முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ரெனே டேக்கார்ட்டே (கி.பி.1596 - கி.பி.1650)
ரெனே டேக்கார்ட்டே (கி.பி.1596 - கி.பி.1650)
புகழ்பெற்ற ஃ பிரெஞ்சுத் தத்துவஞானியும், விஞ்ஞானியும், கணித மேதையுமான ரெனே டேக்கார்ட்டே (Rene Descartes) 1596 ஆம் ஆண்டில் மே ஹாயே என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர், லா பிளேஷ் கல்லூரி என்ற ஒரு சிறந்த இயேசுச் சங்கப் பள்ளியில் இளமையில் கல்விப் பயின்றார். இவர் தமது 26 ஆம் வயதில், பாய்ட்டியேர் பல்கலைக் கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றார். எனினும், இவர் ஒரு போதும் சட்டத் தொழிலாற்றவில்லை. இவர் மிகச் சிறந்த கல்வி பெற்ற போதிலும், கணிதம், நீங்கலாக, மற்றத் துறைகள் எதிலும் நம்பகமான தகவல்கள் இல்லை எனக் கருதினார். எனவே, முறைசார்ந்த கல்வியைத் தொடர்வதை விட ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து, உலகைத் தாமே நேரடியாக அறிந்து கொள்ள முடிவு செய்தார். இவருடைய குடும்பம் வசதியுடையதாக இருந்தமையால் இவர் சுற்றுப் பயணம் செய்வதற்கு தேவையான பணம் தாரளமாகக் கிடைத்தது.
டேக்கார்ட்டே, 1616 முதல் 1628 வரை விரிவாகச் சுற்றுப் பயணம் செய்தார். இவர் சிறிது காலம் ஹாலந்து, பவேரியா, அங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று வெவ்வேறு இராணுவங்களில் பணியாற்றினார். எனினும், நேரடிப் போர் எதிலும் இவர் பங்கு கொள்ளவில்லை. இத்தாலி, ஹாலந்து, டென்மார்க் போன்ற மற்ற நாடுகளுக்கு இவர் சென்றார். இந்த ஆண்டுகளில், உண்மையைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு பொதுவான முறையை இவர் வகுத்தமைத்தார். உலகைப் பற்றிய ஒரு விரிவான உருக்காட்சியை உருவாக்குவதற்கு இவர் தமது முறையைப் பயன்படுத்திப் பார்க்க முடிவு செய்தார். பின்னர், இவர் ஹாலந்தில் குடியமர்ந்தார். அங்கு இவர் 20 ஆண்டு காலம் வாழ்ந்தார். (ஹாலந்தில் அதிக அறிவுச் சுதந்திரம் இருப்பதாக இவர் கருதினார். மேலும் பாரிஸ் நகரின் சமூகக் குழப்பங்களிலிருந்து வெகு தொலைவில் இருக்க விரும்பினார். இக்காரணங்களினாலேயே இவர் ஹாலந்தில் குடியமரத் தீர்மானித்தார்.
டேக்கார்ட்டே 1629 ஆம் ஆண்டில், "உள்ளத்தை வழிச் செலுத்துவதற்கான விதிகள்" (Rules for the Direction of the Mind) என்ற நூலை எழுதினார். இதில் இவர் தமது முறையை விளக்கிக் கூறியுள்ளார். (ஆனால், இந்நூல் முழுமை பெறவில்லை. அதனால், அது வெளியிடுவதற்கு எழுதப்படவில்லை. அதனால், அது வெளியிடுவதற்கு எழுதப்படவில்லை எனத் தெரிகிறது. எனினும், டேக்கார்ட்டே இறந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு இது முதலில் வெளியிடப்பட்டது. 1630 முதல் 1634 வரையிலான ஆண்டுகளில் அறிவியல் ஆராய்ச்சியில் டேக்கார்ட்டே தமது முறையை பயன்படுத்தினார். உடல் உட்கூறியல், உடலியல் ஆகியவற்றை அறிவதற்கு இவர் உடல் உறுப்புகளை அறுத்துப் பார்த்தார். ஒளியியல் (Optics), வானிலையியல், கணிதம் ஆகியவற்றிலும் வேறுபல அறிவியல் பிரிவுகளிலும் இவர் தனியாக தீவிர ஆராய்ச்சிகள் நடத்தினார்.
