பாகவத புராணம் - பகுதி 10 - பதினெண் புராணங்கள்
ஒரு காலத்தில் சுவயம்பு மனுவின் மகளாகிய தேவஹ்தியை கர்தமர் என்ற முனிவர் மணந்தார். பதினாயிரம் ஆண்டுகள் சரஸ்வதி நதிக்கரையில், விஷ்ணுவைக் குறித்துத் தவம் இயற்றினார். விஷ்ணு தோன்றி 'உன் மகனாகவே நான் பிறக்கப் போகிறேன்’ என்று கூறினார். இதனிடையே முனிவருக்கும், மனைவி தேவஹ்திக்கும் ஒன்பது பெண்கள் பிறந்தனர். அவர்கள் முறையே கலா, அனுசுயா, சரத்தா, கதி, கியாதி, அருந்ததி, ஹவிர்பு, கிரியா, சாந்தி ஆகியோர். இவர்கள் மார்ச்சி, அத்ரி, அங்கீரா, புலஸ்தியா, புலஹா, கிரது, பிருகு, வசிஷ்டன், அதர்வன் ஆகியோரை மணந்தனர்.
அடுத்து விஷ்ணு பிறக்கப் போகிறார் என்பதால் கர்தம முனிவர் ஒரு சிறந்த இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்துப் பல ஆசைகளோடு வசதியாக வாழக்கூடிய விமானத்தைப் படைத்தார். அந்த விமானத்திலேயே முனிவரும், அவர் மனைவியும் தங்கினார்கள். ஒன்பது பெண்களும் பிறந்து அவர்கள் திருமணம் முடிந்த பிறகு கபிலா என்ற பெயருடன் விஷ்ணு அவதரித்தார். சிலகாலம் கழித்து முனிவர் தீர்த்த யாத்திரை சென்று விட்டார். உலக வாழ்க்கையில் ஈடுபாடு குறைந்த முனிவரின் மனைவி மகன் கபிலாவைப் பார்த்து “உலகப் பற்று என்னை விட்டு நீங்கிவிட்டது. உண்மையான ஞானம் எது என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றாள். தாய்க்கு விளக்கம் கூறும் முறையில் கபிலா ஒரு புதிய சித்தாந்தத்தை எடுத்துக் கூறினார். அதுவே சாங்கிய யோக தத்துவம்' என்று சொல்லப்படும். யோகம் என்பது ஒன்றுடன் ஒன்று பிணைவது என்ற பொருளைத் தரும். ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் இணைப்பதே யோகம் எனப்படும். யோகம் என்பது மகிழ்ச்சி, துக்கம் இரண்டையுமே வெற்றி கொள்வது. மனம் என்பது பொருள்களில் ஈடுபட்டு அவற்றோடு ஒட்டிக் கொள்கிறது. இவற்றிலிருந்து மனத்தைப் பிரிப்பது மிகக் கடினமான காரியம். யோகத்தை வளர விடாமல் தடுப்பது இப்பற்றேயாகும். இந்தப் புறப்பற்றுக்களில் இருந்து விடுபடுவதுதான் முக்கியமாகும். இதற்கடுத்தபடியாக அகங்காரம் என்னும் அகப்பற்றை வெல்ல வேண்டும். ஜீவாத்மாவைப் பரமாத்மாவோடு இணைக்கச் செய்யும் ஒரு வழியே பக்தி எனப்படும் பரப்பிரம்மம் என்பது வடிவு, குணம், உருவம் எதுவும் இல்லாதது ஆதலின் அதை வருணிக்க முடியாது. பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் வேற்றுமை இல்லை என்பதை உணராதவர்கள் பிறந்து பிறந்து உழல வேண்டும்.
கபிலா உபதேசித்த சாங்கிய தத்துவத்தை அறிந்த அவர் தாய்க்குப் பல பற்றுகளும் நீங்கின. இந்த உடம்பு முதலியவை மாயை என்று நன்கு புரிந்தது. சரஸ்வதி நதியின் கரையில் ஒர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு தவம் செய்து வந்தார். கபிலாவின் தாய் தவம் செய்த இடமே இன்று சித்திபாதா என்ற பெயருடன் விளங்குகிறது.
மனுவிற்கு 3 பெண்கள் பிறந்தார்கள் என்றும், அவருள் தேவஹ்தி, கார்தம முனிவரை மணந்தார் என்பதையும் விதுரா நீ அறிவாய். மற்ற இரண்டு பெண்களுள் அகுதி என்பவள் ருச்சி என்ற முனிவரை மணந்து ஒரு பெண்ணையும், ஆணையும் பெற்றாள். அந்த ஆண் பிள்ளை, விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இந்தப் பிள்ளையைத் தாத்தாவாகிய சுவயம்பு மனுவே வளர்த்தார். அகுதியின் மகளாகிய தட்சணாவை விஷ்ணுவே மணந்து, துஷிதாஸ்’ எனப்படும் 12 பிள்ளைகளைப் பெற்றார்.
பிரம்மனின் மகனாகிய தட்சன் மூன்றாவது பெண்ணாகிய பிரசுதியை மணந்தான். இவர்களுக்கு 16 பெண்கள் பிறந்தனர். இவர்களில் 13 பேரை தர்மராஜன் மணந்தார். ஒருத்தியை அக்னிதேவன் மணந்தான். பிதுர்களை ஒருத்தி மணந்தாள். கடைசிப் பெண் சிவனை மணந்து கொண்டாள். தர்மராஜனின் மனைவியருள் ஒருத்தியாகிய மூர்தி இரண்டு முனிவர்களைப் பெற்றாள். அவர்கள் நர, நாராயணன் எனப்படுவர். இவர்கள் இருவரும் விஷ்ணுவின் அவதாரம் எனப்படுவர். அனைவராலும் போற்றப்பட்ட இவர்கள் கந்தமாதன மலையில் தவம் இயற்றினர். தட்சனின் மகளுள் ஒருத்தியான சதி சிவனை மணந்தாள். தட்சன், சிவனை அவமானப்படுத்தியதால் உயிரை நீத்தாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 10 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, என்பது, தவம், யோகம், எனப்படும், மணந்து, சிவனை, கபிலா, வேண்டும், விஷ்ணு, மணந்தார், பெண்கள், இவர்கள், முனிவர், பிறந்து