முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஜோகன்னஸ் கெப்ளர் (கி.பி.1571 - கி.பி.1630)
ஜோகன்னஸ் கெப்ளர் (கி.பி.1571 - கி.பி.1630)
வான்கோள்களின் இயக்க விதிகளைக் கண்டுபிடித்தவர் ஜோகன்னஸ் கெப்ளர் ஆவார். அவர், ஜெர்மனியில் வெய்ல் டெர் ஸ்டாட் என்னும் நகரில் பிறந்தார். புகழ் பெற்ற பிரஸ்ஸிய வானியல் வல்லுநராகிய கோப்பர்னிக்கஸ், 'கோளங்கள் கதிரவனைச் சுற்றி வருகின்றனவேயன்றி, நிலவுலகைச் சுற்றி வரவில்லை' என்னும் தமது கோட்பாட்டினை விளக்கும் நூலை இவர் பிறப்பதற்கு 28 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வெளியிட்டிருந்தார். கெப்ளர், டியூபிங்கன் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று, 1588 ஆம் ஆண்டுல் இளங்கலைப் பட்டமும், மூன்றாண்டுகளுக்குப் பிறகு முதுகலைப் பட்டமும் பெற்றார். கோப்பர்னிக்கசின் சூரிய மையக் கோட்பாட்டினை அவர் காலத்திய விஞ்ஞானிகளில் பெரும்பாலோர் ஏற்க மறுத்தனர். ஆனால், கெப்ளர் டியூபிங்கனில் படித்துக் கொண்டிருக்கும் போதே சூரிய மையக் கோட்பாடு மிகத் தெளிவாக விளக்கிக் கூறப் பட்டதைக் கவனமாகக் கேட்டார். விரைவிலேயே அந்தக் கோட்பாட்டில் அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டது.
டியூபிங்கன் பல்கலைக் கழகத்தை விட்டு நீங்கிய பின்பு, கெப்ளர், கிராஜ் நகரிலிருந்த கலைக் கழகத்தில் பல ஆண்டுகள் ஒரு பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு பணிபுரியும் போது அவர் வானியல் பற்றிய தமது முதலாவது நூலை எழுதினார் (1596). அந்த நூலில் அவர் விளக்கிய கோட்பாடு முற்றிலும் தவறாகிப் போய்விட்ட போதிலும், கெப்ளரின் கணிதத் திறனையும், தற்சிந்தனையாற்றலையும் அந்த நூல் வெளிப்படுத்தியது. அந்த நூலைப் படித்த புகழ் பெற்ற வானியல் அறிஞராகிய டைக்கோ பிராகி, பிரேகு நகர் அருகிலிருந்த தமது ஆராய்ச்சிக் கூடத்தில் தமக்கு உதவியாளராக வரும்படி கெப்ளரை அழைத்தார்.
டைக்கோவின் அழைப்பை ஏற்றுக் கொண்ட கெப்ளர், 1600 ஆம் ஆண்டு ஜனவரியில் அவருக்கு உதவியாளராகச் சேர்ந்தார். எனினும், இடைப்பட்ட மாதங்களில், புனித ரோமானியப் பேரரசர் இரண்டாம் ரூடால்ஃபை இவருடைய ஆற்றல் வெகுவாகக் கவர்ந்து விடவே, அவர், இவரை டைக்கோவுக்குக அடுத்தபடியாக அரசவைக் கணித மேதையாக நியமித்தார்.
