முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » வில்லியம் ஹார்வி (கி.பி.1578 - கி.பி.1657)
வில்லியம் ஹார்வி (கி.பி.1578 - கி.பி.1657)
இரத்தம் சுற்றோட்டமாகப் பாய்கிறது என்பதையும் இதயம் இயங்கும் முறையினையும் கண்டுபிடித்த தலைசிறந்த ஆங்கிலேய மருத்துவ அறிஞர் வில்லியம் ஹார்வி ஆவார். இவர், 1578ஆம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள ஃபோல்க் ஸ்டோன் நகரில் பிறந்தார். "விலங்குகளில் இதயம் மற்றும் இரத்தத்தின் இயக்கம் பற்றிய உடற்கூற்று ஆய்வு" (An Anatomical Treatise on the movement of the Heart and Blood in Animals) என்ற இவரது தனிச் சிறப்பு வாய்ந்த நூல் 1628 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இது உடலியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான நூலாகப் போற்றப்படுகிறது. உண்மையில், இது நவீன உடலியல் அறிவியலுக்கு முதற்படியாக அமைந்தது எனலாம். இந்நூலின், அடிப்படையான முக்கியத்துவம், இதன் நேரடியான பயன்பாடுகளைச் சார்ந்திருக்கவில்லை. மாறாக, மனித உடல் எவ்வாறு செயற்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்கு இது எந்த அளவுக்கு துணை புரிகிறது என்பதைப் பொறுத்திருக்கிறது.
இன்றைய மக்களாகிய நாம், இரத்தம் சுற்றோட்டமாகப் பாய்கிறது என்று அறிந்த செய்தியின் பின்னணியில் வளர்ந்துள்ளோம். எனவே, இரத்தம் சுற்றோட்டமாகப் பாய்கிறது என்பதை உண்மையென ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஆகையால், ஹார்வியின் கொள்கை நமக்கு ஐயத்திற்கிடமின்றி சரியெனத் தோன்றுகிறது. ஆனால், இன்று இத்துணை இயல்பானதாகவும், தெளிவுடையதாகவும் தோன்றுகிற இந்தக் கொள்கை முந்தைய உயிரியலறிஞர்களுக்குக அத்துணை நம்பத்தக்கதாகப் புலப்படவில்லை. உயிரியல் பற்றி முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய கருத்துகள் முரண்பட்டவையாக இருந்தன. (அ) உணவு, இதயத்தில் இரத்தமாக மாற்றப்படுகிறது. (ஆ) இதயம் இரத்தத்தைச் சூடாக்குகிறது. (இ) இதயத்திலிருந்து இரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிகளில் காற்று நிரம்பியிருக்கிறது. (ஈ) "உயிர்சுகரப்பு நீர்களை" இதயம் உற்பத்தி செய்கிறது. (உ) தமனிகள், இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிரைகள் இரண்டிலுமே இரத்தம் ஏற்றமும் இறக்கமும் பெறுகிறது. இரண்டிலுமே இரத்தம் சில சமயம் இதயத்தை நோக்கியும், சில சமயம் இதயத்திலிருந்து வெளியேயும் பாய்கிறது.
காலென் என்ற தலைசிறந்த பண்டைய கிரேக்க மருத்துவர், தாமே உடல் உறுப்புகளை அறுத்துப் பல பகுப்பாய்வுகளைச் செய்தவர். இதயம், இரத்த நாளங்கள் குறித்து அவர் கவனமாகச் செய்தவர். இதயம், இரத்த நாளங்கள் குறித்து அவர் கவனமாகச் சிந்தித்தவர். அவர்கூட, இரத்தம் சுற்றோட்டமாகப் பாயக்கூடும் என்று கருதவில்லை, உயிரியலைத் தமது முக்கிய ஆய்வுத் துறைகளில் ஒன்றாகக் கொண்டிருந்த அரிஸ்டாட்டில்கூட அவ்வாறு கருதியதில்லை. ஹார்வியின் நூல் வெளியான பிறகுங்கூட, மனித உடலில் இரத்த நாளங்களைக் கொண்ட ஓர் அடைப்புள்ள இரத்த ஓட்ட மண்டலத்தின் வழியாக இரத்தம் இடைவிடாது ஓடிக் கொண்டிருக்கிறது என்பதையும், இரத்தம் பாய்வதற்கான விசையை இதயம் அளிக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள பல மருத்துவர்கள் மறுத்தார்கள்.
