாளுமன்றப் படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு வெற்றி தேடி தந்தவர். இவர் இங்கிலாந்து அரசு முறையை, நாடாளுமன்ற மக்களாட்சி முறையாக அமைப்பதற்கு மூல காரணமாக விளங்குனார்.
இங்கிலாந்திலுள்ள ஹன்டிங்டன் என்னும் ஊரில் 1599 ஆம் ஆண்டில் கிராம்பெல் பிறந்தார். இவர் தமது இளமைக் காலத்தில் சமயப் பூசல்களில் அலைக்கழித்துக் கொண்டிருந்த இங்கிலாந்தில் வாழ்ந்தார். அப்போது, வரம்பற்ற முடியாட்சியில் (Absolute Monarchy) நம்பிக்கை கொண்டு, அதை நடைமுறையில் செயற்படுத்த விரும்பிய ஓர் அரசர் இங்கிலாந்தை ஆண்டு வந்தார். கிராம்வெல் ஒரு குடியானவக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் கிராமப் புறத்தில் ஒரு சீமானாக வாழ்ந்து வந்தார். அவர் பக்தி மிகுந்த கடுஞ்சீர்திருத்தச் சமயவாதியாகவும் (Purtian) விளங்கினார். அவர் 1628 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலேயே முதலாம் சார்லஸ் மன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, தாமே நாட்டை ஆளத் தொடங்கியதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகச் சிறிது காலமே பணியாற்றினார். 12 ஆண்டுகள் வரையில் மன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டவில்லை. 1640 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்துக்கு எதிராக போர் நடத்துவதற்காக அரசருக்குப் பணம் தேவைப்பட்டது. அந்தப் பணத்தைப் பெறுவதற்காகவே அந்த ஆண்டில் நாடாளுமன்றத்தைச் சார்லஸ் மன்னர் கூட்டினார். அந்தப் புதிய நாடாளுமன்றத்தில் கிராம்வெல்லும் ஓர் உறுப்பினராக இருந்தார். அரசர் எதேச்சாதிகார ஆட்சியை நடத்துவதற்கு எதிரான வாக்குறுதிகளையும், பாதுகாப்புகளையும் அரசிடமிருந்து நாடாளுமன்றம் கோரியது. ஆனால், நாடாளுமன்றத்திற்கு அடிபணிந்து நடக்கச் சார்லஸ் விரும்பவில்லை. 1642 ஆம் ஆண்டில் அரசரிடம் பற்றுறுதி கொண்ட படைகளுக்கும், நாடாளுமன்றத்திடம் பற்றுறுதி கொண்ட படைகளுக்குமிடையே போர் மூண்டது.
கிராம்வெல் நாடாளுமன்றத்திற்கு ஆதரவளித்தார். அவர் ஹன்டிங்டனுக்குத் திரும்பி, அங்கு அரசருக்கு எதிராகப் போரிடுவதற்காக ஒரு குதிரைப் படையைத் திரட்டினார். போர் நடந்த நான்கு ஆண்டுகளில் கிராம்வெல்லின் மகத்தான இராணுவத் திறமை வெளிப்பட்டு, பாராட்டப்பட்டது. இந்த உள்நாட்டுப் போரிலும், (1644, ஜூலை 2), நேஸ்பியில் நடந்த இறுதிப் போரிலும் (1645, ஜூன் 14) கிராம்வெல் மிக முக்கிய பங்கு ஏற்றார். 1946 ஆம் ஆண்டில் போர் முடிவடைந்தது. முதலாம் சார்லஸ் சிறைப் பிடிக்கப்பட்டார். நாடாளுமன்றத் தரப்பில் பெரும் வெற்றி பெற்ற தளபதியாகக் கிராம்வெல் போற்றப்பட்டார்.