டைக்கோ பிராகிக்குப் பின்வந்தவர் என்ற முறையில், டைக்கோ பல்லாண்டுகள் கோளங்கள் குறித்து கவனமாக ஆராய்ந்து எழுதி வைத்திருந்த ஏராளமான ஆராய்ச்சிக் குறிப்புகள் கெப்ளருக்கு வந்தடைந்தன. தொலை நோக்காடி கண்டுபிடிக்கப்படுவதற்க முன்பிருந்த தலை சிறந்த வானியலறிஞர்களில் இறுதியானவராக விளங்கிய டைக்கோ உலகம் கண்டிராத உன்னிப்பான துல்லியமான கூர்நோக்காராய்ச்சியாளராகவும் திகழ்ந்தார். அவருடைய ஆராய்ச்சிக் குறிப்புகள் அனைத்தும் அருமதிப்புள்ளவையாக விளங்கின. கெப்ளரின் காலத்தில், கோளங்களின் இயக்கம் குறித்து, கோப்பர்னிக்கசின் சூரிய மையக் கொள்கையும், டாலமியின் பழைய பூவுலக மையக் கொள்கையும் வழக்கில் இருந்தன. இவை தவிர மூன்றாவது கொள்கை ஒன்றையும் டைக்கோ வகுத்திருந்தார். டைக்கோவின் ஆராய்ச்சிக் குறிப்புக்களை மிகக் கவனமாகக் கணித முறைப்படி பகுப்பாய்வு செய்வதன் மூலமாக இவற்றுள் எந்தக் கொள்கை சரியானது என்பதைத் துல்லியமாக உறுதியிட்டு விடலாம் என்று கெப்ளர் நம்பினார். ஆனால், பல ஆண்டுகள் அரும்பாடுபட்டுக் கணிதக் கணிப்புகள் செய்து பார்த்தபோது டைக்கோவின் ஆராய்ச்சிக் குறிப்புகள் அந்தக் கொள்கைகளில் எதனுடனும் ஒத்திருக்கவில்லை என்பதைக் கண்டு கெப்ளர் மனக்குழப்பமடைந்தார்.
இறுதியில், சிக்கல் என்ன என்பதைக் கெப்ளர் உணர்ந்து கொண்டார். அவரும், டைக்கோ பிராகி, கோப்பர்னிக்கஸ் போன்ற மரபு வானியலறிஞர்கள் அனைவரையும் போன்றே, கோளங்களின் சுற்றுப் பாதைகள், வட்டங்களை அல்லது வட்டங்களின் தொகுதுகளைக் கொண்டிருப்பதாக அனுமானித்திருந்தார். ஆனால், உண்மையில், கோளங்களில் சுற்றுப் பாதைகள் வட்டவடிவில் இல்லாமல், நீள் வட்டவடிவில் இருக்கின்றன என்பதைக் கெப்ளர் அறிந்தார்.
இந்த அடிப்படையான தீர்வைக் கண்டுபிடித்த பின்னருங்கூட, தமது கோட்பாடு, டைக்கோவின் ஆராய்ச்சிகளை ஒத்திருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்காகப் பல மாதங்கள் வரை மனச்சோர்வூட்டக்கூடிய மிகச் சிக்கலான கணிப்புகளில் கெப்ளர் ஈடுபட்டிருந்தார். அவருடைய சிறந்த நூலாகிய 'புதிய வானியல்' 1609 ஆம் ஆண்டில் வெளியாகியது. அதில் வான்கோள்களின் இயக்கம் பற்றிய தமது முதல் இரு விதிகளை அவர் விளக்கியிருந்தார். 'ஒவ்வொரு கோளமும், சூரியனைக் குவி மையமாகக் கொண்டு, சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் இயங்குகிறது' என்பது முதல் விதியாகும். இரண்டாம் விதி, 'ஒரு கோளம் சூரியனுக்கு அருகே இருக்கும்போது அதிக விரைவாக இயங்குகிறது; கோளத்தையும், சூரியனையும் இணைக்கும் கோடு, சமகால அளவுகளில் சம அளவுப் பரப்புகளை அளாவிச் செல்லும் வகையில் ஒரு கோளத்தின் வேகம் வேறுபடுகிறது' என்று கூறுகிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு கெப்ளர் தமது மூன்றாவது விதியை வெளியிட்டார். "ஒரு கோளம், சூரியனிலிருந்து எவ்வளவு அதிக தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு அதிக காலம் அது அதன் ஒரு சுழற்சியை முடிப்பதற்குப் பிடிக்கிறது. ஒரு சுழற்சிக்கான கால அளவின் இருமடிப் பெருக்கம், சூரியனிலிருந்து கோளத்தின் தொலைவின் மும்முடிப் பெருக்கத்திற்கு சரிசம விகித அளவில் இருக்கும்" என்பது இந்த விதியாகும்.
