சேர மன்னர் வரலாறு - தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
இரும்பொறை செல்வக் கடுங்கோ வாழியாதன் சிக்கற்பள்ளியில் துஞ்சிய காலத்தில் சேரவரசு கொங்கு நாட்டில் பரத்திருந்தது. அதற்குக் கொங்கு வஞ்சியென்னும் பேரூர் தலைநகராக விளங்கியதும் இடைக்காலத்தே கொங்கு வஞ்சி தஞ்சையிலிருந்து அரசாண்ட சோழர் கைப்பட்ட போது இராசராசபுரம் என்று பெயர் பெற்று இந் நாளில் தாராபுரம் என மருவிற்றென்பதும் முன்பே கூறப்பட்டன.
அக் காலத்தே கொங்கு நாட்டின் வடக்கில் புன்னாடும், எருமை நாடும்[1], கிழக்கில் தொண்டை நாடும் சோழ நாடும், தெற்கிலும் மேற்கிலும் சேர நாடும்
எல்லையாக விளங்கின. கோயம்புத்தூர்ப் பகுதி மீகொங்கு நாடு என்றும், குளித்தலையும் அதன் தென்மேற்குப் பகுதியும் கீழ் கொங்கு நாடென்றும், சேலம் பகுதி வடகொங்கு நாடு என்றும்[2] வழங்கின. பின்பு மைசூர் நாடும் அதனைச் சேர்ந்த கோலார் நாடும் சேலம் மாவட்டத்தின் வடபகுதியும் சேர்ந்து கங்க நாடெனப் பெயர் பெற்றன[3] , சேலம் பகுதியின் எஞ்சிய பகுதி முற்றும் கொங்கு நாடாகவே விளங்கிற்று. நாமக்கல்லிலுள்ள பழமையான கல்வெட்டொன்று அது வடகொங்கு நாட்டைச் சேர்ந்ததெனக் குறிக்கின்றது [4] .
இக் கொங்கு நாடு முற்றும் காடும் மேடும் நிறைந்து முல்லை வளமே சிறந்திருந்ததனால், இங்கே வாழ்ந்தவர் பெரும்பாலும் ஆடு மாடு மேய்க்கும் ஆயராகவே இருந்தனர். இது பற்றியே சான்றோர் கொங்கு நாட்டவரை “ஆகெழு கொங்கர்'’ எனச் சிறப்பித்துக் கூறினர்.
கொங்கு நாட்டின் வடக்கில் இருந்த புன்னாடு, முதற்கண் கங்கவேந்தர் ஆட்சிக்குள்ளாகிக் கங்க நாடானபோது, எருமை நாட்டில் எருமையூரரும் கொங்கு நாட்டில் அதியமான்களும் ஆட்சி செலுத்தினர். அதியமான்கள் இருந்தவூர் தகடூர் எனச் சங்க காலத்தில் வழங்கிற்று; இப்போது, அது தருமபுரியென வழங்குகிறது. எருமையது நாடு எருமை நாடென்றும், தகடூரைத் தலைநகராகக் கொண்டது தகடூர் நாடென்றும் பெயர் பெற்று விளங்கின.[5]
தகடூர் நாட்டுக்குத் தெற்கில் காவிரியின் கீழ்க் கரைக்கும் கொல்லி மலைக்கும் இடையிலிருந்து கொல்லிக்கூற்றம் என்றும், காவிரியின் மேலைப் பகுதி குறும்பு நாடு என்னும் நிலவின. கொல்லிக் கூற்றத்தின் தெற்கில் மேற்குக் கிழக்காக ஓடும் காவிரி யாற்றின் வடகரையில் கீழ்ப்பகுதி மழநாடு எனப்பட்டது. இப்போது அது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முசிறி லால்குடி வட்டங்களாக விளங்குகிறது. கீழ்க் கொங்கு நாட்டில் பொள்ளாச்சி நாடும் உடுமலைப் பேட்டையின் ஒரு பகுதியும் பொறை நாடாகும்; எஞ்சிய பகுதியும் பழனி வட்டமும் வையாவி நாடு எனப்பட்டன; இடைக்காலத்தில் வையாவி நாடு வைகாவி நாடு என மருவி வழங்கினமை கல்வெட்டுகளால்[6] தெரிகிறது. பல்லடம் தாராபுரம் வட்டங்களின் ஒரு பகுதி குறும்பு நாட்டிலும் ஒரு பகுதி கீழ்க் கொங்கு