ஆனால், உள்நாட்டுப் போர் முடிவடைந்தவுடனேயே நாட்டில் அமைதி மீண்டு நிலவிடவில்லை. நாடாளுமன்றத் தரப்பினர் பல்வேறு குறிக்கோளுடன் பல பிரிவுகளாகப் பிளவுபட்டு கிடந்ததும், அதை உணர்ந்த அரசர், ஓர் உடன்பாட்டுக்கு வராமல் தட்டிக் கழித்து வந்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும். ஓராண்டுக்குள்ளேயே இரண்டாவது உள்நாட்டுப் போர் மூண்டது. சார்லஸ் மன்னர் சிறையிலிருந்து தப்பி தமது படைகளை மீண்டும் ஒன்று திரட்டுவதில் முனைந்தார். இந்த இரண்டாவது போரிலும், அரசரின் படைகளைக் கிராம்வெல் தோற்கடித்தார். அத்துடன், நாடாளுமன்றத்திலிருந்து மிதவாத உறுப்பினர்களும் ஒழிக்கப்பட்டனர். சார்லஸ் மன்னர் 1649 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தூக்கிலிடப்பட்டார்.
இப்பொழுது இங்கிலாந்து "மக்கள் பொதுவுரிமை அரசு" (Commenwealth) என்று அழைக்கப்பட்ட ஒரு குடியரசாக அமைந்தது. கிராம்வெல்லை தலைவராகக் கொண்ட ஓர் "ஆட்சி மன்றம்" (Council State) தற்காலிகமாக நாட்டை ஆண்டது. எனினும், அரசரின் ஆதரவாளர்கள் விரைவிலேயே அயர்லாந்திலும், ஸ்காட்லாந்திலும் வலிமை பெற்றார்கள். அவர்கள் இறந்துபோன அரசனின் புதல்வன் இரண்டாம் சார்லசுக்கு ஆதரவளித்தார்கள். கிராம்வெல்லின் படைகள் அயர்லாந்து மீதும், ஸ்காட்லாந்து மீதும் படையெடுத்து அவர்களை முறியடித்தன. நீண்ட காலம் அடுத்தடுத்து நடந்து இந்தப் போர்கள் இறுதியாக 1652 ஆம் ஆண்டில் அரசர் ஆதரவுப்படைகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டதும் முடிவடைந்தது.
போர் முடிவடைந்து புதிய அரசை அமைப்பதற்கான நேரம் வந்தது. எந்த வகையான அரசமைப்பு முறைப்படி அரசு அமைக்கப்பட வேண்டும் என்ற சிக்கல் இப்பொழுது எழுந்தது. கிராம்வெல்லின் ஆயுட்காலத்தில் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணப்படவில்லை. கடுஞ்சீர்திருத்தச் சமயவாதியாகிய கிராம்வெல் வரம்பற்ற முடியாட்சிக்கு எதிராகப் போரிட்ட படைகளுக்குத் தலைமையேற்று வெற்றித் தேடித் தந்தார். ஆனால், அவருடைய ஆதரவாளர்களிடையே நிலவிய சமூகப் பூசல்களைத் தீர்த்து, அவர்களை ஒரு புதிய அரசமைப்பை ஏற்று கொள்ளும்படி செய்கிறிகளவுக்குப் போதுமான அதிகாரத்தையோ, செல்வாக்கையோ அவர் பெற்றிருக்கவில்லை. இந்தச் சமூகப் பூசல்கள், புரோட்டஸ்டான்டுக்குள்ளும், ரோமன் கத்தோலிக்கர்களுக்கிடையிலும் நிலவிய சமயப் பூசல்களுடன் சிக்குண்டிருந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.