ஹார்வி முதலில் ஓர் எளிமையான கணிதக் கணிப்பினைச் செய்து, இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற கொள்கையை வகுத்தமைத்தார். இதயம் ஒவ்வொரு தடவையும் துடிக்கும்போது, இதயத்திலிருந்து வெளியே பாயும் இரத்தத்தின் அளவு சுமார் இரண்டு அவுன்ஸ் என இவர் மதிப்பிட்டார். இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 தடவைகள் என்ற வீதத்தில் துடிப்பதால் ஒவ்வொரு மணி நேரத்திலும், ஏறத்தாழ 345 கி.கி. இரத்தம் இதயத்தின் இடது மேலறையிலிருந்து புறப்படும் மகா தமனியில் பாய்கிறது என்றும் இவர் கணக்கிட்டார். ஆனால், 245 கி.கி. என்பது ஓர் இயல்பான மனிதனின் உடல் எடையை விட இன்னும் பேரளவுக்கு மிகுதியாகும். எனவே,ஒரே அளவு இரத்தம், இதயத்தின் வழியாக இடைவிடாது சுழன்று வருகிறது என்பது ஹார்விக்குப் புலனாயிற்று. இந்தக் கருதுகோளை உருவாக்கிய பிறகு, இது குறித்து ஒன்பது ஆண்டுகள் பரிசோதனைகள் நடத்தினார். இரத்தத்தின் சுற்றோட்டம் பற்றிய விவரங்களை தீர்மானிக்க மிகவும் நுட்பமாகக் குறிப்புகளை எடுத்துக் கொண்டு வந்தார்.
ஹார்வி தமது நூலில் தமனிகள் இதயத்திலிருந்து இரத்தத்தை வெளியே எடுத்துச் செல்கின்றன என்றும், சிரைகள் இரத்தத்தை இதயத்திற்கு மீணடும் கொண்டு வந்து சேர்க்கின்றன என்றும் திட்டவட்டமாகக் கூறியிருந்தா. அப்போது நுண்ணோக்காடி இல்லாதிருந்தமையால், நாடி நாளங்களை இணைக்கும் மயிரிழை போன்ற நுண்புழைத் தந்துகிகளையும் மிகச் சிறிய தமனிகளிலிருந்து சிரைகளுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நுண்ணிய இரத்த நாளங்களையும் பார்க்க இவரால் முடியவில்லை. எனினும், அவை இருக்கின்றன என்பதை இவை மிகச் ச்ரியாகவே ஊகித்துக் கூறினார். (ஹார்வி இறந்த சில ஆண்டுகளுக்குப் பின்பு தந்துகிகளை மால்பிகி என்ற இத்தாலிய உயிரியலறிஞர் கண்டுபிடித்தார்)
இதயத்தின் பணி, தமனிகளுக்குள் இரத்தத்தைப் பாய்ச்சுவதுதான் என்றும் ஹார்வி கூறினார். இந்த அம்சத்திலும், மற்ற யமுக்கிய அம்சங்களிலும் ஹார்வியின் கொள்கை மிகவுதம் சிசிரியாக இருந்தது. மேலும், தமது கொள்கைக்கு ஆதரவாக ஏராளமான பரிசோதனைச் சான்றுகளையும் கவனமாகத் தொகுத்த வாதங்களையும் அளித்தார். இவரது கொள்கைக்குத் தொடக்கத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த போதிலும், இவருடைய ஆயுட் காலத்திற்குள்ளேயே இக்கொள்கை பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கருவியல் பற்றியும் ஹார்வி விரிவாக ஆராய்ச்சிகள் நடத்தினார். இந்த ஆராய்ச்சி, இரத்த ஓட்டம் பற்றிய இவரது ஆராய்ச்சியைவிட முக்கியத்துவம் சற்றுக் குன்றியதாயினும், அற்பமானது அன்று. இவர் சிறந்த கூர் நோக்காளராக விளங்கினார். "விலங்குகளின் தலைமுறை" என்ற இவரது இந்த நூல்தான், நவீன கருவியல் ஆய்வியலை தோற்றுவித்தது எனலாம். அரிஸ்டாட்டிலைப் போலவே, "பின் வளர்வதன்றி உறுப்பமைதி முற்றிலுங்கருவிலேயே உருவாயிற்று" என்னும் முன்னுருவாக்கக் கோட்பாட்டை ஹார்வி மறுத்தார். "ஒரு கருவின் இறுதிக் கட்டமைப்புப் படிப்படியாக உருவாகிறது" என ஹார்வி சரியாக வலியுறுத்தினார்.