தமது அறிவியல் முடிவுகளை "உலகம்" (Le Monde) என்னும் நூலில் தொகுத்து வழங்க டேக்கார்ட்டே விரும்பினார். ஆனால், 1633 ஆம் ஆண்டில் அந்த நூல் முடியும் தறுவாயிலிருந்த போது பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்னும் கோப்பர்னிக்கசின் கோட்பாட்டினை ஆதரித்து வாதாடியதற்காகக் கலிலீயோவுக்குத் திருச்சபை அதிகாரிகள் தண்டனை விதித்த செய்தியை இவர் அறிந்தார். ஹாலந்தில் இவர் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்க வில்லையெனினும், டேக்கார்ட்டேயும் தமது நூலில் கோப்பர்னிக்கசின் கோட்பாட்டை ஆதரித்து எழுதியிருந்தமையால், அந்த நூலை வெளியிடாமலிருப்பது தான் விவேகமானது என்று டேக்கார்ட்டே முடிவு செய்தார். இதற்குப் பதிலாக, 1637 ஆம் ஆண்டில், "அறிவியல்களில் பகுத்தறிவைச் செலுத்தி உண்மையைக் காணும் முறை" என்ற தமது புகழ்பெற்ற நூலை வெளியிட்டார். (இந்நூல், "முறைகள் பற்றிய ஆய்வுரை" எனச் சுருக்கமாக அழைக்கப் பெற்றது.
இந்த நூலை டேக்கார்ட்டே லத்தீன் மொழியில் எழுதாமல் ஃபிரெஞ்சு மொழியில் எழுதினார். பண்டையக் கிரேக்க லத்தீனக் கலைக் கல்வி கற்காதவர்கள் உட்பட கற்றறிந்ததோர் அனைவரும் படிக்க வேண்டும் என விரும்பி இவர் இந்நூலை ஃபிரெஞ்சு மொழியில் எழுதினார். இந்நூலுக்குப் பின்னிணைப்பாக மூன்று கட்டுரைகளையும் இவர் சேர்த்திருந்தார். இக்கட்டுரைகளில், தமது முறையினைப் பயன்படுத்தி தாம் கண்டுபிடித்தவற்றுக்கு இவர் எடுத்துக் காட்டுகள் காட்டியிருந்தார். இவற்றில் முதலாவது பின்னிணைப்பில், "ஒளியியல்" (Optics) இடம் பெற்றிருந்தது. அதில் "ஒளி விலகல் விதி" யை (Law of Refraction of Light) இவர் கூறியிருந்தார். (ஆனால், இந்த விதி ஏற்கெனவே வில்லி பிரார்டு ஸ்னெல் என்பவர் கண்டுபிடித்ததாகும்). "ஆடிகள்" (Lense) குறித்தும், பல்வேறு ஒளியியல் கருவிகள் பற்றியும் இதில் விளக்கியிருந்தார். கண்ணின் செயல்முறை பற்றியும் இதில் விளக்கியிருந்தார். பிற்காலத்தில் கிறிஸ்டியான் ஹ’யூஜன் என்பவர் வகுத்தமைத்த அலைக் கோட்பாட்டுக்கு முன்னோடியாக அமைந்த ஒளி பற்றிய ஓர் கோட்பாட்டையும் இவர் கூறியிருந்தார். இவரது இரண்டாவது பின்னிணைப்பு, வானிலையியல் பற்றி முதலாவது நவீன ஆய்வினைக் கொண்டிருந்தது. இதில் மேகங்கள் மழை, காற்று வீச்சு ஆகியவை பற்றி விவாதித்திருந்தார். வானவில் உண்டாவதற்குச் சரியான விளக்கமும் அளித்திருந்தார். வெப்பத்தில் கண்ணுக்குப் புலனாகாத திரவம் அடங்கியிருக்கிறது என்ற கொள்கையை இவர் மறுத்துரைத்தார். வெப்பம் என்பது ஒரு வகையான உள்முக இயக்கம் என்று மிகச் சரியாக முடிவு செய்தார். (ஆனால், இந்தக் கொள்கையை, ஏற்கெனவே ஃபிரான்சிஸ் பேக்கனும் மற்றவர்களும் கூறியிருந்தார்கள்). மூன்றாவது பின்னிணைப்பு, வடிவ கணிதம் (Geometry) பற்றியதாகும். இவருடைய சாதனைகளில் மிக முக்கியமானது இந்த வடிவ கணிதமே எனலாம். இதில், "பகுப்பாய்வு வடிவ கணிதம்" (Analytic Geometry) என்ற தமது புதிய கண்டுபிடிப்பை இவர் விளக்கியிருந்தார். இவர் கண்டுபிடித்த பகுப்பாய்வு வடிவ கணிதம், கணிதத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். இந்தப் பகுப்பாய்வு கணிதம் தான் பின்னர் ஐசக் நியூட்டன், "நுண் கணிதத்தை" (Calculus) கண்டுபிடிப்பதற்கு வழியமைத்தது.