கிராம்வெல் 1640 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது, நாடாளுமன்றத்தில் எஞ்சியிருந்ததெல்லாம் பிரதிநிதித்துவம் வாய்ந்ததாயிராத, ஒரு சிறிய, தீவிரவாத சிறுபான்மைக் குழுமமேயாகும். பல கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிற தொடர்ந்திருந்த நாடாளுமன்றத்தில் எஞ்சிய பகுதியான இந்தக் குழுமம் "எச்சமா மன்றம்" (The Rump) என்று அழைக்கப்பட்டது. கிராம்வெல் முதலில் புதிய தேர்தல்கள் நடத்துவது குறித்துப் பேச்சுகள் நடத்துவதற்கு முயன்றார். ஆனால், இந்தப் பேச்சுகள் தோல்வியடைந்ததும், எச்சமா மன்றத்தைக் கலைத்தார். (1653 ஏப்ரல் 20) அது முதற்கொண்டு 1658 இல் கிராம்வெல் இறக்கும் வரையில் மூன்று வெவ்வேறு நாடாளுமன்றங்கள் அமைக்கப்பட்டு கலைக்கப்பட்டது. இரு வெவ்வேறு அரசமைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், இவற்றில் எதுவும் வெற்றிகரமாகச் செயற்படவில்லை. இந்தக் கால அளவு முழுவதும் இராணுவத்தின் ஆதரவுடன் கிராம்வெல் ஆட்சி புரிந்தார். நடைமுறையில் அவர் ஓர் இராணுவ சர்வாதிகாரியாகவே இருந்தார். ஆனால், தமது ஆட்சிக் காலத்தில் அவர் பலமுறை மக்களாட்சி நடை முறைகளைப் புகுத்த முயன்றார். அவருக்கு அரச பதவி வழங்கப்பட்ட போது, அதை ஏற்றுக் கொள்ளவும் அவர் மறுத்து விட்டார். இதிலிருந்து சர்வாதிகார ஆட்சியை அவர் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. நன்கு செயற்படக்கூடிய ஓர் அரசு முறையை அவருடைய ஆதரவாளர்களால் நிறுவமுடியாமற்போன தன் காரணமாக, வேறு வழியின்றி சர்வாதிகார ஆட்சியை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு அவர் உள்ளானார்.
கிராம்வெல் "ஆட்சிக் காவலர் பெருமகனார்" (Lord PRotector) என்ற பட்டத்துடன் 1653 முதல் 1658 வரையில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றை ஆண்டார். இந்த 5 ஆண்டு காலத்தில் கிராம்வெல் பிரிட்டனுக்கும், பொதுவாக ஒரு நல்லரசை வழங்கினார். சீரான நிருவாக முறையை ஏற்படுத்தினார். கடுமையான சட்டங்கள் பலவற்றை சீர்படுத்தினார். கல்வி கற்பதை ஆதரித்தார். சமயப் பொறையுடைமையில் கிராம்வெல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். யூதர்கள் இங்கிலாந்தில் மீண்டும் குடியமரவும் அவர்கள் தங்கள் சமயத்தைப் பயிலவும் அவர் அனுமதியளித்தார். (யூதர்கள் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் முதலாம் எட்வர்டு மன்னரால் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்கள்) கிராம்வெல் வெற்றிகரமானதொரு அயல்நாட்டுக் கொள்கையையும் செயற்படுத்தினார். அவர் 1658 ஆம் ஆண்டில், லண்டனில் மலேரியா நோய் கண்டு இறந்தார்.
