முன்னுரை - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
இதனையடுத்து விவிலியத்திற் காணப்படும் ஆதாம் ஏவாள் கதை, இயேசுவின் வரலாறு என்பவற்றில் தொடங்கி, விக்டோரியா மகாராணியின் வரலாறு வரை பவிஷ்ய புராணத்தில் இடம்பெறுவது வியப்பைத் தருவதாகும். இடைக் காலத்திலிருந்த முகமதியர்களும், பிற் காலத்தில் வந்த கிறிஸ்தவர்களும் தங்கள் படையெடுப்பை நியாயப்படுத்திக் கொள்ளச் செய்த பல்வேறு சூழ்ச்சி களில் இதுவும் ஒன்றாகும். புராணங்களைப் போலவே வடமொழியில் பாடல்கள் இயற்றவல்ல பிராமணர்கள் முகமதிய, கிறிஸ்தவர்கள் தந்த பொருளுக்காக அவர்களைச் சிறப்பித்துப் பாடி அதை பவிஷ்ய புராணத்திலும் சேர்க்கக் கூடிய அளவிற்குத் துணிந்துவிட்டமையின் புராணங்களும் மதிப்பை இழக்கலாயின.
இப்புராணங்களில் ஒவ்வொருவருடைய ஆயுள், ஆண்ட காலம், சிலர் தவம் இயற்றிய காலம் என்பவற்றைப் பார்க்கும் பொழுது ஒரு மலைப்புத் தோன்றும். ஆயிரம் ஆண்டுகள், பத்தாயிரம் ஆண்டுகள், பதினாறாயிரம் ஆண்டுகள் என வரும் காலக் கணக்கு நம்மைச் சிந்திக்க வைப்பதாகும். பெளராணிகர்களின் உயர்வு நவிற்சி அணியின் பாற்படுமோ என்றும் நினைக்கலாம். வேதத்தில் மனிதனுடைய ஆயுட்காலம் நூறாண்டுகளாகும் என்று குறிக்கப்படுகிறது. பிற்காலத்தில் வந்த ஆழ்வாரும் "வேதநூல் பிராயம் நூறு மணிசர்தாம் புகுவரேனும்” என்று பேசுகிறார். எனவே வேதத்தை ஏற்றுக்கொள்ளுகின்ற இந்தப் புராணங்கள் ஆயிரம், பதினாயிரம் என்று கணக்குப் போடுவதில் ஏதோ ஒரு புதுமை இருக்க வேண்டும். புராண ஆய்வாளர்கள், வர்ஷ என்ற சொல் இப்பொழுது வருடம் என்பதைக் குறிப்பது போல அக்காலத்தில் ஒரு நாளைக் குறித்திருக்கலாம் என்று கருதுகின்றனர். எனவே அதை ஏற்றுக் கொண்டால் ஆயிரம் வருடம் என்பது ஆயிரம் நாட்களாகக் குறுகிவிடும். இந்த முறை தவிர வேறு வழியில் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முன்னுரை - பகுதி 7 - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ஆயிரம், புராணத்தில், ஆண்டுகள், பற்றியும், பவிஷ்ய, புராணங்கள், காலத்தில், இடைச், இடைக்