கெப்ளரின் விதிகள், சூரியனைச் சுற்றும் கோளங்களின் இயக்கங்களை முழுமையாகவும், துல்லியமாகவும் விவரித்த தன் மூலமாக கோப்பர்னிக்கஸ், கலிலியோ போன்ற மேதைகளுக்குக் கூடி பிடிபடாமலிருந்த ஓர் அடிப்படையான வானியல் சிக்கலுக்குத் தீர்வு காண முடிந்தது. எனினும், கோளங்கள் ஏன் நீள் வட்டப் பாதையில் இயங்குகின்றன என்பதை கெப்ளர் விளக்கிக் கூறவில்லை. இதற்குத் தக்க விளக்கமளித்தவர் அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஐசக் நியூட்டேனேயாவார். ஆயினும், நியூட்டனின் மாபெரும் இணைப்பாக்கத்திற்கு இன்றியமையாத முன்னுரையாக கெப்ளரின் விதிகள் அமைந்தன. ("மற்ற மனிதர்களை விட அதிக தொலைவுக்கு என்னால் பார்க்க முடிந்தது என்றால், அதற்கு, நான் பேருருவம் வாய்ந்தவர்களின் தோள்களில் நின்று கொண்டு பார்த்ததே காரணமாகும்" என்று நியூட்டன் ஒரு சமயம் கூறினார். நியூட்டன் குறிப்பிட்ட பேருருவம் படைத்தவர்களில் கெப்ளரும் ஒருவர் என்பதில் ஐயமில்லை).
வானியலுக்கு கெப்ளர் ஆற்றியுள்ள தொண்டு, கோப்பர்னிக்கசின் பணிக்கு இணையானது எனலாம். ஒரு வகையில், கெப்ளரின் சாதனை, கோப்பர்னிக்கசின் சாதனையைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது எனல் வேண்டும். கெப்ளரின் பணி, அதிகத் தற்சிந்தனையுடையது. அவருக்கு எதிர்ப்பட்ட கணிதக் கணிப்பு சிரமங்கள் மிகப் பல. அவருடைய காலத்தில் கணிதக் கணிப்பு முறைகள் இன்றுள்ளது போல் அத்துணையளவு முன்னேறியிருக்கவில்லை. கெப்ளரின் கணிப்புப் பணிகளை எளிமையாக்க அப்போது எந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.
கெப்ளருடைய சாதனைகளில் பெரும் முக்கியத்துவத்தைக் கருதுகையில், அவருடைய முடிவுகள், கலிலியோ போன்ற மாபெரும் வானியல் விஞ்ஞானிகளால் கூட முதலில் புறக்கணிக்கப்பட்டன என்பதை அறியும்போது விந்தையாக இருக்கிறது. (கெப்ளரின் விதிகளைக் குறிப்பாக கலிலியோ புறக்கணித்தது மிகவும் வியப்பளிக்கிறது. ஏனெனில், இருவரும் கடிதத் தொடர்பு கொண்டிருந்தனர். மேலும், கெப்ளரின் முடிவுகள், டாலமியின் கோட்பாட்டை மறுத்துரைப்பதற்கு கலிலியோவுக்க மிகவும் உதவியிருக்கும்). ஆனால், கெப்ளரது சாதனையின் பெருமையை மற்றவர்கள் மிக மெதுவாக உணர்ந்து கொண்டார்களெனினும், அவர் அதன் பரிமாணத்தை மிகச் சரியாகவே அறிந்து கொண்டிருந்தார். களிபேருவகை பொங்கிப் பீறிட அவர் இவ்வாறு எழுதியுள்ளார்.
"ஒரு தெய்வப் பரவசம் என்னை ஆட்கொள்கிறது.....
எனது நூலை எழுதி முடித்து விட்டேன். அதனை என்
தலைமுறையினரோ, பின்வரும் தலைமுறையினரோ
படிப்பார்கள். யார் படித்தாலும் எனக்குக் கவலையில்லை.