ஹார்வி நீண்டகாலம் வெற்றிகரமாகவும், பெரும்புகழுடனும் வாழ்ந்தார். இவர், தமது குமரப் பருவத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த கேயஸ் கல்லூரியில் கல்வி பயின்றார். 1600 ஆம் ஆண்டில், அப்போது உலகிலே மிகச் சிறந்த மருத்துவப் பல்கலைக் கழகமாக விளங்கிய பதுவாப் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிலுவதற்காக இத்தாலி சென்றார். ஹார்வி பதுவாவில் படித்துக் கொண்டிருந்தபோது, கலீலியோ, அங்கு பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இவ்விருவரும் சந்தித்தார்களா என்பது தெரியவில்லை. ஹார்வி பதுவா பல்கலைக் கழகத்தில் 1602 ஆம் ஆண்டில் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் இவர் இங்கிலாந்து திரும்பி, நீண்ட காலம் வெற்றிகரமாக மருத்துவத் தொழிலாற்றினார். இங்கிலாந்தின் மன்னர்களாகிய முதலாம் ஜேம்ஸ், முதலாம் சார்லஸ் இருவருக்கம் புகழ் பெற்ற தத்துவஞானி பிரான்சிஸ் பேக்கனுக்கும் இவர் மருத்துவம் பார்த்தார். லண்டனிலுள்ள மருத்துவக் கல்லூரியில் உடல் உட்கூறு குறித்து இவர் சொற்பொழிவாற்றினார். ஒரு சமயம் அந்தக் கல்லூரியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அந்தப் பதவியை இவர் ஏற்க மறுத்துவிட்டார். இவர் தனியாக மருத்துவத் தொழில் புரிந்துவந்ததுடன், லண்டனிலுள்ள புனித பார்த்தலோமியா மருத்துவமனையில் தலைமை மருத்துவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். இரத்த ஓட்டம் பற்றிய இவரது நூல் 1628 ஆம் ஆண்டில் வெளியான போது ஐரோப்பா முழுவதிலும இவருடைய புகழ் பரவியது. ஹார்வி திருமணம் புரிந்து கொண்டார். ஆனால் குழந்தைகள் இல்லை. இவர் 1657 ஆம் ஆண்டில் தமது 79 ஆம் வயதில் லண்டனில் காலமானார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 52 | 53 | 54 | 55 | 56 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வில்லியம் ஹார்வி (கி.பி.1578 - கி.பி.1657), ஹார்வி, இரத்தம், இவர், இதயம், இரத்த, ஆண்டில், தமது, இவரது, ", பாய்கிறது, கொண்டு, இதயத்திலிருந்து, என்றும், குறித்து, பற்றிய, உடல், பல்கலைக், சுற்றோட்டமாகப், மிகச், சமயம், இதயத்தின், என்பது, ஏற்றுக், நூல், இரத்தத்தின், என்பதையும், என்பதை, ஹார்வியின், இரத்தத்தைக், கொள்கை, செல்லும், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்