கிராமவெல்லுக்குப் பின்னர் அவருடைய மூத்த மகன் ரிச்சர்டு கிராம்வெல் ஆட்சிக்கு வந்தார். ஆனால், அவர் மிகக் குறுகிய காலமே ஆட்சி நடத்தினார். 1660 ஆம் ஆண்டில் இரண்டாம் சார்லசுக்கு மீண்டும் அரச பதவி அளிக்கப் பட்டது. ஆலிவர் கிராம்வெல்லின் சடலம் கல்லறையிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டு, ஒரு தூக்குக் கம்பத்தில் தூக்கிலிடப் பட்டது. ஆனால் இந்தப் பழி வாங்கும் நடவடிக்கையால் வரம்பற்ற முடியாட்சியை ஏற்படுத்துவதற்கு நடந்த போராட்டம் படுதோல்வி அடைந்தது என்பதை மூடி மறைக்க முடியவில்லை. இதனை இரண்டாம் சார்லஸ் முற்றிலுமாக உணர்ந்து கொண்டார். எனவே, அவர் நாடாளுமன்றத்தின் மேலாண்மை உரிமையை (Supremacy) ஒரு போதும் எதிர்க்கவில்லை. அவருக்குப் பின் அரியணை ஏறிய, இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் மீண்டும் வரம்பற்ற முடியாட்சியை ஏற்படுத்த முயன்ற போது, 1688ஆம் ஆண்டில் நடந்த இரத்தம் சிந்தாப் புரட்சியில் அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். இதன் விளைவாக அதே "வரம்புடை முடியரசு" (Constitutional Monarchy) இங்கிலாந்தில் அமைந்தது. இதன்படி அரசர் திட்டவட்டமாக நாடாளுமன்றத்திற்குக் கீழமைந்தவரானார். அத்துடன் சமயப் பொறையுடைமை கொள்கையும் அரசின் கொள்கையாக அமைந்தது.
ஆலிவர் கிராம்வெல் மறைந்த பின்பு 300 ஆண்டுகளாக அவருடைய பண்பியல்பு குறித்துப் பெருமளவுக்கு வாக்குவாதங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. அவரைக் கண்டிப்பவர்கள் பலர், அவர் ஒரு "கபட வேடதாரி" என்றும் கூறினர். இதற்கு, அவர் எப்போதும் நாடாளுமன்றத்தின் மேலாண்மை உரிமையை ஆதரிப்பதாகவும், எதேச்சதிகார ஆட்சியை எதிர்ப்பதாகவும் கூறிக் கொண்டு, நடைமுறையில் ஓர் இராணுவச் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தியதை அவர்கள் சான்றாகக் காட்டினார்கள். ஆனால், அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளினால் சில சமயங்களில் அவர் சர்வாதிகார அதிகாரங்களைச் செலுத்த நேர்ந்தது என்ற போதிலும், மக்களாட்சி முறையில் அவர் மனப்பூர்வமாக, ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதே பெரும்பான்மையோரின் கருத்து. அவர் ஒரு போதும் தவறான வழியில் செல்லவில்லை. அரச பதவியை ஏற்றுக் கொள்ளவோ, நிரந்தரமாகச் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தவோ அவர் ஒரு போதும் இசையவில்லை. அவருடைய ஆட்சி பெரும்பாலும் நடுநிலையானதாகவும் சமரச நோக்குடையதாகவும் விளங்கியது.
வரலாற்றில் கிராம்வெல்லின் ஒட்டு மொத்தமான செல்வாக்கை எவ்வாறு மதிப்பிடுவது? அவர் தன்னிகரில்லா இராணுவத் தலைவராகத் திகழ்ந்தார் என்பதும், அவர் இங்கிலாந்து உள்நாட்டுப் போரில் அரசரின் படைகளைத் தோற்கடித்தார் என்பதும் அவரது தலையாயச் சிறப்பு ஆகும். உள்நாட்டுப் போரின் தொடக்க நிலைகளில் கிராம்வெல் தலைமையேற்பதற்கு முன்னர் நாடாளுமன்றப் படைகளுக்கு ஏற்பட்ட படுதோல்விகளைக் கருதுங்கால், அவர் இல்லாது போயிருப்பின், நாடாளுமன்றப் படைகளுக்கு இறுதி வெற்றி கிடைத்திருக்காது என்பது உறுதி. கிராம்வெல் பெற்ற வெற்றிகள் பலனாக, இங்கிலாந்தில் மக்களாட்சி அரசமுறை நிலைபெற்று, வலுப்பெற்றது என்பதை மறுப்பதற்கில்லை.
