வாயு புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
கணேசர் தோற்றம்
பார்வதிக்குத் தனியாக ஒர் அரண்மனை இருந்தது. அவ்வரண்மனைக் காவலர்களாக நந்தியும், பிருங்கியும் காவல் செய்தனர். அவர்கள் உத்தரவு இல்லாமல் யாரும் பார்வதியைப் பார்க்க முடியாத நிலைமை நீடித்தது. பார்வதியின் தோழிகளான ஜெய, விஜயா என்பவர்களுக்கு இந்த நிலை நீடிப்பதில் விருப்பமில்லை. எனவே, பார்வதியிடம் சென்று முறையிட்டனர். அவர்கள் பேசிய பிறகு பார்வதி அருகில் இருந்த குளத்தில் இருந்து களிமண்ணை எடுத்து, அழகிய பிள்ளை வடிவை உண்டாக்கினாள். பிறகு அப் பிள்ளைக்கு நன்றாக அலங்காரம் செய்து, “நீ என் மகன்; உனக்கு கணேசன் என்று பெயர் வைக்கிறேன். இன்றுமுதல் நீ என் மெய்க்காவலன்” என்று கூறினாள். அப் பிள்ளை ஒரு தடிக்கம்பை எடுத்துக் கொண்டு காவல் தொழிலை ஆரம்பித்தான். யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சிவன் வந்த பொழுதும் தடுத்து நிறுத்தி விட்டான். சிவபிரான் நான்தான் சிவபிரான் என்று கூறியும், அப்படி யாரையும் எனக்குத் தெரியாது என்று கூறிவிட்டான். சிவபிரான் எவ்வளவு சொல்லியும் அவன் கேளாமையால் அவனை மீறிக்கொண்டு உள்ளே நுழைய முயன்றார். கணேசன் அவரை விட மறுத்துத் தடியால் அடித்துத் துன்புறுத்தினான். உதவிக்கு வந்த நந்தி முதலானவர்களையும் தண்டித்தான். பின்னர் வந்த பிரம்மா, விஷ்ணு ஆகியவர்களையும் அவன் விடவில்லை. ஒரு பெரும் போரே மூண்டுவிட்டது. பிரம்மா முதலியவர்கள் பயன்படுத்திய எந்த ஆயுதமும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் விஷ்ணு ஒரு சூழ்ச்சி செய்தார். தந்திரத்தால்தான் இவனை வெல்ல முடியும். ஆகவே நாங்கள் முன் பக்கம் சண்டை செய்யும் பொழுது பின்புறமாக வந்து இவனை அடக்கினால்தான் உண்டு என்று விஷ்ணு தந்திரம் சொல்லிக் கொடுத்தார். விஷ்ணுவின் சக்கரம் கூடப் பயன்படவில்லை என்று தெரிந்து கொண்டபின் பிள்ளையின் பின்புறம் வந்த சிவன் தன் துலாயுதத்தால் பிள்ளையின் கழுத்தை வெட்டி விட்டார். போர் அமளியில் பிள்ளையின் தலையும் எங்கோ போய் விழுந்து விட்டது.
அப்பொழுது பார்வதி மிக்க கோபத்துடன் தன் பிள்ளையைக் கொன்றவர்களை, தான் பார்க்கவோ மன்னிக்கவோ போவதில்லை என்று முடிவு செய்து இந்தப் பிரபஞ்சத்தையே அழித்துவிடத் தயாரானாள். நாரதர் நிலைமையைப் புரிந்துகொண்டு பார்வதியை சமாதானம் செய்து போருக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். தாம் விதிக்கும் இரண்டு நிபந்தனைகளுக்குச் சிவன் உட்பட்டால் தன் கோபத்தை அடக்கிக் கொள்வதாகப் பார்வதி கூறினாள். என்ன நிபந்தனைகள் என்று நாரதர் கேட்க, பார்வதி பின்வருமாறு கூறினாள்: 1. என் பிள்ளையின் உயிரைத் திருப்பித் தர வேண்டும், 2. சிவ கணங்கள் அனைத்திற்கும் அவனைத் தலைவனாகச் செய்ய வேண்டும். இரண்டு நிபந்தனைகளையும் சிவன் ஒப்புக் கொண்டார். முதல் நிபந்தனையை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. பிள்ளையின் தலை எங்கோ போய்விட்டதால் தேடி எடுக்க முடியவில்லை. உடனே சிவன் தன் உடன் வந்தவனை அழைத்து எந்த ஒரு வடிவத்தை நீ முதலில் சந்திக்கிறாயோ அந்த வடிவத்தின் தலையைக் கொய்து கொண்டு வா என்று கட்டளையிட்டார். அவ்வாறு போன துணைவனுக்கு முதன் முதலில் கிடைத்தது ஒரு யானையின் தலையாகும். அந்த யானையின் தலையை இந்த இளைஞனின் தலையில் பொருத்தி சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரும் கூடி அதற்கு உயிர் உண்டாக்கினர். சிவ புராணத்தின்படி இதுவே கணேசன் பிறந்த கதை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 7 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவன், பிள்ளையின், விஷ்ணு, பார்வதி, வந்த, சிவபிரான், கணேசன், நாரதர், செய்து, கொண்டு, கூறினாள்