முன்னுரை - பகுதி 10 - பதினெண் புராணங்கள்
இந்த அடிப்படையைக் கொண்டு பார்த்தால் குப்தர்கள் காலம் நம் கண்முன் வந்து நிற்கிறது. குப்தர்களுக்கு முற்பட்ட காலத்தில் ஹூணர்கள் வடஇந்தியாவின் பெரும் பகுதியைப் பிடித்து ஆண்டனர். அவர்களுக்குப் பிறகு வந்த குப்தர்கள் ஹூணர்களை வென்று அடக்கி இந்து சாம்ராஜ்யத்தை நிலைநாட்டினர். ஹூணர்கள் காலத்தில் மறையத் தொடங்கிய இந்து சமயத்திற்கு ஒரு மறுமலர்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சுருக்கமாக இருந்த புராணக் கதைகளுக்கு வடிவு கொடுக்க குப்தர்கள் முயன்றிருக்க வேண்டும். குப்தர்கள் காலத்தில் சாணக்கியன் முதலான பிராமணர்களுக்கு அளவு மீறிய செல்வாக்கு தரப்பட்டிருந்ததை வரலாற்றில் அறியலாம். அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி குப்தர் காலத்துப் பிராமணர்கள் இப்புராணங்களைப் பழைமையோடு புதிய பல பகுதிகளைச் சேர்த்து விரிவாகப் பாடியிருக்க வேண்டும். புராணங்களுக்குத் தனி மகத்துவம் இருந்தமை யாலும், அதில் சொல்லப்பட்டவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே இருந்ததாலும் எல்லாப் புராணங்களிலும் வர்ணாஸ்ரமப் பகுதி மிகுதியாகப் புகுத்தப்பட்டது.
இவ்வாறு, வடமொழி பலருக்கும் தெரியாத காரணத்தால் எதை வேண்டுமானாலும் அதில் புகுத்தலாம் என்ற நிலை அன்றிருந்தது என நினைக்க வேண்டியுள்ளது. அதேபோல வடமொழியில் உள்ளதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதும் இக்காலத்தில் கூட இத்தகைய தவறுகள் வேண்டுமென்றே செய்யப்படுகின்றன என்பதற்கு ஒர் உதாரணத்தைக் காணலாம். அரசர்களுடைய அவையிலும், முனிவர்களிடையேயும் கூட சூதர்கள் என்ற ஒரு இனத்தவர் உண்டு. இவர்கள் நால்வகை வர்ணத்திலும் சேராதவர்கள். ஒரு பிராமணப் பெண்ணிற்கும், பிராமணர் அல்லாத தந்தைக்கும் பிறந்தவர்களே சூதர்கள் என்றழைக்கப் பட்டவர்கள். வேதவியாசரின் சீடரும், பல புராணங்களை முனிவர்களிடையே புராணப் பிரசங்கம் செய்யும் லோம ஹர்ஷனர் என்ற முனிவரும் சூதரினத்தைச் சேர்ந்தவரே யாவர்.
ஆனால் இந்தச் சூதர்களைப் பற்றிச் சொல்லவரும் திரு. குல்கர்னி தாம் பதிப்பித்த The Puranas’ என்ற நூலின் இரண்டாவது பகுதியில் 41ஆம் பக்கத்தில் சூதர்கள் என்பவர்கள் பிராமணத் தந்தைக்கும் சூத்திரர் இனத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும் பிறந்தவர்கள் என்று கூறுகிறார். இவ்வாறு வேண்டுமென்றே செய்யப்படும் தவறுகளும், அறியாமை காரணமாகச் செய்யப்படும் தவறுகளும் புராணங்களின் ஆராய்ச்சிக்குப் பெரிதும் இடையூறாக உள்ளன.
பதினெட்டுப் புராணங்களைத் தமிழில் சுருக்கி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடன் அநேகமாக எல்லாப் புராணங்களும் மூலநூல் மறைந்துவிட்டபடியால் புதிதாகப் படைக்கப்பட்டன என்று முன்னர் குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழ் நாட்டைப் பொருத்தவரை கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்த புராணம் மிகச் சிறப்புடைய தாகும். உற்பத்திக் காண்டம், அசுர காண்டம், தேவ காண்டம், யுத்த காண்டம் என்ற பகுதிகளையுடைய கந்த புராணத்தை ஸ்காந்தத்திலிருந்து பெறப்பட்டது என்று பலர் கூறுவர். வடமொழி ஸ்கந்த புராணத்தில் முதல் பகுதியில் உள்ள சங்கர சம்ஹிதையில் உள்ள முதற்காண்டமாகிய சிவரகஸ்ய காண்டம் என்ற பகுதியே கச்சியப்பருக்கு மூலமாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முன்னுரை - பகுதி 10 - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேண்டும், காண்டம், காலத்தில், குப்தர்கள், எல்லாப், சூதர்கள்