முன்னுரை - பகுதி 2 - பதினெண் புராணங்கள்
வேதகாலம் என்பது கி.மு. 1500 முதல் 1000 வரை உள்ள இடைப்பட்ட காலம் என்பர். இன்று இந்தியாவின் வடமேற்கில் உள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் தான் வேதமும், அதில் கூறப்பட்ட சடங்குகளும் பயின்று வந்துள்ளன. கி.மு. 1000 வாக்கில் வேதத்தின் முடிமணியாக உள்ள உபநிடதங்கள் தோன்றலாயின. கதோபநிடதத்தில் காணப்பெறும் நசிக்கேதார் கதை போன்றவை மூலம் தத்துவங்களையும் மெய்ப்பொருளையும் விளக்கும் வழிமுறையை நமது முன்னோர்கள் மேற்கொண்டனர் என்பதை அறிகின்றோம். இந்த அடிப்படையில் தோன்றியவைதாம் புராணங்கள். பதினெண் புராணங்கள் என்று சொல்லப்படுபவை எப்பொழுது தோன்றின என்று அறுதியிட்டுச் சொல்லத்தக்க சான்றுகள் இல்லை. இதில் வரும் பாடல்களுள் சில மிகப் பழைய வடமொழியிலும், பல பாடல்கள் 4, 5ஆம் நூற்றாண்டில் வழக்கத்திலிருந்த வடமொழியிலும் இயற்றப்பட்டுள்ளன. எந்த ஒரு புராணமும் அது தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து வேதங்களைப் போல அப்படியே இன்றும் உள்ளன என்று சொல்லுதற்கில்லை. இவை எந்தெந்தப் பிராந்தியங்களில் தோன்றினவோ அந்தந்தப் பிராந்தியங்களின் பழக்க வழக்கங்களையும் தம்மிடையே கொண்டுள்ளன. இவை பரவப் பரவ இடைச் செறுகல்கள் மிகுதியும் உள்ளே புகுந்தன. ஒரே புராணத்தில் 6,000 பாடல்கள் உள்ளன என்று சிலரும் 12,000 பாடல்கள் உள்ளன என்று சிலரும் கூறுவது இதனால்தான். எந்த ஒரு புராணமும் தோன்றிய பொழுது இருந்த வடிவுடன் இன்றில்லை என்பது தெளிவு. Puranas' என்ற தலைப்பில் சில நூல்களை வெளியிட்டுள்ள திரு. குல்கர்னியின் கூற்றுப்படி எந்த ஒரு புராணமும் ஆதியில் தோன்றிய முறையில் இன்று கிடைக்கவில்லை. மூலநூல் காணாமல் போகவே பிற்காலத்தவர் புதிதாகப் பாடி பழைய பெயரை வைத்து வெளியிட்டுள்ளனர் என்று கூறுகிறார். இதுபற்றி பிரம்மவைவத்தர், இலிங்க புராணங்களின் முன்னுரையில் பேசப்பட்டுள்ளதைக் காண வேண்டும்.
இந்தப் புராணங்கள் பலவற்றிலும் இப்பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபேறு, அழிவு, மறுபடியும் தோற்றம் என்பவை பற்றி விரிவாகப் பேசப்படுவதைக் காணலாம். என்றாலும் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இவை ஒன்றுபோலக் காணப்பட்டாலும், ஒரு புராணத்திற்கு, ஒரு புராணம் இதே விஷயங்களை அதிக வேறுபாட்டுடன் சொல்லிச் செல்கின்றன. எல்லாப் புராணங்களும் ஒரே காலத்தில் தோன்றியிருக்க முடியாது. ஒரே இடத்திலும் தோன்றியிருக்க முடியாது. எனவே இந்தக் காலதேச வேறுபாட்டால் இந்த முரண்பாடுகள் தோன்றியிருக்கலாம் என்று நினைப்பதில் தவறில்லை. இதற்கு அடுத்தபடியாகக் கால அளவைக் குறிப்பிடுவதில் பெரும்பாலும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். கண்ணிமைப் பொழுது, கை நொடிப் பொழுது என்பவை நிமிஷா என்ற பெயரில் பேசப்படுகின்றன. இதில் தொடங்கி ஆண்டுக் கணக்கு வரையில் சென்றுள்ளன. 43,20,000 மனித ஆண்டுகள் கொண்டது ஒரு மகாயுகம் என்றும், 71 மகாயுகம் கொண்டது ஒரு மன்வந்திரம் என்றும், 14 மன்வந்திரம் கொண்டது ஒரு கல்பம் என்றும், ஒரு கல்பம் பிரம்மனுக்கு ஒரு நாள் என்றும் சொல்லப்படும். பிரம்மனுடைய ஒரு நாள் முடிவில் பிரளயம் என்று சொல்லப்படுகின்ற பேரழிவு ஏற்படுகின்றது. பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மறுபடியும் பிரபஞ்ச உற்பத்தி தொடங்குகிறது. இந்தக் காலக் கணக்கில் எல்லாப் புராணங்களும் அதிக வேறுபாடின்றி இக் கருத்தைப் பேசுகின்றன. இந்தப் பொதுத்தன்மை போக, ஒவ்வொரு புராணத்திலும் தனித்தனியாக நூற்றுக் கணக்கான கதைகள் பேசப்படுகின்றன. பெரும்பாலான கதைகள் ஏறத்தாழ எல்லாப் புராணங்களிலும் பயின்று வருகின்றன. என்றாலும் ஒரே கதையாக இருப்பினும் பற்பல சிறிய மாற்றங்களும், சில மிகப் பெரிய மாற்றங்களும் கூட ஒவ்வொரு புராணத்திலும் காணப்படுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முன்னுரை - பகுதி 2 - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, என்றும், புராணமும், பொழுது, கொண்டது, எந்த, எல்லாப், பாடல்கள், இன்று, என்பது, உள்ள, புராணங்கள், ஆண்டுகள்