கிராம்வெல் தோன்றாமாலிருந்தாலும் இங்கிலாந்தில் இறுதியில் இது நிகழ்ந்திருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில், 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகள் வரம்பற்ற முடியாட்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. இந்தப் பொதுவான போக்குக்கு நேர் மாறாக, இங்கிலாந்தில் மக்களாட்சி முறை வெற்றி பெற்றது. பிற்காலத்தில், ஃபிரெஞ்சு மறுமலர்ச்சி இயக்கத்திற்கும், ஃபிரெஞ்சுப் புரட்சிக்கும் மேற்கு ஐரோப்பா முழுவதிலும் இறுதியில் மக்களாட்சி அரசுகள் நிறுவப்பட்டதற்கும் இங்கிலாந்து மக்களாட்சி முறை முன்மாதிரியாக அமைந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், கடனா, ஆஸ்திரேலியா போன்ற மற்ற முன்னாள் ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகளிலும் மக்களாட்சி அரசுகள் நிறுவப்பட்டதிலும் மக்களாட்சிப் படைகளின் வெற்றி மிக முக்கியமான பங்கு பெற்றது. உலகில் இங்கிலாந்து ஒரு சிறு பகுதியாக இருந்த போதிலும், உலகின் பெரும்பாலான பகுதிகளுக்கு இங்கிலாந்திலிருந்து மக்களாட்சி பாய்ந்து பரவியது.
இங்கிலாந்திலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், மக்களாட்சி நிறுவனங்களை நிறுவியதில் சரி நிகரான பெருமை தத்துவஞானி ஜான் லாக்குக்குப் போய் சேராமலிருந்திருந்தால், ஆலிவர் கிராம்வெல்லுக்குச் சற்று உயர்ந்த இடத்தை அளித்திருக்கலாம். இவ்விருவரின் முக்கியத்துவத்தை ஒப்பிட்டு மதிப்பிடுவது மிகவும் கடினமாக உள்ளது. கிராம்வெல் ஒரு செயல் வீரராகத் திகழ்ந்தார். ஜான் லாக் ஒரு கொள்கை வீரராக விளங்கினார். எனினும், ஜான் லாக் வாழ்ந்த காலத்தில் நிலவிய அறிவாற்றல் சூழலில் அவருடைய அரசியல் கொள்கைகளுடன் பெரிதும் ஒத்திருக்கக்கூடிய கொள்கைகளை, அவர் தோன்றாமலிருந்திருந்தாலும், மிக விரைவிலேயே தோற்றுவிக்கப்பட்டிருக்கும். ஆனால் கிராம்வெல் தோன்றாமலிருந்திருந்தால், இங்கிலாந்து உள்நாட்டுப் போரில் நாடாளுமன்றப்படை வெற்றி பெற்றிருக்கவே முடியாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 54 | 55 | 56 | 57 | 58 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆலிவர் கிராம்வெல் (கி.பி.1599 - கி.பி.1658), அவர், கிராம்வெல், ஆண்டில், மக்களாட்சி, இங்கிலாந்து, போர், சார்லஸ், உள்நாட்டுப், மன்னர், வெற்றி, ", இங்கிலாந்தில், அவருடைய, வரம்பற்ற, அரசர், கிராம்வெல்லின், அமைந்தது, ஆட்சி, ஆலிவர், ஆட்சியை, நடந்த, காலத்தில், இரண்டாம், இந்தப், மீண்டும், சமயப், அரசரின், சர்வாதிகார, ஜான், நாடுகளிலும், முடியாட்சியை, போதும், நிலவிய, ஏற்றுக், நாடாளுமன்றத்தில், தமது, நடைமுறையில், போது, நாடாளுமன்றப், அரசு, முறையை, ஆண்டு, வந்தார், கொண்ட, போரிலும், வரையில், இராணுவத், நாடாளுமன்றத்திற்கு, முதலாம், இதற்கு, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்