டேக்கார்ட்டே தமது கொள்கையைக் கூறுவதற்குத் தொடங்கும் முறை தான் அவரது கொள்கையின் மிகச் சுவையூட்டும் பகுதியாகும். ஏராளமான தவறான கொள்கள் பொதுவாக ஏற்றுக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு முதலிலிருந்தே தாம் புதிதாக தொடங்க வேண்டும் என முடிவு செய்தார். எனவே, எல்லாவற்றின் மீதும் தமது ஆசிரியர்கள் கற்பித்த அனைத்தின் மீதும், தாம் போற்றிப் பேணிய நம்பிக்கைகள் அனைத்தின் மீதும், தமது பொது அறிவுக் கொள்கைகள் எல்லாவற்றின் மீதும் - புற உலகம் இருப்பதைக் கூட ஏன், தாம் வாழ்ந்திருப்பதைக் கூட ஐயுறுகிற முறையில் இவர் தமது ஆய்வினைத் தொடங்குகிறார்.
இந்த முறையினால், ஒரு சிக்கல் எழுகிறது. எல்லாவற்றையும் பற்றிய ஐயப்பாட்டினை வெற்றி கொண்டு அவை பற்றிய நம்பகமான அறிவைப் பெறுவது எவ்வாறு? டேக்கார்ட்டே, மதி நுட்பம் வாய்ந்த மெய்விளக்க வாதங்களை அடுக்கடுக்காகக் கூறித் தாம் உயிர் வாழ்வதைத் தமக்கு மன நிறைவளிக்கும் வகையில் மெய்ப்பித்துக் காட்டினார். ("ஆகவே நான் நானாக இருப்பதாகக் கருதுகிறேன்") அதே போன்று, இறைவன் இருக்கின்றான் என்பதையும் மெய்ப்பித்தார். டேக்கார்ட்டே கோட்பாட்டுக்கு இவை தொடக்கமாக அமைந்தன.
டேக்கார்ட்டேயின் இந்த முறை, இரட்டை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. முதலாவதாக, இவர் அடிப்படையான அறிவாதார வினாவை தமது தத்துவ அமைப்பு முறையின் நடுநாயக பீடத்தில் அமர்த்தி வைக்கிறார். "மனித அறிவு எங்கிருந்து தோன்றியது?" உலகின் இயல்பை விவரித்துக் கூற முந்தையத் தத்துவஞானிகள் முயன்றுள்ளனர். "நான் அவ்வாறு அறிந்து கொள்கிறேன்?" என்ற வினாவுடன் இணைவான அல்லாமல், இத்கையதொரு வினாவுக்கு மனநிறைவளிக்கும் வகையில் மறுமொழி கூற இயலாது என டேக்கார்ட்டே நமக்குக் கற்றுத் தந்தார்.
இரண்டாவதாக, "எதையும் 'நம்பிக்கை'யுடன் தொடங்கலாகாது, மாறாக, ஐயுறவுடன் தொடங்க வேண்டும்" என்று டேக்கார்ட்டே உணர்த்துகிறார். (இது புனித அகஸ்டைன் போன்ற மத்திய காலத்து இறைமையியலறிஞர்கள் பெரும்பாலோரின் மனப்பாண்மைக்கு முற்றிலும் எதிர்மாறானதாகும். அவர்கள், "முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டும்" என வலியுறுத்தினார்கள்) இதன் பிறகு, டேக்கார்ட்டே ஏற்றுக் கொள்ளப்பட்ட இறைமையியல் முடிவுகளுக்கே வருகிறார் என்பதும் உண்மைதான். எனினும், இவர் செய்த முடிவுகளை விட, இவர் கூறிய முறையில் தான் வாசகர்கள் மிகுதியாக கவனம் செலுத்துகிறார்கள். (டேக்கார்ட்டேயின் இவ்வகை எழுத்துக்கள், இறுதியில் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் எனத் திருச்சபையினர் அஞ்சினர். அவர்களுடைய அச்சம் முற்றிலும் நியாயமானதாகவே இருந்தது.)
