பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
அரக்கனாகிய சங்கதுடன் தேவர்களைக் கொடுமைப் படுத்தினான். பிரம்மன் தலைமை ஏற்று, கிருஷ்ணனைச் சென்று வேண்டினர். அரக்கனுக்குத் தான் கொடுத்துள்ள துளசிமாலை காரணமாக அவனை வெல்ல முடியவில்லை என்றும், தானே சென்று அதனைப் பெற்றுக் கொள்வதாகவும் கிருஷ்ணன் கூறினார். சிவனிடம் ஒரு கோடரியைக் கொடுத்து, அதனைக் கொண்டே, அவ்வரக்கனை அவர் கொல்ல வேண்டும் என்று கூறி, ஒரு பிராமண வடிவம் கொண்டு அவ்வரக்கனிடம் சென்று யாசித்தார். சங்கதுடனின் மனைவி வேறு ஒருவனைத் தன் கணவனாக ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்தால் மட்டுமே, சங்கதுடனுக்கு இறப்பு நேரிடும் என்று பிரம்மன் தான் கொடுத்த வரத்தினைப் பற்றிக் கிருஷ்ணனுக்குக் கூறினார். பிராமண உருவம் கொண்ட கிருஷ்ணன், அவ்வரக்கனிடம் சென்று துளசிமாலையினை தானமாகப் பெற்று, சங்கதுடன் உருவம் எடுத்து அவன் மனைவியாகிய துளசியிடம் சென்றான். தன் கணவன் அல்லன் என்றறியாத துளசியும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள். இத் தருணத்தில் சிவன் சங்கதுடனைக் கொன்றார்.
இதை அறிந்து கொண்ட துளசி கடும் கோபம் கொண்டாள். கிருஷ்ணன் ஒரு கல்லின் உருவம் பெறவேண்டும் என்று சாபமிட்டாள். அதுவே சாலக்கிரமம் என்று வழங்கப் பெறுகிறது. துளசியைப் பலவகையிலும் தேற்றிய கிருஷ்ணன் அவள் தெய்வ வடிவு கொண்டு, வைகுந்த லோகம் சென்று அங்கு கிருஷ்ணனை மணம் புரிவாள் என்றும், மானிட உருவில் உள்ள அவள் மறைந்த கந்தகி என்றும் புனித நதியாகி பரதவர்ஷாவில் ஒடுவாள் என்றும் கூறினார். அவளுடைய தலைமுடி துளசி என்னும் புனிதச் செடியாக வளரும் என்றார். துளசி இலையினைக் கலந்த நீரில் குளித்தால், புனித நதிகளில் நீராடியதால் ஏற்படும் புண்ணியம் கிடைக்கும். துளசிச் செடிக்குப் பல பெயர்கள் உள்ளன. அவை விருந்தா, விருந்தாவனி, விஷ்வபுஜிதா, புஷ்யமயா, நந்தினி, துளசி, கிருஷ்ண ஜீவனி ஆகியவை ஆகும். கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி அன்று, துளசிச் செடியைத் தொழுவது மிகச் சிறப்பானதாகும்.
சாலக்கிரமம் மிகச் சிறப்புடையதாகும். இதனை வணங்குபவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும். சாலக்கிரமம் கிடைத்த நதியினில் நீராடுபவர்கள், எல்லாப் புண்ணிய நதிகளிலும் நீராடிய புண்ணியத்தைப் பெறுகின்றனர். சாலக்கிரமம் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்திலிருந்து நீரைக் குடிப்பவர்கள் வைகுந்த லோகம் செல்வர்.
துளசி இறந்த பிறகு வைகுந்த லோகம் அடைந்தாள். அவளுடைய முடி கந்தகி நதியானது. நாராயணன் கந்தகி நதிக்கரையில் ஒரு மலையாக நின்றார். இம்மலையில் வஜ்ரகிதா என்ற பூச்சிகள் காணப்பட்டன. இப்பூச்சிகளின் பற்கள் கூர்மை உடையனவும், கெட்டியானவையும் ஆகும். ஆதலால் இப்பெயர் வழங்கப்பட்டது. இப்பூச்சிகள் அம்மலையில் காணப்படும் கற்களைத் துளையிடுகின்றன. அவையே சாலக்கிரமம் எனப்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 8 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, துளசி, சென்று, கிருஷ்ணன், சாலக்கிரமம், கூறினார், என்றும், சங்கதுடன், பிரம்மன், அவள், லோகம், கந்தகி, வைகுந்த, உருவம், கொண்டு, அவன்