வாயு புராணம் - பகுதி 5 - பதினெண் புராணங்கள்
தாரகாசுரனின் மைந்தர்களாகிய வித்யுன்மாலி, தாரகாட்சன், வீர்யவனா ஆகிய மூவரும் கடும் தவம் புரிந்தனர். ஒரே காலில் நின்றும், நீரில் இருந்தும், தலைகீழாக நின்றும் ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் செய்தனர். தவத்தின் முடிவில் எதிர்ப்பட்ட பிரம்மனிடம் தாங்கள் சிரஞ்சீவியாக இருக்க வரம் வேண்டினர். அப்படி ஒரு வரத்தைத் தர தனக்கு ஆற்றலில்லை என்று பிரம்மன் கூறியவுடன், அப்படியானால் தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன மூன்று பெரிய கோட்டைகளை அமைத்துக்கொண்டு தாங்கள் ஆயிரம் வருடங்கள் அவற்றுள் வாழ வேண்டும் என்றும், அதன்பின் இந்த மூன்று கோட்டைகளும் ஒரே கோட்டையில் அடங்கி பலம் பெற்றதாக இருக்கவேண்டும் என்றும் கேட்டனர். மேலும் யாராவது தன்னை அழிக்க வந்தால் ஒரே அம்பை மட்டும் பயன்படுத்தி ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் இந்த மூன்று கோட்டைகளை அழித்தால் அதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினர். பிரம்மன் தந்த வரத்தின்படி மூன்று கோட்டைகளை அமைத்து ஆயிரக்கணக்கான தைத்தியர்கள் அவற்றுள் வாழ வழிசெய்தனர். பல்லாண்டுகள் கழித்தவுடன் அவர்கள் சிவபூசை செய்வதை மறந்து அகங்காரம் மிக்கவர்களாக தங்களை யாரும் அழிக்க முடியாது என்ற காரணத்தால் தவறான வழிகளில் செல்ல முற்பட்டனர். தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகிய அனைவரும் சிவனிடம் சென்று முறை யிட்டனர். கடவுள் வழிபாட்டை மறந்து தவறான வழிகளில் செல்லும் அவர்களை அழிக்க சிவன் ஒத்துக்கொண்டார். விஸ்வகர்மா முழுதும் தங்கத்தால் ஆன தேரைத் தயாரித்தான். பிரம்மனே சாரதியாக இருந்து தேரை இயக்க முன்வந்தான். திரிபுரத்தை நோக்கிச் சென்ற அத்தேரிலிருந்து பாசுபதம்’ என்ற ஒரே அஸ்திரத்தை செலுத்தவே திரிபுரம் எரிந்து சாம்பலாயிற்று.
சிவன் ஏற்காத சம்பங்கிப் பூ
லோமஹர்ஷ்ன முனிவர் உடனிருந்த முனிவர்களுக்குச் சிவ புராணத்தைச் சொல்லிக்கொண்டு வருகையில் பெருமானைத் திருப்தி அடையச் செய்வது மிகமிக எளிது. சம்பங்கிப் பூவைத் தவிர வேறு எந்தப் பூ கிடைத்தாலும் அதைச் சிவனுக்கு அர்ப்பணித்தால் அதை அவர் ஏற்று மகிழ்வார்” என்று கூறினார். முனிவர்கள், “அது ஏன் சம்பங்கிப் பூவை சிவன் ஏற்பதில்லை?” என்று கேட்டார்கள். அதற்குரிய நிகழ்ச்சியை லோமஹர்ஷனர் பின்வருமாறு கூறினார்.
இராம, இலக்குவர்கள் சீதையை அழைத்துக் கொண்டு வனவாசம் வந்தனர். அவர்கள் காட்டில் இருக்கும் பொழுது தசரதன் இறந்துபோன செய்தி அவர்களை எட்டிற்று. உடனே இராமன் இலக்குவனைப் பார்த்து அருகில் இருக்கும் கிராமம் சென்று சிரார்த்தம் செய்யும் பொருள்களைப் பெற்றுவா என்று கூறினார். இலக்குவன் சென்று நெடுநேரம் ஆகிவிட்டபடியாலும், உச்சி நேரத்திற்கு முன், சிரார்த்தத்தைச் செய்து முடிக்க வேண்டும் ஆதலாலும், இராமன் இலக்குவனைத் தேடிச் சென்றான். நெடுநேரம் அவனும் வராமையால் உச்சிக்காலம் நெருங்குவதை அறிந்து சீதாவே சிரார்த்தத்தைச் செய்து முடிக்கச் சென்றாள். பால்கு நதியில் குளித்து விட்டு ஒரு விளக்கை ஏற்றிப் பக்கத்தில் இருந்த சம்பங்கிச் செடியில் இருந்து பூக்களைப் பறித்து சிரார்த்தத்தை முடித்தாள். சிரார்த்தத்தின் முடிவில் ஆகாயத்தில் இரண்டு கைகள் மட்டும் தோன்றி அவள் அளித்த பூக்களை ஏற்றுக் கொண்டன. அசரீரி, "சீதா! நான் மகிழ்ச்சி அடைந்தேன். உன்னை வாழ்த்துகிறேன்” என்று கூறிற்று. சீதாவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அந்தக் கைகளையும், அசரீரியையும் பார்த்து, “நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லையே?’ என்றாள். அசரீரி, 'மருமகளே! நான்தான் உன் மாமனார். நீ சிரத்தையுடன் செய்த இறுதிச் சடங்கை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்’ என்று கூறிற்று. உடனே சீதை, "என் கணவரும், என் மைத்துனரும் இதை நம்ப மாட்டார்களே” என்று கூறினாள். அதற்கு அசரீரி, 'கவலை வேண்டாம். இந்த நதி, இந்த விளக்கில் உள்ள சுடர், சம்பங்கிப்பூ பக்கத்தில் நிற்கின்ற பசு ஆகிய நான்கும் இது நடந்தது என்பதற்கு சான்று கூறும், என்று கூறி மறைந்து விட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 5 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, மூன்று, சிவன், சம்பங்கிப், அசரீரி, சென்று, கூறினார், ஏற்றுக், கோட்டைகளை, அழிக்க, இருக்கும், ஆகிய