டேக்கார்ட்டே தமது கோட்பாட்டில், உள்ளத்திற்கும், உலகாயதப் பொருள்களுக்குமிடையிலான வேறுபாட்டினை வலியுறுத்துகிறார். இந்த வகையில், இவர் விடாப்பிடியான ஓர் இரட்டைக் கொள்கையைப் பரிந்துரைக்கிறார். இந்த வேறுபாடு முன்னதாகவே கூறப்பட்டதுதான் எனினும், இதுபற்றிய ஒரு கோட்பாட்டு வாதத்தை டேக்கார்ட்டேயின் எழுத்துகள் தூண்டி விட்டன. அது முதற்கொண்டு இவர் எழுப்பிய வினாக்களைத் தத்துவ அறிஞர்கள் ஆர்வத்துடன் விவாதித்து வருகிறார்கள். இந்த விவாதம் இன்னும் முடிவுறவில்லை.
இயற்பியல் உலகம் பற்றிய டேக்கார்ட்டேயின் கோட்பாடும், பெருஞ்செல்வாக்குப் பெற்றது. இறைவனும் மனித ஆன்மாவும், நீங்கலாக, உலகம் முழுவதும் எந்திர கதியில் இயங்கி வருகின்றது என்றும், ஆகவே இயற்கை நெகிழ்வுகள் அனைத்தையும் எந்திர நுட்பக் காரணங்களால் விளக்கிக் கூற முடியும் என்றும் இவர் நம்பினார். இதே காரணத்திற்காக, சோதிடம், மந்திரம் போன்ற மூடநம்பிக்கைகளை இவர் எதிர்த்தார். அதே போன்று, "இயற்கை நிகழ்ச்சிகளின் காரணகாரியத் தொடர்புகள் தற்செயல் நேர்வுகளல்ல - இறுதி விளைவு நோக்கிய ஒரே மூலத் திட்ட அமைப்பின் கூறுகளே" என்று கூறும் இயல்திட்டவாத (Teleological) விளக்கங்களையும் இவர் தீவிரமாக எதிர்த்தார். டேக்கார்ட்டேயின் கண்ணோட்டத்தில், விலங்குகள் அடிப்படையில் சிக்கலான எந்திரங்களைப் போல் அமைந்துள்ளன. மனித உடலும், வழக்கமான எந்திரவியல் விதிகளுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இக்கொள்கைகள் யாவும் பின்னர் மெய்ப்பிக்கப்பட்டு நவீன உடலியலின் அடிப்படைக் கொள்கைகளாக அமைந்தன.
அறிவியல் ஆராய்ச்சியை டேக்கார்ட்டே ஆதரித்தார். அதன் நடைமுறைப் பயன்பாடுகள் சமுதாயத்திற்கு நம்மை விளைவிக்கும் என நம்பினார். துல்லியமற்ற கோட்பாடுகளை விஞ்ஞானிகள் தவிர்க்க வேண்டும் என்றும், உலகைக் கணிதச் சமன்பாடுகளால் விவரித்துக் கூறுவதற்கு முயல வேண்டும் என்றும் இவர் வலியுறுத்தினார். இவருடைய இந்தக் கொள்கைகள் அனைத்தும் நவீன நோக்குடையனவாக இருந்தன. எனினும், டேக்கார்ட்டே, தாமே பல பரிசோதனைகளைச் செய்திருந்த போதிலும், அறிவியல் முறையில் பரிசோதனைகள் செய்வதன் இன்றியமையா முக்கியத்துவத்தை வலியுறுத்தாமல் விட்டு விட்டார்.