நாட்டிலும், ஒரு பகுதி பொறை நாடு வையாவி நாடுகளிலும் இருந்தன. களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் காலத்தே, வாகைப் பெருந்துறையில் நன்னனோடு செய்த போரின் விளைவாகக் கொங்கு நாட்டின் குறும்பு நாட்டுப் பகுதி முற்றும் சேரர்க் குரியதாயிற்று. வடக்கில் தகடூர் நாட்டுக்கும் சேரர் கொங்கு நாடான குறும்பு நாட்டுக்கும் எல்லையாகப் பூவானியாறு விளங்கிற்று. கீழ் கொங்கு நாட்டுக் கருவூர், கருவூரான வஞ்சி என்றும் கருவுரென்றும் கல்வெட்டுகளில் பெயர் குறிக்கப் படுகிறது. கருவூரும், முசிறியும் சேரநாட்டு மேலைக் கடற்கரையில் உள்ள ஊர்களின் பெயர்கள்; கொங்கு நாட்டைச் சேரவரசின்கீழ்க் கொண்டதற்கு அறிகுறி யாகச் சேரர் இப் பெயர்களைப் புகுத்தினராதல் வேண்டும். அதியமான்களுடைய கல்வெட்டுகள் வடார்க்காடு மாவட்டத்திலும் தென்னார்காடு மாவட்டத்திலும் காணப்படுகின்றன. திருநாவுக்கரசர் சூலைநோய் நீங்கிச் சைவரான இடமாகிய திருவதிகை, அதியரைய மங்கை எனப்படுவதால், அதற்கும் இவ்வதி யர்க்கும் தொடர்புண்டு என எண்ண இடமேற்படுகிறது.
இனி, மேலைக் கடற்கரை நாட்டுச் சேரரது ஆட்சி , கொங்குநாடு முழுதும் பரந்து தகடூர் நாட்டை நெருங்குவது கண்டனர் தகடூர் நாட்டு அதியமான்கள். அக் காலத்தே, ஆவியர், ஓவியர், மலையமான் என்பாரைப் போல, அதியர் என்னும் குடியில் தோன்றிப் புகழ் பொருள் படை ஆண்மை முதலிய வற்றின் சிறப்பால், அவர்கள் புலவர் பாடும் புகழ் படைத்து விளங்கினர். ஒளவையார்க்கு நெல்லிக்கனி வழங்கி நெடும் புகழ் பெற்று நெடுமான் அஞ்சி, இந்த அதியர் குடியில் தோன்றிய பெருந்தகையாவன். இக் குடியில் தோன்றிய தலைவர்கள் கி.பி. பத்துப் பன்னிரண்டாம் நூற்றாண்டினும் ஆங்காங்கு இருந்திருக் கின்றனர். பிற்காலத்தே சோழர்க்குத் துணையாய் இருந்து கன்னட வேந்தரோடும் பல்லவ சேர மன்னர்க்குத் துணையாய்ச் சோழ பாண்டியரோடும் பிறரோடும் பொருது மேன்மை எய்தியிருக்கின்றனர். சேரமான் பெருஞ் சேரலிரும் பொறை காலத்தில் அதியமான் எழினியென்பான் தகடூரிலிருந்து தகடூர் நாட்டை ஆண்டு வந்தான்.
- ↑ 1. எருமை நாடு எறாமையூரைத் தலைநகரமாகக் கொண்ட நாடு, எருமை வடமொழியில் மகிஷம் எனப்படும்; மகிஷவூர் பின்பு மைசூர் எனச் சிதைந்து விட்டது.
- ↑ 2. A.R. No.227 of 1927-8.
- ↑ 3. Mysore Gazetteer Vol.I.p.334.
- ↑ 4. A.R. No.7 of 1906.
- ↑ 5. A.R. No. 235 of 1926-8,
- ↑ 6. S.I.I. Vol. V. No. 285, 287
தேடல் தொடர்பான தகவல்கள்:
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - History of Chera - சேர மன்னர் வரலாறு - கொங்கு, நாடு, பகுதி, நாடும், தகடூர், குறும்பு, நாட்டில், என்றும், பெயர், கீழ்க், பெற்று, பொறை, வையாவி, புகழ், குடியில், முற்றும், சேலம், நாட்டின், வடக்கில், காலத்தில், காலத்தே, நாடென்றும், பகுதியும், எருமை