நாரத புராணம் - பகுதி 15 - பதினெண் புராணங்கள்
கணிக்கா
விஷ்ணுவைக் கும்பிடாத வீடு சுடுகாடு போன்றது. விஷ்ணுவை வணங்காதவர்கள் உயிரோடு இருந்தும் நடமாடும் பிணமே ஆவார்கள். மக்களாகப் பிறந்தும் விஷ்ணுவை வணங்காதவர்கள் அரக்கர்களே ஆவார்கள். விஷ்ணு பக்தி தானாக வருவதில்லை. அந்த பக்தி செய்வதற்குக் கூடச் சிறிது புண்ணியம் செய்திருக்க வேண்டும். முழு மனத்தோடு இல்லாமல் ஒப்புக்கு செய்யப்படும் விஷ்ணு பக்தி கூடச் சிறிதளவு புண்ணியத்தைத் தரும். விஷ்ணு பக்தியினால் கிடைக்கும் சிறிதளவு புண்ணியம் கூட ஒருவன் செய்துள்ள பெரிய பாவத்தைப் போக்கும்.
சத்திய யுகத்தில் கணிக்கா என்னும் ஒரு வேடன் இருந்தான். பிறருக்குத் தீமை செய்வது, பிறர் பொருளைக் கொள்ளையடிப்பது, பிறரைக் கொல்வது போன்ற தீய செயல்களைச் செய்வதும், கோயில் சொத்தைத் திருடுவதும் அவனது வழக்கமாக இருந்தது.
ஒருமுறை செளபிரா என்ற நகருக்குள் வேடன் வந்தான். அங்குள்ள விஷ்ணு கோயிலுக்குள் அவன் நுழைந்தான். தங்கத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் விஷ்ணுவின் எதிரே இருப்பதைக் கண்ட வேடன், அச்சொத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்று முடிவு செய்தான். இரவில் கோயிலைச் சுற்றி வரும்போது யுதங்கர் என்ற முனிவர் அங்கு படுத்திருப்பதைப் பார்த்து அவரைக் காவல்காரர் என்று எண்ணி அவரைக் கொல்வதற்காக அவரது கழுத்தில் கத்தியை வைத்தான். கண்விழித்த யுதங்கர், "அப்பனே! என்னை ஏன் கொல்லப் பார்க்கிறாய்? நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? இவ்வளவு பாவம் செய்கிறாயே, உன் பாவத்தை யார் பங்கு போட்டுக்கொள்ளப் போகிறார்கள்? நீ கொள்ளை அடித்த சொத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் உன் உறவினர்கள் உன் பாவத்தைப் பங்கிட்டுக் கொள்ள மாட்டார்கள்” என்று கூறியவுடன் வேடன் அதிர்ச்சி அடைந்தான்.
உடனே முனிவரைப் பார்த்து, "முனிவரே! தாங்கள் சொல்லிய பிறகுதான் எவ்வளவு பாவங்களை நான் செய்திருக்கிறேன் என்ற பயம் உண்டாகிறது. முன் ஜென்மத்தில் செய்த பாவம்தான் இப்பொழுது வேடனாகப் பிறந்திருக் கிறேன். இந்த ஜென்மத்திலும் நான் செய்தது கணக்கிலடங்கா. இந்தப் பாவங்களைப் போக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? யாரைச் சென்று வழிபட வேண்டும்? எவ்வாறு செய்ய வேண்டும்? எனக்கு விடுதலையே கிடைக்காதா?” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே எல்லையற்ற துயரத்தாலும், கழிவிரக்கத்தாலும் தாக்கப்பட்ட வேடன் அப்படியே இறந்து விட்டான். இறந்தவன்மேல் அதிக இரக்கம் கொண்ட முனிவர், விஷ்ணுவின் திருவடிகளுக்கு அபிஷேகம் செய்த நீர் கையில் இருந்ததால் அந்தப் புண்ணிய நீரை இறந்தவன் உடல்மேல் தெளித்தார். அப்புண்ணிய நீர் மேலே பட்டதால் வேடனுடைய ஆன்மா விஷ்ணுலோகத்தை நோக்கிச் சென்றுவிட்டது.
இங்கு நடைபெற்ற அதிசயத்தைக் கண்டு வியப்பால் வாயடைத்துப் போன யுதங்கமுனிவர் முன் விஷ்ணு தோன்றினார். விரைவில் எல்லாவற்றிலிருந்தும் விடுதலை பெற்று மேலே செல்லக்கூடிய வரத்தை யுதங்கருக்கு அளித்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாரத புராணம் - பகுதி 15 - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விஷ்ணு, வேடன், வேண்டும், புண்ணியம், லோகத்திற்கு, நான், பக்தி, கொள்ள, சென்று, விஷ்ணுவின், பார்த்து