புகழ்பெற்ற பிரிட்டிஷ் தத்துவஞானியாகிய ஃபிரான்சிஸ் பேக்கன், அறிவியல் ஆராய்ச்சியின் தேவையினையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் டேக்கார்ட்டேக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, "ஆகவே நான் நானாக இருப்பதாகக் கருதுகிறேன்" என்ற டேக்கார்ட்டேயின் வாதம்கூட, அவருக்குச் சொந்தமானதன்று. அவருக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே புனித அகஸ்டைன் வேறு விதமாக இதே கருத்தைக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். அதே போன்று, கடவுள் இருக்கிறார் என்பதற்கு டேக்கார்ட்டே கூறிய சான்றுறுதி (Proof) புனித ஆன்செல்ம் (1033 - 1109) முதலில் கூறிய மெய்ப்பொருளியல் வாதத்தின் ஒரு மாற்று வடிவமேயாகும்.
டேக்கார்ட்டே 1641 ஆம் ஆண்டு "தியானங்கள்" (Meditation) என்ற தமது புகழ்பெற்ற நூலை வெளியிட்டார். இவருடைய "தத்துவ விதிகள்" (Principles of Philosophy) என்ற நூல் 1644 ஆம் ஆண்டில் வெளியாயிற்று. இவ்விரு மூலநூல்களும் லத்தீன் மொழியில் எழுதப்பட்டன. இவற்றின் ஃபிரெஞ்சு மொழி பெயர்ப்புகள் 1647 ஆம் ஆண்டில் வெளியாயின.
டேக்கார்ட்டே ஒரு பண்பட்ட எழுத்தாளர். அவருடைய உரைநடை கவர்ச்சிகரமாக இருந்தது. எனினும், இவரது எழுத்துகளின் "தொனி" (Tone) எதிர்பாராத வகையில் பழைய பாணியில் அமைந்திருந்தது. உண்மையைக் கூறின் (ஒரு வேளை தமது பகுத்தறிவு அணுகு முறையின் காரணமாகவோ என்னவோ) ஒரு மத்தியகாலத்துப் புலவரின் செறுக்கு மிகுந்த முழக்கத்தைப் போல் அது தொனிக்கிறது. ஃபிரான்சிஸ் பேக்கனுடன் இவரை ஒப்பிடும் போது, பேக்கன் இவருக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு, பிறந்தவராயினும், பேக்கனின் எழுத்துகள் நவீன தொனியுடன் திகழ்கின்றன.
டேக்கார்ட்டே தீவிரக் கடவுள் பற்றுமிக்கவராக இருந்தார் என்பது அவருடைய எழுத்துகளிலிருந்தே தெளிவாகக் தெரிகிறது. இவர் தம்மை ஒரு சிறந்த கத்தோலிக்கராக கருதினார். எனினும், திருச்சபை அதிகாரிகள் இவரை வெறுத்தனர். இவருடைய நூல்கள், கத்தோலிக்கத் திருச்சபையினரால் தடை செய்யப் பட்டிருந்த நூல்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன. அக்காலத்தில், ஐரோப்பாவிலேயே சமயச் சகிப்புணர்வு மிகுந்த நாடாகக் கருதப்பட்ட புரோட்டஸ்டான்டு ஹாலந்தில் கூட, டேக்கார்ட்டே நாத்திகர் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகி அதிகாரிகளிடம் பல தொல்லைகளை அனுபவித்தார்.
1649 ஆம் ஆண்டில் ஸ்வீடன் அரசியார் கிறிஸ்டினா, டேக்கார்ட்டேக்கு தாராளமான நிதியுதவி வழங்கி, ஸ்டாக்ஹோமுக்கு வந்து தமக்கு ஆசிரியராக இருக்கும் படி கேட்டுக் கொண்டார். டேக்கார்ட்டே வெதுவெதுப்பான அறைகளை விரும்பினார். காலையில் நெடுநேரம் வரை உறங்குவதில் மகிழ்ச்சி கொண்டார். அரசியார் தமக்குப் பாடம் சொலலிக் கொடுக்க இவரை அதிகாலை ஐந்து மணிக்கே அழைத்தது இவருக்குக் கவலையளித்தது. அதிகாலைக் குளிர்காற்று தம்மைக் கொன்றுவிடும் என்று இவர் அஞ்சினார். இவருடைய அச்சம் உண்மையாயிற்று விரையிலேயே இவருக்கு சீத சன்னி (Pneumonia) கண்டது. ஸ்வீடனுக்கு வந்த நான்கே மாதங்களில் 1650 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இவர் காலமானார்.
