நாரத புராணம் - பகுதி 11 - பதினெண் புராணங்கள்
கார்த்திகை மாதம் சுக்கிலபட்சம் ஏகாதசி அன்று ஒரு கொடியை ஒரு விஷ்ணு கோயிலின் கோபுரத்தின் மேலேயோ, வெளிக்கதவின் மேலேயோ ஏற்றி வைத்து விஷ்ணு பூஜை செய்ய வேண்டும். நூற்றி எட்டு கிண்ணங்களில் பாயசம், மஞ்சள், வாலரிசி, வாசனைப் பூக்கள் ஆகியவற்றை விஷ்ணுவிற்குப் படைக்க வேண்டும். இந்த விரதம் நால்வகை வருணத்தாரும், பெண்களும் மேற்கொள்ளலாம். விஷ்ணுவுடன் சேர்த்துச் சூரியன், சந்திரன், கருடன் ஆகியவர்களுக்கும் பூசை செய்யலாம்.
சுமதி - சத்யமதியின் கதை
சத்ய யுகத்தில் சுமதி என்ற மன்னன், சத்யமதி என்ற தன் மனைவியுடன் இந்த உலகின் ஏழு பிரிவுகளையும் ஆட்சி செய்து வந்தான். நேர்மை, சத்தியம், அன்பு, விருந்தோம்பல் ஆகிய நற்பண்புகளுக்கு இவர்கள் இருவரும் உதாரணமாக இருந்தனர். துவஜா ரோகண விரதத்தை (கொடியேற்று விழா விரதத்தை) இவர்கள் விடாமல் செய்தனர். அந்த விரதத்தின் போது சத்யமதி விஷ்ணு கோயிலில் நடனம் ஆடி வந்தாள்.
ஒருமுறை விபண்டக முனிவர் தன் சீடர்களோடு இவர்களைப் பார்க்க வந்தார். அரசன் செய்த உபசரிப்பில் பெருமகிழ்ச்சி அடைந்த முனிவர் "உன் உபசரிப்பில் மகிழ்ச்சி அடைந்தோம். உன்னிடம் வேண்டிப் பெற வேண்டியது எதுவும் இல்லை. என் மனத்தில் தோன்றிய இரண்டு வினாக்களுக்கு நீங்கள் விடை கூறினால் போதுமானது.
"நீங்கள் ஏன் கொடியேற்று விழா விரதத்தை விடாமல் செய்கிறீர்கள்? உன் மனைவி ஏன் விஷ்ணு கோயிலில் நாட்டியம் ஆடுகிறாள்?”
சுமதி, சத்யமதி ஆகிய இருவரும் ஜதீஸ்மராக்களாக அதாவது பழம் பிறப்பை அறியும் வல்லமை பெற்றவர்களாக இருந்தார்கள். அதன் பயனாக மன்னன் சுமதி, முனிவரிடம் தங்கள் பழம் பிறப்பு வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தான். முற்பிறப்பில் சுமதி மாதுலி என்ற சூத்திரனாகப் பிறந்து எல்லாத் தீய பழக்கங்களுக்கும் உறைவிடமாக இருந்தான். திருட்டு முதலிய குற்றங்களைச் செய்ததால் எல்லோரும் அவனைக் கைவிட்டு விட்டனர். எனவே அவன் காட்டில் சென்று வாழ்ந்து வந்தான். அங்கே ஒர் அழகான குளமும், விஷ்ணு கோயிலும் இருக்கக் கண்டான். அந்த இடம் மிகவும் பிடித்துப் போனதால் அங்கேயே தங்கிவிட்டான். வேட்டையைத் தொழிலாகக் கொண்டு, ஒய்ந்த நேரங்களில் அந்தக் கோயிலைப் பழுதுபார்க்கத் துவங்கினான். கோயிலில் பராமரிப்பு வேலை நடைபெறுவதை அறிவிக்க, கோயிலின் வெளிவாசலில் ஒரு கொடியைக் கட்டினான். இம் முறையில் அவன் வாழ்க்கை நடைபெறும் பொழுது, எதிர்பாராத விதமாகக் கோகிலினி என்ற வேட்டுவப் பெண் அங்கே வந்து சேர்ந்தாள். வேடர் குலத்தவளாயினும் கணவனை இழந்ததால், எல்லாரும் அவளை ஒதுக்கி விட்டனர். இந்த நிலையில் வேடன் இருக்கும் இடம் வந்த அவள் அங்கேயே தங்கி விட்டாள். இருவரும் திருப்பணி செய்த நேரம் போக எஞ்சிய நேரத்தில் குடித்துவிட்டு ஆடினார்கள். விஷ்ணுவின் எதிரே கோகிலினி நாட்டியம் ஆடினாள்.
இம்முறையில் அவர்கள் வாழும் பொழுது அவர்கள் இருவருமே இறந்தனர். அவர்கள் இறந்தவுடன் யமபடர்கள் அவர்களை அழைத்துப் போக வந்தனர். ஆனால் விஷ்ணுவின் பணியாளர்கள் அங்கே வந்து, அவர்கள் விஷ்ணு பக்தர்கள் என்றும், அவன் துவஜா ரோகண விரதத்தைக் கடைப் பிடித்தவன் என்றும், விஷ்ணு கோயிலைப் பழுது பார்த்ததால் அவர்கள் விஷ்ணுலோகம் செல்ல வேண்டியவர்கள் என்றும் கூறினர். இறுதியில் இருவரும் விஷ்ணுலோகம் சென்று எல்லையற்ற இன்பம் அனுபவித்த பிறகு, இப்பிறவியில் சுமதியாகவும், சத்யமதியாகவும் பிறந்தனர். இதுதான் எங்கள் கதை என்று சொல்லி முடித்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாரத புராணம் - பகுதி 11 - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விஷ்ணு, சுமதி, இருவரும், அவன், அங்கே, என்றும், கோயிலில், விரதத்தை, சத்யமதி, கொடியேற்று, விழா