வாயு புராணம் - பகுதி 2 - பதினெண் புராணங்கள்
பிரம்மனும் விஷ்ணுவும் தம்முள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஜோதி வடிவமான லிங்கம் ஒன்று வந்து நின்றது. பிரம்மனும் விஷ்ணுவும் தங்கள் சண்டையை நிறுத்திக் கொண்டு, இடையே வந்தது யார் என்று நினைத்தனர். அந்த ஜோதி ஸ்வரூபம் கண்ணுக்கெட்டிய தூரம் உயர்ந்தும், மிகக் கீழே சென்றும் காட்சி அளித்தது. அதைப் பார்த்த விஷ்ணு, பிரம்மனே! நம்முடைய சண்டையை நிறுத்திக் கொள்வோம். இந்த வடிவத்தின் ஆதியையும், அந்தத்தையும் நாம் காணவேண்டும். நான் காட்டுப் பன்றி வடிவெடுத்து இதன் அடியைக் காண விரும்புகிறேன். நீ அன்னப் பறவை வடிவெடுத்து, இதன் முடி எங்கிருக்கிறதென்று பார்த்து வா என்று கூறினார். விஷ்ணுவின் யோசனையைக் கேட்ட பிரம்மன் உடனே அன்னப் பறவையாக மாறி மேலே மேலே பறந்து சென்றான். விஷ்ணு, ஆண்பன்றி வடிவாகி பூமியைத் துளைத்துக் கொண்டு கீழே சென்றார். 4000 ஆண்டுகள் அவர்கள் இருவரும் தேடும் பணியில் ஈடுபட்டும் லிங்கத்தின் அடி முடியைத் தேட முடியவில்லை. பிறகு இருவரும் பழைய இடத்திற்கு வந்து சிவனைத் துதித்தனர். அப்பொழுது 5 முகங்களும், 10 கைகளும் கொண்ட லிங்க வடிவில் பரமேஸ்வரன் தோன்றினார். இவர்களைப் பார்த்து, "பிரம்மனே, விஷ்ணுவே, நீங்கள் இருவரும் என்னில் ஒவ்வொரு பகுதியாவீர்கள். நாம் மூவரும் ஒன்றுதான். பிரம்மனாகிய உனக்குப் படைக்கும் தொழில், விஷ்ணுவாகிய உனக்குக் காக்கும் தொழில் கொடுக்கப்பட்டுள்ளது. சிவனாகிய நான் அனைத்தையும் அழிக்கும் தொழில் செய்கிறேன். என்னிடத்திலிருந்து 'ருத்ரன்' என்பவன் தோன்றுவான். அவனும் நானும் ஒன்றுதான். அவன் இந்த அழித்தல் தொழிலைச் செய்வான். நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதையும், ஒரு பணியைச் சேர்ந்து செய்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ளல் வேண்டும்” என்றார்.
பிரபஞ்சத் தோற்றம்
எங்கும் நிரம்பி இருந்த நீரில் விஷ்ணு ஒரு மிகப் பெரிய முட்டையை உண்டாக்கினார். பிறகு விஷ்ணு மிகப் பெரிய வடிவெடுத்து அந்த முட்டைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். இதனிடையே பிரம்மன் தியானத்தின் மூலமாகவே கர்தமன், தட்சன், மரீச்சி ஆகிய முனிவர்களை உண்டாக்கினான். மரீச்சியின் பிள்ளை காசிபன் தட்சனின் 60 பெண்களுள் 13 பேரை மணந்து கொண்டான். காசிபனின் பிள்ளைகளும், தட்சனின் மற்றப் பெண்களும், ஆதித்தர்களாகவும், தைத்தியர்களாகவும், தானவர்களாகவும், மரங்களாகவும், பறவைகளாகவும், பாம்புகளாகவும் ஆயினர்.
ருத்ரன் என்ற பெயரில் சிவனே பிரம்மாவினின்று தோன்றினான். இந்த ருத்ரன் தட்சனின் மகளாகிய சதியைத் திருமணம் செய்து கொண்டான். ஆனால் ருத்ரனும் தட்சனும் ஒருவரையொருவர் வெறுத்தனர். ருத்ரனைத் தள்ளி வைத்து விட்டு தட்சன் யாகம் ஒன்று ஏற்பாடு செய்தான். சதியை அழைக்காவிடினும், அவள் சென்று அதில் கலந்து கொண்டாள். தட்சன் அவளைப் பேசிய ஏச்சுக்களால் சதி தன் உயிரை விட்டு விட்டாள். இதனால் கோபமுற்ற ருத்ரன் தன்னுடைய துணைவனை அழைத்து தட்சனுடைய யாகத்தை அழித்து அவனையும் கொன்று வருமாறு கட்டளையிட்டான். தட்சன் யாகம் அழிக்கப்பட்டு அங்கு வந்த தேவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் ருத்ரன் கோபம் தணிக்கப்பட்டு தேவர்கள் பிழைக்கச் செய்யப் பெற்றனர். சதிஇமவானுக்கும், மேனகைக்கும் மகளாகப் பார்வதி என்ற பெயருடன் பிறந்தாள். மறுபடியும் சிவபெருமானை மணந்தாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 2 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ருத்ரன், விஷ்ணு, தட்சன், தட்சனின், தொழில், ஒன்றுதான், நாம், வடிவெடுத்து, இருவரும்