டேக்கார்ட்டே திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும், அவருக்கு ஒரு குழந்தை ஒரு மகள் இருந்தாள், ஆனால், இந்த மகள் இளமையிலயே இறந்துவிட்டாள்.
டேக்காரட்டேயின் தத்துவத்தை அவருடைய சம காலத்தவர் பலரும் வன்மையாகக் கண்டித்தனர். இவருடைய தத்துவம் சுற்றுவழிப் பகுப்பாய்வாக இருந்தது. இதற்கு ஒரு காரணமாகும். பிற்காலத் தத்துவஞானிகள் பலர் இவருடைய முறையில் பல குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினார். இன்று இவருடைய முறையை முழுமனதுடன் ஆதரிப்பவர்கள் மிகச் சிலரே உண்டு. ஆனால், ஒரு தத்துவஞானியின் முக்கியத்துவம், அவருடைய முறையின் துல்லியத்தை மட்டும் பொறுத்தது அன்று. மாறாக, அவரது கருத்துகள் - அல்லது அவரது எழுத்துகளிலிருந்து மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் கருத்துகள் - பெருமளவுச் செல்வாக்குப் பெற்றுள்ளதா என்பதையே பொறுத்திருக்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால், டேக்கார்ட்டே ஒரு முக்கியமான மனிதனாக விளங்கினார் என்பதில் ஐயத்திற்கிடமில்லை.
டேக்கார்ட்டேயின் கருத்துகளில் குறைந்தது ஐந்து கருத்துகள் ஐரோப்பியர் சிந்தனையில் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தின. அவையாவன : (1) உலகம் பற்றிய அவரது எந்திர முறைக் கண்ணோட்டம் (2) அறிவியல் ஆராய்ச்சிகள் குறித்த அவரது ஆக்கமுறையான அணுகுமுறை (3) அறிவியலில் கணிதத்தைப் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியது (4) தொடக்க நிலை ஐயுறவை அவர் ஆதரித்தது (5) அறிவியல் ஆதார முறையில் அவர் கவனத்தை ஒரு முகப்படுத்தியது.
டேக்கார்ட்டேயின் ஒட்டுமொத்த முக்கியத்துவத்தை மதிப்பிடுங்கால், குறிப்பிடத்தக்க, அவருடைய அறிவியல் சாதனைகளையும், முக்கியமாக, பகுப்பாய்வு வடிவ கணிதத்தை அவர் கண்டுபிடித்ததை - கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் காரணமே, வால்ட்டேர் ரூசோ, ஃபிரான்சிஸ் பேக்கன் போன்ற உயர்ந்த தத்துவ ஞானிகளுக்கு வெகுவாக முற்பட்டு இவருக்கு இடமளிக்க என்னைத் தூண்டியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரெனே டேக்கார்ட்டே (கி.பி.1596 - கி.பி.1650), இவர், டேக்கார்ட்டே, ", தமது, இவருடைய, அறிவியல், எனினும், டேக்கார்ட்டேயின், பற்றிய, ஆண்டில், செய்தார், அவருடைய, வடிவ, நூலை, இதில், வேண்டும், தாம், ஹாலந்தில், அவரது, முடிவு, கணிதம், முறையில், நவீன, மீதும், புகழ்பெற்ற, தத்துவ, உலகம், மொழியில், ஃபிரான்சிஸ், வகையில், பகுப்பாய்வு, என்றும், உண்மையைக், தான், முறையை, மிகச், அவர், போன்று, இவரை, இவருக்கு, கருத்துகள், ஆண்டுகளுக்கு, கூறிய, புனித, மனித, முறையின், நான், எந்திர, பேக்கன், ஃபிரெஞ்சு, பின்னர், ஆண்டு, விரும்பினார், பயணம், கருதினார், என்னும், சிறந்த, எழுதினார், அதனால், இந்தக், முக்கியமான, விளக்கியிருந்தார், எடுத்துக், முதலில், அந்த, ஆகவே, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்