ஒருவேளை அதைப் படிப்பதற்கு ஒரு வாசகருக்காக
ஆண்டவன் தன் படைப்பைப் புரிந்து கொள்ளும்
ஒருவருக்காக 6,000 ஆண்டுகள் காத்திருந்தது போல
நூறாண்டள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்"
ஆனாலும் ஆண்டுகள் செல்லச் செல்ல, படிப்படியாக கெப்ளருடைய விதிகளின் முக்கியத்துவம் அறிவியல் உலகுக்குப் புரியலாயிற்று. உண்மையைக் கூறின், அதே நூற்றாண்டின் பிற்பகுதியில், நியூட்டன் கோட்பாடுகளுக்கு ஆதரவு தேடியவர்கள் நியூட்டனின் கோட்பாடுகளிலிருந்து கெப்ளரின் விதிகளை வருவிக்கலாம் எனக் கூகறி வாதிட்டார்கள். இதற்கு மறுதலையாக, நியூட்டனின் இயக்க விதிகளை ஏற்றுக் கொள்வதாயின், கெப்ளரின் விதிகளிலிருந்து நியூட்டனின் ஈர்ப்பு விசை விதிகளைத் துல்லியமாகவும் வகுக்கலாம். எனினும், அவ்வாறு செய்வதற்கு, கெப்ளருக்குக் கிடைத்ததை விட அதிக மேம்பட்ட கணித உத்திகள் தேவைப்பட்டன. அத்தகைய உத்திகள் இல்லாமலேயே, சூரியனிலிருந்து, வெளிப்படும் விசைகளினால் கோளங்களின் இயக்கங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை கெப்ளர் தம் நுண்ணறிவால் ஊகித்துக் கூறினார்.
கோளங்களின் இயக்க விதிகளை வகுத்ததுடன், வானியலின் வேறு பல சிறிய கண்டுபிடிப்புகளையும், கெப்ளர் செய்தார். ஒளியியல் கோட்பாட்டுக்கும் அவர் அருந்தொண்டு புரிந்துள்ளார். தீவினைப் பயனாக, அவருடைய வாழ்நாளின் இறுதியாண்டுகளில், சில சொந்தச் சிக்கல்கள் அவரை அலைக் கழித்தன. ஜெர்மனி, முப்பதாண்டுப் போரில் சிக்குண்டிருந்தது. அதனால், கெப்ளருக்கு பல துன்பங்கள் தோன்றின.
முதலில் தம் ஊதியத்தைப் பெறுவதில் அவர் பெருந்தொல்லைகளுக்குள்ளானார். புனித ரோமானிய பேரரசர்கள் செல்வச் செழிப்பு மிக்க காலங்களில் கூட, ஊதியங்கள் வழங்குவதற்கு மிகுந்த காலங்கடத்தி வந்தார்கள். போர்க்காலப் பெருங்குழப்பங்களின்போது, கெப்ளரின் ஊதியங்கள் பெருமளவில் கொடுபடாமல் நிலுவையாக இருந்தன. கெப்ளர் இருமுறை திருமணம் புரிந்து 12 குழந்தைகளுடன் இருந்தமையால் அவருக்குப் பணமுடை மிகக் கடுமையாக இருந்தது. கெப்ளரின் தாயைப் பற்றி மற்றொரு தொந்தரவும் அவருக்கு உண்டாயிற்று. அவருடைய அன்னையைச் சூனியக்காரி எனக் கூறி 1620 ஆம் ஆண்டில் கைது செய்தனர். அவரைச் சித்திரவதையிலிருந்து விடுவிப்பதற்காக கெப்ளர் நெடுங்காலம் கடும் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. இறுதியில் அவர் தம் முயற்சியில் வெற்றி பெற்றார்.
கெப்ளர், 1930 ஆம் ஆண்டில், பவேரியா மாநிலத்தில் ரெகன்ஸ்பர்க் என்னுமிடத்தில் காலமானார். முப்பதாண்டுப் போர்க் கொந்தளிப்பில் அவருடைய கல்லறை நாசமாக்கப்பட்டது. எனினும், அவருடைய வான்கோள்களின் இயக்க விதிகள், எந்த ஒரு கல்லறையையும் விட, அவருக்கு என்றும் அழியாத நினைவுச் சின்னமாகத் திகழ்கின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 51 | 52 | 53 | 54 | 55 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோகன்னஸ் கெப்ளர் (கி.பி.1571 - கி.பி.1630), கெப்ளர், கெப்ளரின், அவர், அவருடைய, டைக்கோ, தமது, வானியல், அதிக, அவருக்கு, கோளங்களின், ஆராய்ச்சிக், இயக்க, டைக்கோவின், எனினும், விதிகளை, நியூட்டனின், என்பதை, மையக், கோப்பர்னிக்கசின், ஆண்டுகள், ஆண்டில், ", விதிகள், நியூட்டன், கலிலியோ, நீள், சூரியனிலிருந்து, கோளங்கள், சுற்றி, நூலை, அந்த, கோட்பாடு, வான்கோள்களின், கணித, கணிதக், கோப்பர்னிக்கஸ், சூரிய, குறிப்புகள், என்பதைக், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்